Thursday 8 December 2011

சீனா தானா டோய்





”கிங்கிசா மங்கீசா, மங்கீசா பாயாசா”

இன்னும் கொஞ்ச வருசத்துல நம்ம புள்ளகுட்டிகளும் நாமளும் இப்படி சைனீஸ் பாஷை பேசி சுத்திகிட்டிருக்கறக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கு மக்களே. புரியலியா? மேற்கொண்டு நம்ம தலையெழுத்த படிங்கோ. சீனா-இந்தியா போர் இன்னும் 10 வருசத்துக்குள்ள எப்ப வேணும்ணாலும் வரலாம்.நம்ப மாட்டிங்களே! இனிமேல் களத்தில் நேரடிப் போர்ல எந்த நாடும் ஈடுபடாதுனு சொல்றவங்க கண்டிப்பா படிங்கோ. மொதல்ல இரு நாடுகளுக்குள்ள போர் வரணும்னா ஏதாவது  பிரச்சனை இருந்தா தான வரும்.சீனாவுக்கும் நமக்கும் அப்பிடி ஏதாது வாய்க்கா தகராறு இருக்கா என கேட்போருக்கு சரத்குமார்,விசயகாந்த்,விஜயகுமார்,வினு சக்கரவர்த்தி,பாலகிருஷ்ணானு எந்த நாட்டாமை வெச்சு பேசினாலும் தீக்க முடியாத அளவுக்கு பிரச்சனை இருக்கு மக்களே.

1) இந்தியாவில் சுதந்திரத்துக்கு அப்புறம் இணைந்த சிக்கிம், அருணாச்சலபிரதேசம் எல்லாம் சீனாவுக்கு சொந்தமானதுன்னு அந்த நாட்டு அரசாங்கம் ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கு. வெறும் பேச்சோட நிப்பாட்றதுக்கு அவங்க என்ன மன்மோகன் சிங் கவர்மெண்டா? சிக்கிம், அருணாச்சல பிரதேச பகுதிகள் எல்லாம் தங்கள் நாட்டோட பகுதி மாதிரி வரைபடம் வெளியிட்டது பெரிய சர்ச்சை ஆனது நினைவிருக்கலாம் (நினைவுல இருக்கா இல்லையானு ரொம்ப யோசிக்காதீங்க.அப்பிடி நியாபகம் வெச்சுக்க இதென்ன ஐசுவர்யா ராய் டெலிவரி டேட்டா?).அதுமட்டுமில்லிங்கோ சிக்கிம் மக்களுக்கு எல்லாம் விசா தேவை இல்ல அவங்க எங்க நாட்டு மக்கள்னு விசா குடுக்காமயே அவங்கள சீனாக்குள்ள அனுமதிச்ச சம்பவங்களும் இருக்கு. இதே மாதிரி காரணத்துக்கு தான் இந்தியா- சீனா 1962 ல அடிச்சுகிட்டாங்க. அப்ப சண்டைக்கு காரணமான பகுதிகள் பேரு காஷ்மிர் பக்கத்துல இருக்கற அக்சின் சின் அப்புறம் அருணாச்சல பிரதேசம். சரியான எல்லைகள தீர்மாணிச்சதுக்கு அப்புறம் சீனா தானாவே போர நிப்பாட்டிடுச்சு.

2) அடுத்தது தலாய் லாமா. இவரு திபெத் நாட்டோட மதத்தலைவர். 1950 ல இருந்து சீனா திபெத்தின் தலாய் லாமா அரசாங்கத்துகிட்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்தி திபெத்துக்கு சுயாட்சி குடுக்கறோம் ஆனா அது எங்க கட்டுப்பாட்டுல இருக்கணும்னு சொன்னாங்க.ரோசக்கார தலாய் லாமா அதுக்கு ஒத்துக்காதனால கலகம் உண்டாச்சு.திபெத்துல இருந்து தப்பிச்சு இந்தியாக்கு வந்து அரசியல் தஞ்சம் அடைஞ்சாறு லாமா. அவருக்கு அடைக்கலம் குடுக்கக் கூடாதுனு சீனா சொல்ல நம்ம அப்பிடித்தான் குடுப்போம்னு கொக்காணி காமிச்சோம். வொய்? தலாய் லாமாவ வெச்சு சீனா திபெத் மேல செலுத்தற ஆதிக்கத்த குறைக்கணும்னு ஒரு இராஜதந்திரம் தான்.  சில வருடங்களுக்கு முன்னாடி சீனாகிட்ட இருந்து சுதந்திரம் கேட்டு திபெத் புத்த பிக்குகள் இந்தியாவில போராட்டம் நடத்தினாங்க.

 இது இரண்டும் வெளிப்படையான காரணங்கள் இது போக மாபெரும் அபாயம் இருக்கு அத கடசில பாப்போம்.

சரி இந்த காரணமெல்லாம் இருக்கட்டும் போர் இப்பவே வரும்னு எத வெச்சு சொல்றோம்னா அதாகப்பட்டது உலகமயமாக்கலுக்கு முன்னாடி நாடுகளுடைய வலிமைங்கிறது அவங்க கையில எவ்வளவு அளவு நிலம் இருக்கு,படைபலம் என்ன? போரை சமாளிக்கத் தேவையான தளவாடங்கள் இதப் பொறுத்து தான் இருந்துது. தங்களுடைய செலவுக்கு தேவையான பொருட்கள தங்களுக்கு கீழ அடிமையா இருந்த நாடுகள் கிட்ட கொள்ளையடிச்சுகிட்டாங்க.உதாரணத்துக்கு நம்ம கிழக்கிந்தியக் கம்பெனி மாதிரி.அதனாலதான் எல்லா நாடுகளும் போட்டி போட்டு சண்டை பண்ணி நிலப்பரப்புகள ஆக்கிரமிச்சாங்க.2 உலகப் போர்கள் நடந்து முடியற வரையும் அதற்கு பின்னான காலங்களும் இப்படித் தான் இருந்துச்சு. உலகமயமாக்கலுக்கு பின்னாடி அதாவது நீ எங்கிருந்து எங்க வேணாலும் போயி வியாபாரம் பண்ணி யார் குடிய வேணும்னாலும் கெடுக்கலாம்னு உலக நாடுகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஓ.கே சொன்னதுக்கு அப்புறம் எல்லா நாட்டுலயும் இருக்கற மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தங்களோட பொருட்களுக்கு புதிய புதிய சந்தைகள தேடி மற்ற நாடுகள் கூட ஒப்பந்தம் போட ஆரம்பிச்சாங்க. அதனாலதான் அமெரிக்காவில என்னென்ன குப்பை கூளம் எல்லாம் பயன்படுத்தறங்களோ அதெல்லாம் நம்ம மக்களுக்கும் சுடச்சுட கிடைக்க ஆரம்பிச்சது.இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து இப்ப ஒரு நாட்டோட பொருளாதாரம் அதோட வெளிநாட்டு சந்தை அளவைப் பொறுத்து தான் அமையுது. இன்னிக்கு சர்வதேச அளவுல இந்தியாவ முதல் பெஞ்சுல உட்கார வெக்கறதுக்கு காரணம் அதோட மாபெரும் சந்தையும், என்ன சொன்னாலும் தலை ஆட்டும் அரசாங்கமும் தான்.அதுக்கு மேல நமக்கு மரியாதை கிடையாது. சரி இதுக்கும் சீனா போர் தொடுக்கவும் என்ன சம்பந்தம்? அத கடைசியா சொல்றேன்.

கடந்த சில வருடங்களா இந்தியா சீனாவோட எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய மாற்றம் நடந்துகிட்டிருக்கு.அவை...
1) சீனா அதன் எல்லைப் பகுதியில பிரம்மாண்டமான சாலைகள் எக்கச்சக்கமா கட்டிகிட்டிருக்குனு சமீபத்துல உதறலா ஒரு அறிக்கை வந்துச்சு. ஒரு நாடுன்னா ரோடு போடத்தான் செய்யும்னு சொல்றேளா? அவங்க ரோடு போடுறது மக்கள் வசிக்கிற நகரங்களில் இல்ல. ஆள் அரவமே இல்லாத இந்திய எல்லையோர மலைப் பகுதிகள்ல கட்டுறாங்க.இராணுவத்துக்கு தேவையான பொருட்கள கொண்டு போறதுக்கு தான் இந்த சாலைகள்னு சொல்லித் தெரிய வேண்டியதில்ல.
2) இந்திய எல்லை நெடுக கண்காணிப்பு கோபுரங்கள் கட்டி அதுல சீன இராணுவத்த நிறுத்தி வெச்சிருக்காங்க.அது எதுக்குனு தெரியும்ல?
3) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ல விஜயகாந்த் மீட்டது போக மிச்ச பகுதி எல்லாத்தையும் சீனாக்கு குத்தகைக்கு விட்டுடுச்சு பாகிஸ்தான்.அங்க இருந்தபடி சீனா தனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க.
4) இந்தியாவ சுத்தி இருக்கிற பாகிஸ்தான், பர்மா, இலங்கை எல்லாம் இப்ப சீனாவோட நட்பு நாடுகள்.போர்னு வந்தா இவங்க சீனா கூடத்தான் பழம் விடுவாங்க.
5) இந்தியாவோட கடுமையான பாதுகாப்போட இருக்கற இராணுவ கணிணிகள்ல பொறியியல் வல்லுனர்கள வெச்சு திருட்டுத் தனமா நுழைஞ்சு பல முக்கிய இரகசியங்கள ஆட்டயப் பொட்டிருக்காங்க.
 இதெல்லாம் நான் சொல்லலீங்கோ. நம்ம உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னாருங்கோ.

இப்ப மேல விட்ட மேட்டருக்கு வருவோம். சீனா இந்தியா மேல போர் தொடுக்க அருணாச்சல பிரதேசமோ, தலாய் லாமோவோ வெறும் வெளிப்படையான காரணங்கள் தான்.அதுக்கும் மேல முக்கியமான காரணம் இந்தியாவோட சந்தை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் இந்திய சந்தைய பிடிக்க துடியா துடிக்கறாங்க.அதுக்கு மத்திய அரசும் உறுதுணையா இருக்கு ஒரே ஒரு உதாரணம்-FDI. காரணம் இங்க மக்கள் எதுக்கு வேணும்னாலும் செலவு பண்ணுவாங்க.தனக்கு ஒரு பொருள் பிடிச்சிருந்தா அது தேவையில்லன்னா கூட வாங்கக் கூடிய பணக்காரங்களும், உயர் நடுத்தர வர்க்கமும்; ஒரு பொருளோட தரத்த அதோட விளம்பரத்த வெச்சு முடிவு பண்ற கீழ் நடுத்தர வர்க்கமும் இணைந்து புளங்கற இந்திய பொருளாதாரம் அவங்க வியாபாரத்துக்கு அட்சய பாத்திரம். உலகத்தின் பொருளாதார வல்லரசுகளா இருக்கற நாடுகள் எல்லாம் தடுமாறிட்டிருக்கற சமயம் சீனாவுக்கு உலக வல்லரசா மாற அதாவது அமெரிக்காவோட இடத்த பிடிக்க இது மிகச்சரியான தருணம். இந்தியாவோட சந்தை இப்ப அமெரிக்கா கையில இருக்கு அது சீனாவோட கைக்கு மாறினா பொருளாதார ரீதியா சீனா உலகத்துல அசைக்க முடியாத சக்தியா மாறிடும்.அதுக்கு இந்திய அரசு சீனாவுக்கு அடிபணிய வேண்டி இருக்கும்.அதுக்கு ஒரே வழி போர் தான்.சீனா போற வேகத்த பாத்தா அது எப்ப வேணும்னாலும் வரலாம்.

போர் வந்தா என்ன ஆகும்?
இந்தியா கிட்ட பெரிய படை இருக்கு சீனா வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைக்கறீங்களா? ஏற்கனவே சொன்ன மாதிரி இந்தியாவின் அண்டை நாடுகள் எல்லாம் சீனா பக்கம் இருக்கறதால எந்நேரமும் சீனாவுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்.சுருக்கமா சொன்னா ரவுண்டு கட்டி அடிப்பாய்ங்க.
சரி இந்தியாவுக்கு ஃபிரண்ட்ஸ் இல்லையா? சாமி சத்தியமா இல்லீங்க. ஏன்னா போர்ல இந்தியாவுக்காக களம் இறங்குற அளவுக்கு நெருக்கமான நாடுகள் எதுவுமே இல்லைங்கிறதுதான் உண்மை. அமெரிக்கா இருக்குல்லனு மீசைய முறுக்காதீங்க. தன்னோட மிக மிக மிக மிக மிக நெருக்கமான நாடான இங்கிலாந்துக்கு கூட அமெரிக்கா எப்ப உதவி செஞ்சுது தெரியுமா? பிரிட்டன் சிக்கி சேதாரமானப்ப பாசத்துல பாய்ஞ்சு போகல.முதல் உலகப் போர்ல தன்னோட போர்க் கப்பல் தாக்கப்பட்டு கவிழ்ந்தப்பவும், இரண்டாம் உலகப் போர்ல பியர்ல் ஹார்பர் தாக்கப்பட்டப்பவும் தான் வேட்டிய மடிச்சு கட்டிட்டு போனாங்க. சொந்த பங்காளி பிரிட்டனுக்கே இந்த நிலைமைனா நாலு விட்ட பங்காளியான நமக்கு என்னாகும்? பெப்பரப்பே தான்... 1962 சீனா போர் நடக்கறப்ப நம்ம பிரதமர் நேரு மாமா போர் விமானங்கள் வேணும்னு கேட்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுக்கு கடிதம் எழுதுனாரு.அதெல்லாம் குடுக்க முடியாதுன்னு கைய விரிச்சுட்டாரு நிக்சன்.அதுக்கு அப்புறம் தான் சோவியத் ரசியா கிட்ட இந்தியா நெருக்கம் காட்ட ஆரம்பிச்சுது. போர் வந்தா இந்தியாவோட பொருளாதாரம் எந்தளவுக்கு பாதிப்படையும்னு எல்லாருக்கும் தெரியும் நம்ம போரில் வென்றாலும் அந்த பொருளாதார சுமைல இருந்து மீள்றதுக்கு ரொம்ப ஆண்டுகள் ஆகும்.அந்த சுமை எல்லாம் நம்ம தலைல தான் விடியும். இந்த ஊழல் தலைவர்கள வெச்சு இப்பவே சமாளிக்க முடியலியே அப்படி ஒரு நிலைமை வந்தா என்னாகும்? போர்ல தோத்துட்டா? பெருசா ஒண்ணும் இல்ல வீதிக்கு வீதி சீனா நிறுவனங்கள் தான் இருக்கும்.மட்டமான சீனா பொருட்கள வாங்க வேண்டி இருக்கும்.அதுக்கு அவன் சொல்றதுதான் விலை. FDI மாதிரி எத்தனை ஒப்பந்தங்கள நீட்டுனாலும் பதில் பேசாம கையெழுத்து போட வேண்டி இருக்கும்.மொத்ததுல சங்கிலியில கட்டாத சீன அடிமைகளா இருப்போம்.
அப்படி போர் வந்தாலும் முதல்ல அடிபடப் போறது தமிழன் தான்.ஏன்னா நமக்கு 30 மைல் தொலைவில் இருக்குற இலங்கை சீனாக்கு திக் ஃபிரண்டு.இலங்கைக்கு இந்தியா கொடுக்குற பணம் எல்லாம் ராஜபக்‌ஷே வாய்குள்ள போயிட்டிருக்கு அதே சமயம் சீனா அங்க கடற்படைத் தளங்கள் கட்டிட்டிருக்காங்க.கப்பல தூக்கிட்டு வந்தான்னா குண்டு விழுகப்போறது தமிழ்நாட்டுல தானுங்கோ! அப்பவே இலங்கைக்கு உதவி பண்ணாதிங்கடான்னு சொன்னமே சொன்னமே அவனுங்க கேட்கலியே!!!

பின்குறிப்பு: 13.12.11 அன்று வெளியான செய்தி இந்திய பெருங்கடலில் உள்ள செசலிஸ் என்கிற தீவில் சீனா தன் கடற்படை தளத்தை கட்டி முடித்துள்ளது.அதற்கு சீனா சொல்லும் காரணம் ”கடற்கொள்ளையர்களைப் பிடிக்க இந்த தளம் பயன்படும்”. இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் நடுவில் இந்த தீவு உள்ளது.

No comments:

Post a Comment