Monday 19 December 2011

வஞ்சம்-பகுதி 4


                                                              பகுதி 4- சதிவலை   





முட்டாள்த்தனமா எதுக்கு அவங்கள அங்க கூட்டிட்டு போன?” அப்துல் நாசர்.
நானா கூட்டிட்டு போகல.ஏதோ வேலை இருக்குன்னு அட்ரஸ டிரைவர்ட்ட குடுத்துட்டாங்க.அங்க போனதும் என்ன பண்றதுன்னு எனக்கே தெரிலகிறிஸ்டி.
“தெரிஞ்சிருக்குமா?” அப்துல் நாசர்
“இருக்கலாம்” கிறிஸ்டி
“எப்படி சொல்ற?”
“அந்த கடைக்காரன் என்ன பார்த்து அவங்ககிட்ட ஏதோ சொன்னான்.அவங்க அதிர்ச்சியா என்ன பாத்தாங்க.தெரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கறேன்”
“ப்ச்…” பெருமூச்சு விட்டு தலையில் கை வைத்தபடி வேகமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தார் கிறிஸ்டியின் நெருங்கிய நண்பரான அப்துல் நாசர் ”இப்ப அவங்க எங்க?”
“கீழ ரூம்ல தூங்க சொல்லிட்டு வந்துட்டேன்.ரூம் செர்வீஸ் ல காஃபி ஆர்டர் பண்ணிருந்தாங்க.நம்ம வேலு தான் எடுத்துட்டு போனான்.அதுல தூக்க மாத்திரை கலந்திட்டேன்.காலையில எந்திரிக்க நேரமாகும்.அதுக்குள்ள மத்தவங்களும் வந்திடுவாங்க.” கிறிஸ்டி
“சரி காலையில அவங்க முட்டாள்த்தனமா ஏதும் செய்யறக்கு முன்னாடி நாம முந்திக்கணும்” கிறிஸ்டியை அறைக்கு செல்லச் சொல்லிவிட்டு அப்துல் நாசர் தன் தொலைபேசியில் யாருக்கோ அழைத்து நாளை காட்டுப் பாதையில் அனைவரும் தயாராய் இருக்கும்படி அறிவுருத்தினார்.

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த அழுகை வறண்டு விட மனிதனின் ஒரே அழுக்காத  சுகமாய் உள்ள தூக்கத்தில் ஹரிணி ஆழ்ந்திருந்தாள்.அவளுக்கு ஆதரவாய் தோள் கொடுத்திருந்த ஐசுவர்யாவும் தூங்கியிருந்தாள்.விக்கி,ஹரிணி,ஐசுவர்யா மூவரும் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்காடு மலை சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

முற்பகல் வெய்யில் கூட மெல்லிய கீற்றாய் படர்ந்திருந்தது.சிவாவையும், சுதாகரையும் கைபேசியில் அழைக்க விக்கி முயற்சித்துக் கொண்டிருந்தான்.வெகுநேரம் அழைப்புமணி அடித்தும் இருவரும் எடுத்துப் பேசாதது அவனுள் கலக்கத்தை ஏற்படுத்தியது.இன்னும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் இல்லையேல் ஏதேனும் முக்கியமான வேலையாக இருப்பார்கள் என சமாதானப்படுத்திக் கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை.ஜன்னல் வழியாக மலைகளின் மேனியெங்கும் வேரூன்றிய பச்சை வெள்ளத்தை இரசிக்க முயன்றான்.
மலைமுகடுகளின் இடுப்பு வரை தேயிலைத் தோட்டங்கள் மாபெரும் புல்வெளியைப் போல இருந்தது.உச்சிப் பகுதியில் அடர்ந்து படர்ந்திருந்த மரங்கள் பார்வைக்கு குளிரூட்டியது.பனியோடு மிதமான குளிரும் சூழலின் ரம்மியமும் மனதை போதையேற்றியது.இயற்கையின் இந்த அழகிய பிரமாண்டத்திற்கு துருஷ்டி வைக்கப்பட்டது போல ஓரிடத்தில் மட்டும் மலை உச்சிக்கு சற்று கீழே பொட்டு வைத்தது போல ஒரு பெரிய வட்டம் நெருப்பும் புகையுமாய் எரிந்து கொண்டிருந்தது.

“அதென்ன காட்டுத் தீயா?” விக்கி ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்தான்.
“இந்த சீசன்ல எல்லாம் காட்டுத் தீ வராது தம்பி.இது பண்டிசால்காரனுங்க வேலையா இருக்கும்” ஓட்டுனர்.
“பண்டி…..?” புரியாமல் விழித்தான்.
“பண்டிசால்காரனுங்க தம்பி.பீகார்ல இருந்து வந்த நாடோடி கூட்டம்.30 வருசத்துக்கு முன்னாடி அவங்க ஊர்ல பஞ்சம்னு சொல்லிட்டு பொழப்புக்காக வந்தானுங்க.மலை மேலயே தங்கிட்டானுங்க.கொள்ளையடிக்கிறது,கொலை பண்றது இந்த மாதிரி வேலை தான் அவங்க குலத் தொழிலே.சிலசமயம் மரதையெல்லாம் விக்கறதுக்காக வெட்டிட்டு இந்த மாதிரிதான் தீ வெச்சுட்டு போயிடுவானுங்க.ஃபாரஸ்ட் ஆபீசர்கள எல்லாம் எக்கசக்கமா கவனிச்சுடுவானுக.இவனுகளுக்காக இந்த டிரான்ஸ்ஃபர் கேட்டு எத்தன பேர் முண்டியடிக்கறாங்க தெரியுமா? எல்லாம் நேரம் தம்பி”
‘’இவங்க ஆள்கடத்தல் எல்லாம் செய்வாங்களா?” விக்கி
“சிலசமயம் செய்வானுங்க” ஓட்டுனர்

பஷீரை இவர்கள் கூட கடத்தியிருக்கலாம் என்று மனக்கணக்கு போட்டாலும் எங்கோ பெங்களுரில் இருக்கும் முகம் தெரியாத பொறியாளரை இந்த ஆளுங்க வந்து எதுக்கு கடத்தப் போறாங்க? அப்படின்னா பஷீர் இங்கே வர என்ன காரணமாயிருக்கும் என சிந்தனை சிறகு விரிக்கும் முன்னரே கைபேசி அலறியது.சிவா அழைத்தான்.
“இவ்ளோ நேரம் என்னடா பண்ணிட்டிருந்தீங்க? மணி 11 ஆகுது.ஹரிணி தொல்லை பொருக்க முடியாம நாங்க காலைல நேரத்துல கிளம்பிட்டோம்” அவசரத்தில் பேசிவிட்டதால் பின்னே திரும்பி ஹரிணி இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என உறுதிப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தான்.
“இப்ப தான்டா எந்திரிச்சோம்.இப்ப எங்க இருக்கீங்க?” சிவா
“இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்போம்” விக்கி
“ப்ச்… சரி பரவால்ல.நான் சொல்றதுக்கு உம் னு மட்டும் சொல்லு.வேற ஏதும் பேசாத” சிவா
“உம்” விக்கி  
“குட், இங்க இருக்கற ஈவண்ட் மேனேஜர் கிறிஸ்டிக்கும் பஷீர் காணாம போனதுக்கும் தொடர்பு இருக்கு.எதுக்காக இப்படி பண்றான்னு தெரில.அவன்ட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.ஐசுவர்யா,ஹரிணிய உன் கூடவே வெச்சுக்க எங்கயும் தனியா விட்றாத.ராத்திரியே உங்களுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்லலாம்னு நினைச்சோம் அதுக்குள்ள காபில எதையோ கலந்து எங்கள தூங்க வெச்சிட்டான் நாயி ” சிவா
“உம்”
“பத்திரமா இங்க வந்திடுங்க.யார்ட்டயும் அதிகமா பேச்சு குடுக்க வேணாம் மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்”
“உம்”
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏதோ பொறி வலைக்குள் மாட்டிக் கொண்ட எலிகள் போலத் தான் இருந்தனர்.அடுக்கடுக்காய் விடைக்கு ஆதி கூட புலப்படாத பல கேள்விகள் மூளையை துளைத்தது.என்ன நடக்க போகிறது? என்ன நடந்தது? என்பதற்கான வரைபடத்தில் சிறுபுள்ளி மட்டுமே தென்படுகிறது.இரு பெண்களை கூடவே வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கப் போகிறது.வண்டி லீ கிராண்ட் உண்வகத்தின் பிரமாண்ட கதவுகள் வழியே நுழைந்தது.வாசலில் சிப்பந்திகளிடம் பேசிக் கொண்டிருந்த ஜோனத்தன் கிறிஸ்டி வண்டி எண்ணைப் பார்த்ததும் கையில் சிரிப்பும் வாயில் பொக்கேவுமாக வந்து வரவேற்க நின்றான்.தூக்கம் கலைந்து எழுந்த ஐசுவர்யாவும்,ஹரிணியும் கேசத்தை சரி செய்து கொண்டு இறங்கினர்.மூவருக்கும் தனித்தனியே பொக்கே குடுத்து கிறிஸ்டி வரவேற்றான்.
“என் பேர் ஜோனத்தன் கிறிஸ்டி.உங்க ஈவண்ட் மேனேஜர்.பயணம் நல்லாயிருந்துதா?”
அவன் பேரைக் கேட்டதும் விக்கி உஷாராணான்.இவனிடம் அதிகம் பேச வேண்டாம் சிவா,சுதாகரைப் பார்த்த பின்பு இவனை கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான்.
“ரொம்ப நல்லாயிருந்தது.சரியான இடத்துக்கு கரக்டா வந்துட்டோம்” கிறிஷ்டியின் கண்களைப் பார்த்து அழுத்தமாக விக்கி சொன்ன இந்த பதிலை எதிர்பார்க்காத கிறிஷ்டி சற்று தடுமாறினாலும் புன்னகையை சுருக்காமல் சமாளித்துக் கொண்டான்.
“ஹரிணி,ஐசுவர்யா 2 பேரும் ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு ரெடியா இருங்க.நான் சிவாவ பாத்துட்டு வரேன்” இருவரிடமும் சொல்லிவிட்டு கிறிஷ்டியிடம் தங்கள் அறையைப் பற்றி கேட்டான்
“ஜெண்ட்சுக்கு 3 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 203, லேடீஸ் கு 2 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 110” கிறிஸ்டி.
“சார் இது என் கணவர் பஷீர்.கொஞ்ச நாள் முன்னாடி காணாம போயிட்டார்.நேத்து இந்த ஊர்ல இருந்து தான் ஃபோன் பண்ணினார்.நீங்க எங்காவது பாத்திருந்தா தயவு செஞ்சு சொல்லுங்க சார் ” பஷீரின் புகைப்படத்தை கிறிஸ்டியிடம் கொடுத்து கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“அழாதீங்கம்மா நீங்க குளிச்சு ரெடி ஆயிடுங்க நானே உங்கள கூட்டிட்டு போறேன்.ஊரையே கவுத்து போட்டு கண்டுபிடிச்சுடலாம்” கிறிஸ்டியின் வார்த்தைகளால் விக்கி எரிச்சல் அடைந்தான் இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “கவலைப்படாத ஹரிணி சார் தான் சொல்லிட்டாருல்ல அவர புடிச்சா பஷீர் கிடச்ச மாதிரி தான்” என்றான்.கிறிஸ்டியின் முகம் சுருங்கியது.
மூவரும் உள்ளே சென்றதும் திட்டத்தை விரைவுபடுத்த அப்துல் நாசரைத் தேடி முதல் தளத்திற்கு கிறிஸ்டி ஓடினான்.
நண்பர்கள் மூவரும் மொட்டை மாடியில் சந்தித்தனர். ஹோட்டலின் சிப்பந்திகள் அனைவரும் கிறிஸ்டிக்கு நெருக்கம் என்பதால் பாதுகாப்பாக பேச மொட்டை மாடிக்கு வந்தனர்.
“என்னடா ஆச்சு? கிறிஸ்டிதான் கடத்துனானா?” விக்கி பதைபதைத்தான்.
“அவன் மட்டும் இல்ல இன்னும் 2 பேர் இருக்கானுங்க” மாடியின் விளிம்பில் அமர்ந்தபடி சிவா விளக்கமளிக்கத் தொடங்கினான்.
“அவந்தான்னு எப்பிடி கன்ஃபார்மா சொல்றீங்க?” விக்கி
“பஷீர் நமக்கு ஃபோன் பண்ணினான்ல அங்க விசாரிச்சப்ப தெரிஞ்சுது.நீ போலீசுக்கு சொல்லிட்டு தான வந்த?” சுதாகர்.
“சொல்லத்தான் போனேன் இன்ஸ்பெக்டர் வெளியூர்ல இருக்காராம் அதனால அங்க ஏட்டு கிட்ட சொல்லிட்டு வந்தேன் அவங்க எதும் பெரிசா எடுத்துகிட்ட மாதிரி தெரில”
விக்கியின் பதிலில் இருவரும் ஏமாற்றமடைந்தனர்.
“ம்… அப்ப நாம இங்க லோக்கல் போலீசுலதான் பேசணும்.ஹரிணிக்கு சொல்லிட்டியா?” சிவா.
“ம்… அப்புறம்… அப்படியே ஒரு கத்தியையும் அவ கையில குடுத்துட்டம்னா நேரா போயி கிறிஸ்டிய குத்தி கொன்னுடுவா அப்புறம் எல்லா காரியமும் வெளங்கிடும்.அவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடக் கூடாதுன்னு தான் எதும் சொல்லல.ஆனா பாவம்டா அவ அந்த நாய்கிட்ட போயி கெஞ்சிட்டிருந்தா ” விக்கி.
“சரி இப்ப நாம என்ன செய்யறது?” சுதாகர்
“நேரா போலீசுக்கு போறோம் இந்த பயல அப்படியே பொளக்கறோம்” விக்கி
“லூசு மாதிரி பேசாதடா, இவன் கூட இன்னும் 2 பேர் இருக்கானுங்க.பஷீர் வேற எங்க இருக்கான்னு தெரில,அவன எதுக்காக கடத்திருக்காங்கன்னும் தெரில.நாம போலீசுக்கு போனத தெரிஞ்சு பஷீர ஏதாவது பண்ணிட்டாங்கன்னா?.மொதல்ல பஷீர கண்டுபிடிக்கனும் அப்புறம் இவனுங்கள கவனிச்சுக்கலாம்” சிவாவின் தெளிவான திட்டத்துக்கு இருவரும் தலையாட்டினர்.

அதே நேரம் பெண்களின் அறையில்….

“இந்நேரம் சிவா பஷீர் இருக்குற எடத்த கண்டுபிடிச்சுருப்பாரு.உதவிக்கு கிறிஸ்டி வேற இருக்காரு அப்புறமென்ன எல்லாம் நல்லபடியா முடியும் ஹரிணி” ஜன்னல் வழியாக சாலையை பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியிடம் பேச்சுக் கொடுத்தாள் ஐசுவர்யா.
கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் கதவருகே சென்றனர்.
“யாரு?” ஐசுவர்யா.
“நாந்தான் கிறிஸ்டி”
                                 -காத்திருங்கள்

No comments:

Post a Comment