Saturday 28 January 2012

நானும் கடவுள்





பிள்ளைகளின் மரணம்
நடுரோட்டில் இரத்ததால்
குதறப்படும் குடும்பங்கள்
உலகம் கண்டுகளித்த
இனப்படுகொலைகள்
கொடூரர்களின் ஆட்சி
முன்ஜென்ம பாவங்கள்
ஏதுமறியா அகால மரணங்கள்
போராளிகளின் வீழ்ச்சி
விவசாயிகளின் கண்ணீர்
ஏழைகளின் வயிற்றடுப்பு
பணம் பணமென
பேயாய் அலையும் பதர்கள்
தீயின் நாக்குக்கு
தவறாது பலியாகும் குடிசைகள்(மட்டும்)
பிஞ்சுகளை சிதறடிக்கும்
குண்டுகள்
அப்பாவிகளை நோக்கியே
நீளும் ஆயுதங்கள்
காமத்திற்கு இரையாகும்
பால்முகங்கள்
கழுத்தறுக்கப்பட்ட கனவுகள்
இவற்றைக் கண்டு
நாணாதவன் கடவுளெனில்
நானும் கடவுள்...

Wednesday 25 January 2012

காமம் பிழையா?




காமம் என்றால்
காதை பொத்தும் கனவான்களே...
சற்று பொத்திய காதை திறவுங்கள்
உயிரின் பிறப்பு
இயற்கையின் புதிப்பிப்பு
சேர்க்கையின்றி வாழுமோ உலகு?
ஆதி முதல்
ஆணும் பெண்ணும்
உன் சாத்திரங்கள் கண்டா
கூடினர்?
ஒழுக்கமென்று பசப்பி
உணர்வை கொல்ல
நீ யார்?
கற்பு நெறியும்
ஒழுக்க விதியும்
உனக்கான இரையை
உறுதியாய் பற்றிக்கொள்ளத் தானே?
காதலென்னும் வெற்று மொழி
அதற்கு புனிதமென்னும் கோட்டை...
கேடிலும் கேடு...
உணர்வு கொண்டு
கூடுதல் மட்டுமே இயற்கை...
காதல்
ஒழுக்கம்
கற்பை
உன் சாத்திரங்களோடு சேர்த்து
நெருப்பில் வீசு
உணர்வுக்கு தலைவணங்கும்
புதிய சமூகம் மலரட்டும்!!!
இப்படிக்கு
ஆதிமனிதன்.

இப்படி ஒரு கவிதை எனது...
நல்லவேளை
இதுவரை எதிலும் பிரசுரமாகவில்லை
எழுதிவைத்து 4 வருடங்கள் இருக்கும்
எரித்துக் கொண்டிருக்கின்றேன்
ஏனெனில்
நேற்றெனக்கு
திருமணமாகிவிட்டது...
இப்படிக்கு
குடும்பஸ்தன்...

Monday 23 January 2012

வஞ்சம்-பகுதி 8

பகுதி 8 - அன்றோர் காலம்



தட்டுடன் நடந்து சென்றவள் தான் சற்று முன் உப்பரிகையிலிருந்து விழுந்தவள் என தெரிந்ததும் ஐவரும் திடுக்கிட்டனர்.நீரில் மூழ்க இருந்த தங்களை வழிகாட்டி அழைத்து வந்த அவளை பின்தொடர்ந்தனர்.யாரையோ தேடிக் கொண்டு அவள் ஒய்யாரமாக நடந்து சென்றாள்.முகமெங்கும் பருவத்தின் உற்சாகமும்,துள்ளலான புன்னகையும் அவளின் அழகை மென்மேலும் மெருகூட்டியது.இதற்கு முன் தாங்கள் இதே அரண்மனையில் கட்டப்பட்டு கிடந்த பொழுது இவ்வளவு பொலிவுடன் இந்த அரண்மனை இல்லை.ஆங்காங்கே இடுப்பில் வேட்டியும்,தலையில் முண்டாசும் கட்டிய பணியாட்கள் தரை,சுவர்,சிலைகள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.முறுக்கேரிய உடம்பும்,காது வரை படர்ந்த மீசையும்,அகலமான தொடைகள் தெரியும்படி முறுக்கிக் கட்டிய வேட்டியும்,கையில் ஆளுயர வேலும்,இடுப்பில் குறுவாளும் கொண்டு ஆங்காங்கே காவல் வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர்.யாருமே இவர்கள் ஐவரையும் கவனித்ததாகத் தெரியவில்லை.இவர்கள் அங்கு இல்லாதது போலவே அவரவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.ஐவரும் மிகுந்த குழப்பத்துக்குள்ளாயினர்.என்ன நடக்கிறது இங்கே? நாம் முன்பு பார்த்த மாதிரி இந்த இடம் இல்லையே? எப்படி இத்தனை பேர் திடீரென வந்தனர்? நம்மையும் யாரும் கண்டுகொள்ளவில்லையே? எல்லாவற்றிற்கும் நம்மை அழைத்து வந்த பெண்ணை பிடித்தால் தான் விடை தெரியுமென அவளை நெருங்க முயன்றனர். ஊஹும் அவளைத் தொட முடியவில்லை சீரான இடைவெளியில் அவள் பின்னே செல்ல முடிந்ததே தவிர நெருங்க முடியவில்லை.என்ன நடக்கின்றது என கவனிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது...

200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த காட்சிகளை ஐவரும் பார்வையாளராய் கண்டனர்
”திருநங்கை” துள்ளலாய் சென்று கொண்டிருந்த இளம்பெண் சோமசுந்தரம் தாத்தாவின் குரலுக்கு திரும்பினாள்.திருநங்கை 15 வயதே பூர்த்தியான பட்டாம்பூச்சி.அந்த அரண்மனைக்கே அழகு சேர்க்கும் நங்கை.அவள் இட்ட சொல்லை கட்டளையாய் செய்வது தான் அங்கிருக்கும் வேலையாட்களின் முதல் பணி.திருநங்கைக்கு தாய்,தந்தை இல்லை.சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர்.தாத்தாவின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறாள்.சோமசுந்தர தாத்தா திருநங்கையுடைய தாத்தா ராஜசிவத்தின் நீண்ட கால நண்பர்.இருவருடைய குடும்பமும் 4 தலைமுறைகளாக நெருக்கம்.பெருத்த உடல்,சிவந்த நிறம்,தளர்ந்த நடை கொண்டு வெளுக்காத வேட்டியும்,சட்டையும் போட்டுக் கொண்டு பாசமாய் பேசும் சோமசுந்தர தாத்தாவை திருநங்கைக்கு மிகவும் பிடிக்கும்.தன்னுடைய தாத்தாவிடமாவது அவளுக்கு கொஞ்சம் பயமிருக்கும் ஆனால் சோமசுந்தர தாத்தாவிடம் எந்த பயமுமின்றி சகஜமாய் பழகுவாள்.
“என்ன தாத்தா?” தவளும் புன்னகையுடன் பாந்தமாய் கேட்டாள் திருநங்கை.
“சமையல் பண்ணுறவங்க எல்லாரும் இன்னைக்கு மதியத்துக்கு உனக்கு என்ன செய்யட்டும்னு கேட்டுகிட்டே இருக்காங்களாமே நீ எதுமே சொல்ல மாட்டேங்குறியாம் அவங்க வேலை ஆரம்பிக்கணும்லமா ஏதாவது சொல்லுடா கண்ணு” திருநங்கையின் கன்னம் தடவி கேட்டார் சோமசுந்தர தாத்தா.
தன்னை போன்ற சின்னப் பெண்ணின்  கட்டளைக்காக காத்திருக்கும் வேலையாட்களை நினைத்து சிரிப்பு மேலிட்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல்”எத வேணாலும் செய்ய சொல்லுங்க தாத்தா” என சொல்லி விட்டு சிட்டாக விரைந்தாள்.
”எங்கடா கண்ணு போற?”
”தாத்தாவ பாக்க போறேன்” திரும்பாமல் பதில் சொன்னாள்.
 ”இரும்மா நானும் வரேன்” இருவரும் சேர்ந்து ராஜசிவ பூபதியை காண சென்றனர்.
அவளுடைய தாத்தா ராஜசிவ பூபதி தான் இந்த அரண்மனைக்கே அதிபதி.அவருக்கு சொந்தமாக இந்த மலையை சுற்றியுள்ள மலை கிராமங்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தால் தரப்பட்டிருந்தது.அதன் மூலம் வரும் வருமானத்தில் அவர் ஒரு குறுநில மன்னர் போல அரசாண்டு வந்தார்.லண்டனுக்கு சென்று படித்து சிறுவயதிலேயே பல முனைவர் பட்டங்களைப் பெற்றவர் ராஜசிவ பூபதி.ஆறடி உயரம்,பாதி முகம் மறைக்கும் கலையாத வெள்ளை தாடி,பட்டுடை உடுத்தி மிடுக்காக அவர் நடந்து வந்தால் சத்தியமாய் 60 வயதென யாரும் சொல்ல மாட்டார்கள்.தன் மகளையும்,மருமகனையும் பெயர் தெரியாத வியாதிக்கு பலி கொடுத்து விட்டு பேத்தியை இளவரசி போல செல்லம் கொடுத்து வளர்த்து வருகிறார்.இப்பொழுது தோட்டத்தில் தன்னுடைய அந்தரங்க உதவியாளன் விஜயசேகரனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்.

விஜயசேகரன் ராஜசிவத்துடைய தூரத்து உறவினன்.23 வயதான இளைஞன்.5 1/2 அடி உயரமும், கருத்த நிறமும்,கட்டான உடல்வாகும் கொண்டவன்.வெளிநாட்டுக் கல்வி இல்லாவிடினும் உள்ளூரில் பயின்று பல நூல்களை கற்றுத் தேர்ந்தவன்.ராஜசிவத்தின் ஆராய்ச்சிக்கு உதவியாய் இருப்பானென கருதியதால் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.தீர்க்கமான சிந்தையுடையவன் எந்த விடயமாக இருந்தாலும் தடுமாறாமல் செயல்படும் ஆற்றல் உடையவன்.ஆராய்ச்சியின் போது சிக்கலான விடயங்களில் எளிதாக தீர்வு கண்டுபிடித்த இவனின் ஆற்றலை பலமுறை ராஜசிவம் பாராட்டியும்,வியந்துமிருக்கிறார்.கல்வியறிவு மட்டுமின்றி வாள்வீச்சிலும் வல்லவன்,வேலை எறிந்தால் ஆலமரத்தை கூட பிளந்துவிடும் ஆற்றல் படைத்தவன்.உடன் யாருமில்லாத அந்த தோட்டத்தின் தனிமை தங்களுடைய ஆராய்ச்சியை பற்றி பேச ஏதுவான இடமென்பதால் காலாற நடந்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

”நேத்து நீங்க பண்ணினது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல” விஜயசேகரன் ஏதோ மனக்கலக்கத்துடன் தலைகுனிந்தபடி கூறினான்.

”எத சொல்ற சேகரா?” அவன் பேசப்போகும் விசயம் அவருக்கு தெரிந்துதான் இருந்தது.

“நீங்க கிட்டதட்ட 10 வருசமா ஆராய்ச்சி பண்றீங்க.நான் 5 வருசமா உங்களுக்கு உதவியா இருக்கேன்.இந்த ஆராய்ச்சில நாம 2 பேரும் காட்ற ஆர்வம்,அக்கறைய விட ரெவரண்ட் ஃபெர்னாண்டஸ் எவ்ளோ அக்கறையா இருக்காரு.நாம சில சமயம் துவண்டு போனா கூட அவர் எத்தன முறை நமக்கு உதவிருக்காரு.அவர் கிட்ட நீங்க இப்படியா பண்றது?” நேற்று மாலையிலிருந்து அடக்கி வைத்த கோபத்தையெல்லாம் பொங்கித் தீர்த்தான்.

ராஜசிவம் பதில் எதுவும் சொல்லாமல் பரிகாசமாய் உதட்டோரத்தை இழுத்து லேசாக புன்னகைத்தார்.இந்த அலட்சியம் விஜயசேகரனை மேலும் ஆத்திரமூட்டியது சற்று பலமாகவே பொங்கினான்.

“அவர் என்ன அவ்வளவு சாதாரண ஆளா? அவர் ஒரு வார்த்தை சொன்னா இந்த ஜில்லாவே நடுங்கும்.அவரோட கட்டளை ஒண்ணு போதும் இந்த நாட்டொட எந்த மூலையையும் இல்லாம பண்ணிடுவாரு.ஆனா உங்க கிட்ட மட்டும் எவ்வளவு கனிவா இருக்காரு அதுக்கு காட்ற நன்றி தானா இது? இத்தன நாளா செஞ்ச ஆராய்ச்சிகள எல்லாம் அவர்கிட்ட இருந்து மறைச்சுட்டு ஏதோ சின்ன புள்ளைகளுக்கு வேடிக்கை காட்ற மாதிரி சின்ன விசயங்கள காட்டிட்டு அவர ஏமாத்திட்டீங்க.பாவம் மனுசன் ரொம்ப நொந்திருப்பாரு” ரொம்பவே வேதனைப்பட்டான். 


”ஆமா ஆராய்ச்சிக்கு காசு குடுக்கறவன் எதிர்பார்க்குற அளவு ரிசல்ட் கிடைக்கலனா நோகத்தான் செய்வான்.இட்ஸ் நேச்சுரல்” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் ராஜசிவம்.

”எனக்கு தெரியும் நீங்க நேத்து அவர்கிட்ட காமிச்சதெல்லாம் வெறும் சின்ன சின்ன வேலைகள் அதுக்கு மேல நிறைய செஞ்சீங்களே அதெல்லாம் ஏன் அவர்கிட்ட காமிக்கல.இதெல்லாம் நன்றி கெட்டத்தனமா தெரியல?” விஜயசேகரன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

’’கொஞ்சம் மூச்சு விடு விஜயா” அவரின் அலட்டலில்லாத உட்பொருள் பொதிந்த பதிலோடு ஏதோ சொல்லப் போகும் பரவசம் அவரிடம் இருந்தது. ”உனக்கு சில விசயங்கள் நேரம் வரும் போது தெரிஞ்சா போதும்னு நினைச்சேன்.ஆனா அது எதையும் உனக்கு தெரியப்படுத்தாம போயிடுவனோனு எனக்கு பயமா இருக்கு.அதனால இப்ப உனக்கு தெரிய வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்றேன் கேளு.ரெவரண்ட் ஃபெர்ணாண்டஸ்ஸ 30 வருசத்துக்கு முன்னாடி நான் லண்டன்ல படிச்சுட்டு இருந்தப்ப இருந்தே தெரியும்.அந்த சமயம் லண்டன்ல அவர் சர்ச்சோட சமயப் பள்ளில படிச்சிட்டிருந்தாரு அவரோட மதத்துல தீவிர பற்று கொண்டவரு.எப்படியாவது உலகம் முழுக்க தன்னுடைய மதத்த பரப்பணும்னு ஆசைப்பட்டவரு.என்னோடயும் பல தடவ விவாதம் பண்ணிருக்காரு.எனக்கு அவரோட தீவிரமான பற்று பிடிச்சிருந்தது.அதே நேரம் நான் பாரானார்மல் சயின்ஸ்ல முனைவர் பட்டத்துக்காக படிச்சுட்டு இருந்ததால என்னோட ஆராய்ச்சி முடிவுகள் அவருக்கு பயன்படும்னு என்னோட நட்பாயிட்டாரு.படிப்பு முடிச்சதும் நான் இந்தியாவுக்கு திரும்ப வந்துட்டேன்.ஆராய்ச்சி,ஆராய்ச்சினு செலவு பண்ணி அரண்மனைய கவனிக்காம விட்டதால கடன் தலைக்கு மேல போயி 10 வருசத்துக்கு முன்னாடி என்னோட ஜமீன் சொத்துக்கள் எல்லாம் வெள்ளையர்கள் கைக்கு போயிடுச்சு.என் மகள்,மருமகன்,பேத்தி எல்லாரும் நடுத்தெருவுக்கு வந்துட்டோம்.அப்ப ஃபெர்னாண்டஸ் இந்தியாவுல மாபெரும் மதத்தலைவர். எப்படியோ என்ன தேடிபுடிச்சு வந்து பார்த்தாரு.என்னோட நிலைமைய புரிஞ்சுகிட்டு அரசாங்கத்து கிட்ட என்னுடைய அரண்மனை மட்டுமில்லாம,10 மலை கிராமங்களும் எனக்கு குடுக்க வெச்சாரு.அதுக்கு பிரதிபலனா என்னை பாரானார்மல் சயின்ஸ்ல ஆராய்ச்சி செய்ய சொன்னாரு”

“பாரானார்மல் சயின்ஸா? நீங்க ஆவிகள பத்திதான ஆராய்ச்சி பண்றீங்க?” விஜயன்.

”ஆமா.அதுவும் ஒரு சயின்ஸ்தான்.நார்மலா நடக்குற ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட சயிண்ஸ்.இட்ஸ் டோட்டலி டிஃபெரெண்ட்” ராஜசிவம் தன்னுடைய ஆராய்ச்சிய ஆழத்தை உள்ளூர சிலாகித்து மேம்போக்காய் பதில் சொன்னார்.

”இவ்ளோ நாள் வேலை வாங்கினீங்க அப்பப்போ ஏதாவது இத்துனூண்டு சமாச்சாரம் மாயமந்திரம் மாதிரி சொல்லி குடுத்தீங்க.இப்ப தான் தெரியுது நீங்க எங்கிட்ட இதுவர எதுவும் சொன்னதில்லனு.அவர் உங்களையும் உங்க ஆராய்ச்சியையும் காப்பாத்தறக்கு தான எல்லாம் செஞ்சாரு அவர் கிட்ட ஏன் மறைக்கனும்?” விஜயனுக்கு அவரிடம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.

”நான் கண்டுபிடிச்ச விசயங்கள தெரிஞ்சுகிட்டா உனக்கு தலை வெடிச்சுடும்” என சொல்லிவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த்து மெல்ல சிரித்தார் “நீ மட்டுமில்ல இந்த உலகமே என்னை நோக்கி படையெடுக்கும் அதுக்கு முன்னாடி இந்த கண்டுபிடிப்ப பாதுகாக்கனும்.இத உனக்கு படிப்படியா புரிய வெச்சு இத உலகத்தின் புதிய சக்தியா உருவாக்கனும்.அதனால தான் யாருக்கும் இத பத்தி நான் சொல்லல.இன்னும் ஃபெர்னாண்டஸ்க்கு கூட நான் என்ன செய்யறேன்னு தெரியாது.அவனுக்கு என் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு.அவன் முழிக்கறக்கு முன்னாடி நாம வேகமா செயல்படணும்”

”என்னமோ சொல்றீங்க.ஆனா எனக்கு சுத்தமா புடிபடல” விஜயன் சலித்துக்கொண்டான்.

”அது...” ராஜசிவம் ஏதோ சொல்லத் தொடங்கும் பொழுதே தூரத்தில் திருநங்கையும், சோமசுந்தர தாத்தாவும் வந்து கொண்டிருந்தனர்.ஆகையால் உரையாடலை உடனடியாக நிறுத்தினார்.துள்ளி வந்த நங்கை தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

”என்னமா மாப்பிள்ளை முன்னாடி இப்படி உட்காரலாமா?” விஜயசேகரனை மாப்பிள்ளையென விளித்து நங்கையை கேலி செய்வது சோமசுந்தர தாத்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

”இந்த கருவாயன யார் கட்டிப்பா?” இடது கையை காற்றில் இடமும் வலமுமாய் ஆட்டி பல்லை கடித்துக் கொண்டு விரிந்த இதழ்களுடன் கேலியாய் அவள் சொன்ன அழகில் சொக்கித்தான் போனான் சேகரன்.இருப்பினும் அவள் அழகுக்கு தான் பொருத்தமானவன் இல்லை என அவனுக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை உண்டென்பதால் அவன் என்றைக்கும் தன் ஆசையை வெளிப்படுத்தியதில்லை.

”ஓகோ... அம்மனிக்கு கரடு மாதிரி நல்லா தின்னு கொழுத்த வெள்ளைக்கார துரைய கூட்டி வரேன்.மாட்டு கறி,பன்னி கறினு சீதனம் கொடுத்து கட்டிக்குங்க ”  அவனும் தன் அன்பை பரிகாசத்தில் மறைத்தான்.
                                                                                                             -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்தவற்றை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்...

வஞ்சம்


Saturday 21 January 2012

மூன்றே நாளில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

என் இனிய தமிழ் மக்களே நம்ம ஊர்ல இருந்து வெளிநாட்டுக்கு போக கடவுச்சீட்டு அதாங்க பாஸ்போர்ட்டு ரொம்ப ரொம்ப முக்கியம்னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அதுமில்லாம அது பல இடங்கள்ல ஒரு அடையாள சான்றா பயன்படுத்திக்கலாம்.அந்த பாஸ்போர்ட் எடுக்கறது பெரிய வேலை,ரொம்ப செலவாகும்,ரொம்ப நாளாகும்னு நினக்கறவங்களுக்கெல்லாம் 3 நாள்ல எப்படி பாஸ்போர்ட் எடுக்கறதுன்னு சொல்றதுதான் இந்த பதிவு.என்னது 3 மணிநேரத்துல ரெடி பண்ணிருவீங்களா? அலோ நான் ஒரிஜினல் பாஸ்போர்ட்ட பத்தி பேசறனுங்க...



1) முதல்ல பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் போடனும்ல அதுக்கு மிக எளிதான வழி இணைய வழில போட்றதுதான்.மருத்துவ அவசரநிலை,நெருக்கடியான நிலை தவிர மத்த நேரங்கள்ல நேரடி விண்ணப்பங்கள ஏத்துக்க மாட்டோம்னு இணையத்துல போட்டுருக்காங்க.விண்ணப்பிக்க முதல்ல www.passportindia.gov.in என்கிற இணையதளத்துக்குள்ள நுழைங்க.

2) ஃபேஸ்புக்குல அக்கவுண்ட் வெச்சிருக்குற மாதிரி இதிலயும் அக்கவுண்ட உருவாக்கனும்.பயனர் பெயர்(username),கடவுச்சீட்டு(password) எல்லாம் மறக்காம நினைவுல வெச்சிக்குங்க.

3) APPLY FOR A FRESH PASSPORT அப்படிங்கற ஒரு தேர்வு முதல் பக்கத்துல இருக்கும் அத தேர்ந்தெடுங்க.

4) விண்ணப்பத்த நிரப்பறக்கு முன்னாடி கவனிக்க வேண்டிய விசயம் நீங்க என்னென்ன சான்றிதழ்கள குடுக்க போறீங்களோ அதுல இருக்குற விவரங்களுக்கும் விண்ணப்பத்துல போட்ற விவரங்களுக்கும் முட்டல் மோதல் இல்லாம பாத்துக்கங்க.பெயரொட எழுத்துக்கள் கூட மாற கூடாதுங்க.ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு கடவுச்சீட்டு அலுவலகம் இருக்கும் அத சரியா தேர்ந்தெடுங்க.

5) பல கட்டங்களைக் கொண்ட ஒரு விண்ணப்ப படிவம் வரும்.அத பொறுமையா நிரப்புங்க.முகவரிய தெரிவிக்கும் பொழுது சரியான முகவரிய போடுங்க.சின்ன வீடா? பெரிய வீடா?னு குழப்பத்துல தப்பு தப்பா அடிச்சறாதீங்க.

6) இந்த விவரத்த நிரப்புறதுல முக்கியமான விசயம் REFERENCE FOR ADDRESSனு கேட்டிருப்பாங்க அதுல உங்களுக்கு தெரிஞ்ச பக்கத்து வீட்டுகாரங்களோட பெயர்,முகவரி,தொலைபேசி எண் குறிப்பிடனும்.கல்லூரி விடுதில தங்கிருக்குற மாணவர்கள் விடுதி முகவரிய தற்காலிக முகவரிங்கற இடத்துல குடுத்துட்டு REFERENCE கு உங்க லோக்கல் கார்டியன் பெயர குடுங்க.

7) வாக்காளர் அடையாள அட்டை எண் கேட்டிருப்பாங்க அதையும் குடுத்துட்டீங்கன்னா இனிதாக விண்ணப்பம் முழுமையா முடிஞ்சுடும்.நீங்க விண்ணப்பத்த பூர்த்தி செய்யறப்ப மின்சாரம் புஸ்ஸாச்சுன்னா கவலைபடாதீங்க நீங்க பாதில நிப்பாட்டினா கூட எப்ப வேணாலும் விட்ட இடத்துல இருந்து ஆரம்பிக்கலாம.

8) அடுத்துதான் முக்கியமான விசயம்.விண்ணப்பத்த மட்டும் பூர்த்தி பண்ணிட்டா பாஸ்போர்ட்ட குடுத்துட மாட்டாங்கோ.நேர்முக விண்ணப்ப பரிசீலனை நடக்கும் (இண்டர்வியூ).அதுக்கு நாம ஒரு அப்பாயின்மெண்ட் நேரத்த தேர்ந்தெடுக்கனும்.விண்ணப்பம் பூர்த்தி ஆனப்புறம் உங்க அக்கவுண்ட திறந்து பாத்தா MANAGE MY APPOINMENTனு ஒரு தேர்வு இருக்கும் அதுல போயி உங்களுக்கான தேதியும் நேரத்தையும் தேர்ந்தெடுக்க போனீங்கன்னா உடனே கிடைச்சுடாது.இத்தனை தேதி சாயங்காலம் 6 மணிக்கு வாங்க அப்பதான் அப்பாயின்மெண்ட் தருவோம்னு இணையதளம் சொல்லும்.உதாரனத்துக்கு 30.1.2012,6 PM க்கு தான் அப்பாயின்மெண்ட் குடுப்போம்னு சொல்லுச்சுன்னு வெச்சிக்கங்க நீங்க 5.55 கே அக்கவுண்ட திறந்து வெச்சு உட்கார்ந்துக்கங்க.சரியா 6 மணிக்கு திறந்து உடனே அப்பாயின்மெண்ட்ட போட்டுடுங்க.ஒரு தேதி தான் இருக்கும் அதுல காலை 9 மணில இருந்து மாலை 4 மணி வரை நேரம் குடுத்திருப்பாங்க.உங்களுக்கு வசதியான நேரத்த உடனே தேர்ந்தெடுங்க ஏன்னா இதெல்லாம் தேர்வு செஞ்சு முடிக்கறக்கு உங்களுக்கு 5 நிமிஷம்தான் கிடைக்கும் அதுக்குள்ள அப்பாயின்மெண்ட் காலி ஆயிடும்.அதுக்கு மேல காலண்டர்ல நல்ல நேரம் பாத்துட்டு உட்காந்திருந்தா இன்னும் 3 நாள் கழிச்சு வாங்கனு சொல்லிடும்.

9) கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு போகறக்கு முன்னாடி நீங்க சமர்பிக்க போற சான்றிதழ்கள் (DATE OF BIRTH PROOF,ADDRESS PROOF,BONAFIDE IF STUDENT,IF THERE IS TEMPORARY ADDRESS PROOF FOR THE SAME) எல்லாத்துலயும் உங்க பேரோட ஸ்பெல்லிங்,முகவரி எல்லாம் சரியா இருக்கானு பாருங்க.சின்ன பிழை இருந்தாலும் தூக்கி கடாசிடுவாங்க.எதுக்கும் ஒவ்வொன்னுக்கும் 2 சான்றிதழ் எடுத்து வெச்சிக்குங்க.சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு பிரதி எடுத்து அதுல நீங்க கையெழுத்தும் போட்டு வெச்சிக்கனும்.வங்கி கணக்கு புத்தகம் மட்டும் பத்தாது பேங்க் ஸ்டேட்மெண்டும் அது கூட இருக்கனும்.10th அல்லது 12th மதிப்பெண் சான்றிதழ் முக்கியம்.

9) அப்பாயின்மெண்ட் கிடைச்சதும் உங்களுக்கு APPLICATION RECEIPT கிடைக்கும் அத பிரதி எடுத்து வெச்சிக்கங்க.அத காட்டினாதான் உள்ள விடுவாங்க வாட்ச்மேனுக்கு சம்திங் குடுத்தெல்லாம் உள்ள போக முடியாது.

10)  உங்களுக்கு அப்பாயின்மெண்ட் இருக்கற தேதிக்கு,குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடியே போய் உட்காந்துக்கங்க.உங்க நேரத்துக்கு உங்கள உள்ள விடுவாங்க.

11) உள்ள போனதும் 4 அல்லது 5 கவுன்டர் இருக்கும் அதுல ஏதாவது ஒரு வரிசைல நில்லுங்க.அங்க இருக்குற ஒரு தம்பியோ இல்ல பாப்பாவோ (பாஸ்போர்ட் அலுவலகம் எல்லாம் இப்ப TCS கைல இருக்கு அதனால எல்லாரும் சின்ன பசங்களா தான் இருப்பாங்க) இருக்கும்.அவங்க கிட்ட உங்க APPOINMENT RECEIPT,சான்றிதழ்களோட அசல்,பிரதி எல்லாத்தையும் குடுங்க.அவரு அதுல நொல்ல,நொட்டையெல்லாம் பார்த்து எதெது சரிபட்டு வரும்னு பாத்துட்டு உள்ள போனா இந்தாளு பாஸ் பண்ணிடுவாருன்னு தோனிச்சுனா ஒரு டோக்கனும்,உங்க சான்றிதழ்கள ஒரு கோப்புல போட்டும் குடுப்பாங்க.அத பத்திரமா வெச்சிக்கங்க.காத்திருப்பு அறைக்குள்ள உட்காரச் சொல்லுவாங்க.அசல் சான்றிதழ் உங்க கைல குடுத்திருவாங்க அத அடுத்த கட்டங்கள்ல கேட்கும் போது மட்டும் குடுங்க.

12) இதுக்கப்புறம் நீங்க A,B,C என 3 இடத்துல நேர்முக பரிசிலனை நடத்துவாங்க.ஒவ்வொன்னையும் முடிச்சாதான் பாஸ்போர்ட்டு கிடைக்கும்.காத்திருப்பு அறைல கலர் கலரா TCS பொன்னுங்க இருப்பாங்க அவங்களையெல்லாம் பாக்காம அங்க இருக்குற டி.வி ய மட்டும் கன் மாதிரி பாக்கணும்.அதுல தான் டோக்கன் எண்கள் போடுவாங்க.உங்க எண் முதல்ல A கவுன்டர்ல வரும்.குடுகுடுனு ஓடிப்போய் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கவுன்டர்ல உட்கார்ந்துக்கங்க.அங்கயும் TCS பணியாளர் தான் இருப்பாங்க.அவங்ககிட்டயும் எல்லா சான்றிதழ்களையும் குடுங்க.உங்கள புகைப்படம் எடுப்பாங்க அதனால தலைய சீவிட்டு மூஞ்சிய துடைச்சிட்டு போய் உட்காருங்க.ரூ.1000 பணம் கேட்பாங்க அதயும் குடுங்க (தட்காலுக்கு ரூ.1500). உங்க விண்ணப்பத்த திறந்து அதுல எல்லா விவரங்களும் சரி பார்பாங்க.அதுல நீங்க கடலை போட்றக்காக எக்கச்சக்கமா பேசி மாட்டிக்காதீங்க.ஏன்னா ஏதாது சின்ன மாறுதல் இருந்தாலும் குடைஞ்செடுப்பாங்க.

13) இவங்க கிட்ட தப்பிச்ச பிறகு அடுத்த அறைல டி.வி பாருங்க.B கவுன்டர்ல உங்கள கூப்பிட்டதும் போங்க.அவங்கதான் மத்திய அரசோட சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர்.அவங்களும் உங்க விண்ணப்பம்,சான்றிதழ் எல்லாம் சரிபார்த்துட்டு கையெழுத்து போடுவாங்க.

14) அடுத்து இதே மாதிரி C கவுன்டர் அவர் தான் பெரிய ஆபீசர்-பாஸ்போர்ட் குடுகறவரு அவரும் எல்லாம் பாத்துட்டு பொன்னான கையெழுத்த போட்டு குடுப்பாரு.

15) பிரதிகளையும்,ஆபீசர்கள் கையெழுத்து போட்ட கோப்பயும் கடைசி கவுன்டர்ல குடுத்தீங்கன்னா அந்த புள்ள எல்லாத்தையும் வாங்கிட்டு ஒரு கடுதாசி குடுக்கும் அத பத்திரமா எடுத்துகிட்டு ஊருக்கு கிளம்பி போங்க.

16) 15 நாள் கழிச்சு உங்களுக்கு காவல் நிலையத்துல இருந்து அழைப்பு வரும்.அங்க போய் சுத்துபட்டு 18 பட்டில உத்தமபுத்திரன் நாந்தானுங்கனு சொல்லிட்டு அப்படியே முகவரிக்கான சான்றையும் காமிச்சுட்டு வந்திருங்க.

17) இன்னொரு 15 நாள் கழிச்சு உங்க வீடு தேடி பாஸ்போர்ட் தபால்ல வரும்.உங்க கைல மட்டும்தான் குடுப்பாங்க அதனால நீங்க எங்காவது கொலை கிலை பண்ணிட்டு தலைமறைவா இருந்தா நேரடியா தபால் அலுவலகத்துல போய் வாங்கிக்கங்க.

என்னடா 3 நாள்னு சொல்லிட்டு மாசக்கணக்குல இழுக்கறானேன்னு பாக்கறீங்களா.விண்ணப்பிக்க ஒரு நாளு,நேர்முகத் தேர்வுக்கு ஒரு நாளு, காவல் நிலையத்துல ஒரு நாளு ஆக மொத்தம் மூணு நாளு எப்புடீ....
திட்டறதுன்னா தாராளமா கீழ திட்டிட்டு போங்க...

Thursday 19 January 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை

வணக்கம் வாழவைக்கும் சென்னைனு மெரினா படத்துல ஒரு பாட்ட போட்டு அத டி.வி ல போட்டாங்க.சென்னைல வாழ்ற ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கு ஏத்தபடி சென்னை பத்தின ஒரு பார்வை இருக்கு.நான் 2 வாரத்துக்கு முன்னாடி சென்னை போனேன் எனக்கும் சென்னை பத்தி சில பார்வைகள் இருக்கு.ஏனோ தெரில சென்னை என்னை ஈர்க்கல.நான் பார்த்த சில விஷயங்கள எழுதறேன் அவ்ளோதான்...



சென்னைல சாயுங்காலம் மாநகர பேருந்துல போறது எவ்வளவு பெரிய அனுபவம்னு அரிதா போறவங்களுக்கு தான் தெரியும் அடிக்கடி போறவங்க அதையெல்லாம் பொருட்படுத்தறது இல்ல.நானும் நண்பனும் எங்க ஊர் நியாபகத்துல கடைசில இருக்குற நீளமான இருக்கைல நாங்க 2 பேரும் இன்னும் சில ஆண்மகன்களும் உட்கார்ந்தோம்.ஒரு 4 நிறுத்தம் தள்ளி ஒரு 40 வயசு ஆண்டி ஏறுனாங்க.நேரா எங்ககிட்ட வந்து “கொஞ்சம் எந்திருக்கறீங்களா”னு கேட்டாங்க.அப்புறம் தான் தெரிஞ்சுது இடது பக்கம் இருக்கற இருக்கைகளெல்லாம் பொம்பளைங்களுக்காம். (இந்த ரூல்செல்லாம் யாருய்யா போட்டது? )அமைதியா எந்திரிச்சோம்.2 ஆண்டிங்க எங்க இடத்துல உட்கார்ந்தாங்க.கொஞ்ச நேரத்துல இன்னும் 2 பெண்கள் வந்து அடுத்த 2 ஆண்கள எழுப்பிவிட்டுட்டாங்க.இடது பக்கம் இருக்கற சீட்டுகள் (அதாவது கடைசி சீட்டுல பாதி) எல்லாம் பெண்கள்தான் உட்காந்தாங்க.அதெல்லாம் பரவால்லங்க அடுத்து வலது பாதில இருக்குற 2 பேர எழுப்பிவிட்டு 2 பெண்கள் உட்காந்துட்டாங்க.நாங்க பெண்ணுரிமை பயங்கரமா வேலை செய்யுது போலனு நினைச்சோம்.அந்த கடைசி சீட்டுலயும் 2 பசங்கதான் இருந்தாங்க.நாங்க கூட்டத்துல பிழியப்பட்டுகிட்டு இருந்தோம்.அந்த ஸ்டாப்புல ஏறுன ஒரு காலேஜ் பொண்ணு உடனே அந்த 2 பசங்க கிட்ட போய் “எந்திரிங்க”னு சொல்லி துரத்தி விட்டுடுச்சு.அவங்க பேசாம எந்திரிச்சு வந்துட்டாங்க.இப்ப கடைசி சீட்டு முழுசுமே பெண்கள்தான் அதுலயும் அந்த காலேஜ் பொண்ணு உட்கார்ந்த கையோட கைபேசிய எடுத்து கடலை போட ஆரம்பிச்சுருச்சு.இறங்கற வரைக்கும் செம வறுவல் ஓடுச்சு.இதுக்குதான் பசங்கள எழுப்பிவிட்டாங்களானு நினைக்கும் போது செம கடுப்பா இருந்துச்சு.இவிங்க ஜாலியா ட்ராவல் பண்ண அப்பாவி பசங்க தான் கிடைச்சாங்களா? மொதல்ல ஆணுரிமைய மீட்டெடுக்கனும்யா...





அடுக்குமாடி கட்டடங்கள் எல்லாம் சென்னைல பளபளனு இருந்துச்சு இன்னும் நிறைய பிரமாண்ட கட்டிட வேலைகளும் நடந்துட்டிருந்துச்சு.ஆனா ஒரே ஒரு தகர கூரை, இரண்டு கைய பக்கவாட்டுல நீட்டுனா இடிக்கற அளவுக்கு இடம்,கிடைச்சத எல்லாம் வெச்சு ஒப்பேத்தி வெச்சிருக்கிற 4 சுவர்.இதுதான் பெரும்பாலான சென்னை வாசிகளுக்கெல்லாம் வசிப்பிடமா இருக்கு.தூக்கம்,வாழ்க்கை,பிறப்பு,இறப்பு,பூப்படைவது,காதல்,திருமணம்,குடும்பம், மாதவிலக்கு,உணவுனு 6,7 பேர் இருக்குற ஒரு குடும்பத்துக்கு இந்த இடம்தான் எல்லாம்னு சொன்னா அது கொடுமையா தெரிலயா இந்த அதிகாரவர்க்கங்களுக்கு? மழை,பனி,வெயில்னு எதுக்கும் பாதுகாப்பில்லாத கூடு கட்டி வாழ்றது சென்னை வாழ் அதிகாரிகளுக்கு உறுத்தலையா? தினமும் கண் முன்னாடி பாக்கற இந்த விசயத்தியே இவங்களால சரி பண்ண முடியலனா இவங்க என்னத்த ஆண்டு என்னத்த கிழிக்க போறாங்க?





தமிழினத் தலைவர் அவர்கள் ஏதோ திராவிட பாரம்பரியத்தோட கட்டிருக்கேனு சொல்லி பெருசா ஒரு சட்டமன்றத்த கட்டி வெச்சாரு அத ஆத்தா வந்து ஆஸ்பத்திரி ஆக்கறேன்னு சொல்லிச்சு.ஆனா 2 பேருமே இந்த கட்டிடம் நாறிப் போன கூவத்து கரைல கட்டி வெச்சிருக்கோம்ங்கிறத ஏன் வசதியா மறக்கிறாங்க? ஒரு மாநிலத்தோட ஆட்சிமன்றம் மிகவும் மோசமாக சீரழிக்கப்பட்ட ஆற்றின் கரையில் இருப்பதே இவங்க ஆட்சிகளுக்கு சாட்சியா இருக்கும்னு தோனலையா இவங்களுக்கு? அங்க மருத்துவமனை அமைஞ்சா அது உயர்சிகிச்சை மையமா இருக்காது நோய் பரப்பும் மையமா தான் இருக்கும்.இதுவே இப்படினா அந்த கரையில வாழ்ற மக்கள நினைச்சா மனசு கொதிக்குது.ஆற்றங்கரை நாகரீகம் இப்ப சாக்கடையோர நாகரீகம் ஆகிப்போனது இந்த புத்திசாலிங்களுக்கு ஏறலயா? ஒருவேளை ஆற்றை சுத்தப்படுத்தினா அந்த ஆற்றோர மக்கள விரட்டிவிட்டுட்டு  அந்த இடத்தயெல்லாம் பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டு குடுத்துடுவாங்கங்கிறது உண்மைதான்.ஆனா மலேரியாவின் தாயகமா இருக்குற இந்த கூவத்த சீர் செய்ஞ்சா எத்தனையோ வியாதிகளிலிருந்து மக்கள காப்பாத்தலாம்.இதெல்லாம் செய்யாம எங்கிருந்து முதல் மாநிலமாகிறது?



சென்னையோட பொருளாதார ஏற்றத்தாழ்வு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கனும்னா நேரா ஏதாவது பெரிய ஷாப்பிங்க் மாலுக்கு போக வேண்டியதுதான்.வீணா போற நேரத்தையும்,பணத்தையும் என்ன பண்றதுனு தெரியாம கும்பல் கும்பலா சுத்துற பணக்கார இளைஞர்கள்,பார்க்கிங்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ரூபாயனு வாய பொளக்குற நடுத்தர இளைஞர்கள், சென்னையை சுத்தி பாக்குறேன்னு சொல்லிட்டு குருந்தாடி,மொழுக் முகம்,கலரிங் தலை,சுமார் ஜீன்ஸ்னு ஷாப்பிங்க் மாலுக்கு உள்ளயே சென்னைய தேடுற வெளியூர் இளைஞர்கள்,துணிக்கடை,தையல் கடை,டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு வாரம் முழுக்க வேலை செஞ்ச காசுல வாங்கின மலிவான ஜீன்ஸும்,ஷால் போடாத டாப்ஸும்,தலைக்கு குளிச்சு அப்படியே முடிய விரிச்சு போட்டுட்டு பரவசத்துடன் வரும் ஏழை இளைஞிகள்னு இன்னும் பல முகங்களை அந்த பெருங்கடைகளில் பார்க்கலாம்.இந்த ஏற்றத்தாழ்வு விரிந்து கொண்டே போனால் வரும் விளைவுகள் பல பெருங்கடைகளின் அஸ்திவாரங்களை இடிக்கத் தொடங்கும் என்பது வெளிச்சம்.ஏனெனில் சென்னையின் புழுக்கம் எல்லையில்லாதது.

அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டனே சென்னைல நான் சாப்பிட்ட உணவு விடுதியோட முதலாளிங்க எல்லாம் மலையாளிங்க வேலை செய்யுற பசங்க எல்லாம் ஹிந்திகாரனுங்க.நம்ம இளைஞர்கள் எல்லாருமே மல்டிநேஷனல் கம்பெனிலயும்,உட்கார்ந்தே வேலை செய்யுற இடத்துலயும்தான் வேலை பாப்பேன்னு அடம்புடிச்சு உட்கார்ந்திருந்திருந்தா இருக்குற தொழில்வளம் எல்லாம் பறிபோயிட்டிருக்கு.

இரயிலும் நானும் அவளும்

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம்...

என்னடா மறுபடியும் ட்ரெயினு,ஜன்னலு,காத்து,மழைனு ஒரு கதையானு கடுப்பாகாதீங்க.தினமும் தமிழ்நாடு முழுக்க லட்சக்கணக்கான பேர் ட்ரெயின்ல போறான்.எல்லா பயலுக்குள்லயும் ஒவ்வொரு கதை இருக்கு.அப்ப எனக்கு மட்டும் இருக்க கூடாதா? வந்தது வந்துட்டீங்க கொஞ்சம் பொறுமையா கேட்டுட்டு போங்க.
நாகர்கோவில் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறேன்.இன்னும் இரயில் வரவில்லை.சிறிது நிமிடங்களில் வந்து விடுமென வெகு நேரமாய் அறிவிப்பாளர் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருந்தார்.அவரை நம்பி போர்களத்தில் முன்வரிசையில் நிற்பது போல எல்லோரும் பெட்டியை கையில் ஏந்தியவாறு நடைபாதையின் முனையில் ஆயத்தமாக காத்துக் கொண்டிருந்தனர்.இரயில் கொல்கத்தாவிலிருந்து ஊர்ந்து கொண்டே வருவதால் மிகவும் அயர்வாக வந்து சேர்ந்தது.எனக்கான பெட்டியை தேடி கண்டுபிடித்து உள்ளே நுழைந்தவுடன் வழக்கமாக ஏற்படும் அந்த அனுபவம் தலையை கிறுகிறுக்கச் செய்தது.வீட்டில் குளிர்சாதன பெட்டியில் தக்காளி சாதத்தையும்,இடலி மாவையும்,தயிரையும்,காய்கறிகளையும் வைத்துவிட்டு ஸ்விட்சை போடாமல் விட்டு பத்து நாள் கழித்து திறந்தால் எப்படி குப்பென்று ஒரு துர்நாற்றம் அடிக்குமே அதே போல ஒரு துர்நாற்றம் இந்த இரயில் பெட்டியிலும் வீசியது.வழக்கமாய் வடநாட்டு மக்களின் உடலில் ஒரு வித்தியாசமான வாசம்(???) வீசும்.அதுவே எனக்கு ஏக அலர்ஜி இதில் இவர்கள் 2 நாள் குளிக்காமல் கொல்கத்தாவிலிருந்து வந்தால் எப்படி இருக்கும்?.இந்திய தேச ஒருமைப்பாட்டுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு என்னுடைய படுக்கையை தேடி ஓடினேன்.படுக்கை எண் 38, நடு படுக்கை, சட்டென ஏறி படுத்துக் கொண்டேன்.உடை மாற்றிக் கொள்ள மனதில்லை பெட்டிக்குள் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய ரூ.2,00,000 காசோலை உள்ளது ஆதலால் பாதுகாப்பு காரணங்களுக்காக பெட்டியை தலைமாட்டில் வைத்துக் கொண்டேன்.சிறிது நேரத்தில் துர்நாற்றங்களை சிதறடிக்கும் ஒரு வசந்தம் வீசியது.நான் படுத்திருந்த படுக்கைக்கு நேர் எதிரே ஜன்னலோரம் அமைந்திருந்த இரண்டு படுக்கைகளில் மேல் படுக்கையில் ஒரு சிறகில்லாத தேவதை அமர்ந்திருந்தாள்.அவள் கண்கள் எத்தனை நேரமாய் ஊடுருவிக் கொண்டிருந்தது எனத் தெரியவில்லை இருப்பினும் என் இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் அவளின் விழியசைவுக்கு இசைவாய் துடித்தது.வங்காளப் பெண்களுக்கு உரிய பால் நிறம்,உடலை ஒட்டிய சுடிதார் அணிந்தபடி அளவான ரசகுல்லா போன்ற தேகம்,குலாப் ஜாமூனின் சுவை ஒன்றிய இதழ்கள்.இதில் என்னை மிகவும் நெருக்கியது அவள் விழிகள், சத்தியமா.
ஏனோ தெரியவில்லை அவள் கண்கள் எனக்கு கயல்விழியை நினைவுபடுத்தியது.
கயல்விழி... அலுவலகம் செல்வதற்காக விடிந்தும் விடியாத அப்பொழுதில் எழுந்து மொட்டைமாடியில் நின்று பல்விளக்கிக் கொண்டிருந்தேன்.அது ஏன் மொட்டைமாடியில் என கேட்கலாம்.கேட்காவிட்டாலும் சொல்வேன்.காலை கடன்களில் ஒவ்வொருவருக்கும் சில வினோத பழக்கவழக்கங்கள் இருக்கும் நாளிதழ் படித்துக் கொண்டு பல்விளக்குவது,கடன் கழிப்பது,பல் விளக்கியவுடன் சிகரெட் பிடிப்பது,காபி குடித்த பின் கழிவறை செல்வது என. இப்படி எனக்கு சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்தபடி மொட்டை மாடியில் நின்று பல்விளக்குவது பிடித்தமான ஒன்று. அன்றும் அப்படி பல்துலக்கையில் கயல்விழி கண்ணில் பட்டாள்.வாயிலிருந்து பல்துலக்கி தவறி விழுந்தது கூட தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்படி ஒரு நேர்த்தியான அழகை என் பாட்டன் காலத்திலிருந்து யாரும் பாத்திருக்க மாட்டார்கள்.பொதுவாக நேர்த்தியான விடயங்களின் உவமைக்கு ஓவியத்தையும்,கவிதையையும் புனைவதுண்டு.ஆனால் இவளிடம் அடியும்,சீரும்,நிறங்களும் பிச்சையெடுக்க வேண்டும்.ஈரத்துணியுடன் தலையில் கொண்டையிட்டு துணி உலர்த்திக் கொண்டிருந்தவள் சட்டென என்னை நிமிர்ந்து பார்த்தாள்.பள்ளிக்கூட சிறுவனின் முதல் பரவசம் போல உடல் நடுங்கியது.என்ன ஒரு கூர்மையான கண்கள்.மாரை மறைத்த சேலையை இழுத்து மேலும் மறைத்தவள் “என்னங்க” என விளித்தாள்.
“என்னடீ?” அவள் வீட்டினுள் இருந்து ஒரு ஆண் குரல்.
அய்யய்யோ அவளுக்கு திருமணமாகிவிட்டதா? இவ்வளவு நேரம் இரசித்தவன் அவள் கழுத்திலிருந்த தாலியை கவனிக்க மறந்துவிட்டேன். கிழே விழுந்திருந்த பல்துலக்கியை அப்படியே எடுத்து வாயில் வைத்து குடுகுடுவென கீழே இறங்கினேன்.நான் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் ஒரு ஆஜானபாகுவான ஆண்மகன் வரவேற்பறையில் புருவத்தை சுருக்கிக் கொண்டு நின்றிருந்தான்.வாயில் நுரையுடன் நான் அவனருகே செல்ல
”நீதான் மொட்டமாடில நின்னு என் பொண்டாட்டிய பாத்தியா?”
எடுத்த எடுப்பிலேயே மானம் போனதால் நானே முன்வந்து சமாதானம் அறிவித்தேன்.

”பக்கத்து வீட்டுல யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு தாங்க பார்த்தேன்.தப்பா எல்லாம் பாக்கலங்க” முடிந்தவரை தணிந்த குரலில் பம்மினேன்.

”ஓ புதுசா வந்தா பாப்பியோ? அதுக்கு தான் பொண்டாட்டிய கூட்டீட்டு இங்க குடி வந்தமா.நானும் ஏரியாக்கு புதுசுதான் உன் வீட்டுல இருக்குற எல்லாரையும் கூப்பிடு நான் நல்லா பாத்துட்டு போறேன்” அவன் இதை சொல்லி முடிக்கவும் என் மனைவி சமையலறையிலிருந்து வரவேற்பறைக்கு வரவும் சரியாய் இருந்தது.

”வாங்க உட்காருங்க” என் மனைவி வந்தவனை வரவேற்றாள்.
உடனே அவன் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.

”என்னாச்சுங்க ஏதாச்சு பிரச்சனையா?” மீண்டும் அவனிடம் விசாரித்தாள்.

”ஒன்னுமில்ல மேடம்.என் வொய்ஃப் வேலையா இருக்கும் போது உங்க ஹஸ்பெண்ட் மாடில இருந்து முறைச்சு பாத்திருக்காரு.அவ பயந்து போய் என்கிட்ட வந்து சொன்னா.அது தான் வந்து கேட்க வேண்டிதா போச்சு” இப்படி திடீரென தொலைபேசியில் க்ரெடிட் கார்ட் விற்க முயலும் கால் செண்டர் மக்களை போல அவன் ஆங்கிலத்தில் குழைந்ததும் எனக்கு ஏதோ தவறாகப்பட்டது.
என் மனைவி என்னை முறைத்து பார்த்ததில் இன்னும் ஒரு வார சண்டைக்கு தேவையான திடமான மனநிலைக்கு இப்பொழுதே பயிற்சியை தொடங்கினேன்.

”அவர் தெரியாம பாத்திருப்பார்.இனிமேல் அப்படி எதும் நடக்காம பாத்துக்கறேன் மன்னிச்சிருங்க” கல்யாணமான புதிதில் மட்டும் நான் கண்ட அந்த முழுநீள புன்னகையுடன் அவள் பதிலளித்தது என் உள்ளத்தை குடைந்து கிளறியது.

”அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்ல மேடம்.வொய்ஃப் சொன்னதுக்காக வரவேண்டிதா போச்சு மத்தபடி நோ ப்ராப்ளம்” என மேலும் குழைந்தவன் வாசல் அருகே சென்றதும்
“நாமெல்லாம் பக்கத்து பக்கத்து வீடு ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருக்கணும்.நீங்களும்,சாரும் நாளைக்கு எங்க வீட்டுக்கு லஞ்சுக்கு வாங்களேன்” அடப்பாவி என்னை போட்டு அந்த கிழி கிழித்தானே இப்பொழுது நான் வேலையிலிருக்கும் சமயம் பார்த்து மதிய உணவுக்கு கூப்பிடுகிறானே.மூளை சூடாகி காது புகைந்தது.கண்டிப்பாக வருகிறேன் என அவள் சொல்லித் தொலைத்ததில் குற்ற உணர்ச்சியிலிருந்த என் மனம் சந்தேக உணர்ச்சிக்கு தாவியது.கொஞ்ச நாட்களாக எனக்கு நிலை கொள்ளவில்லை.என் மனைவியையும் பக்கத்து விட்டுக்காரனையும் கண்கானிப்பதே வேலையாய் போனது.மனைவிக்கு தெரியாமல் அவள் கைபேசியை பலமுறை குடைந்தேன் பெரிதாய் எதும் கிட்டவில்லை.அவள் துணி உலர்த்த,துணி துவைக்க,வீடு பெறுக்க என வெளியே செல்லும் பொழுதெல்லாம் அவளுக்கே தெரியாமல் கண்கானித்தேன்.அப்படித்தான் ஒருமுறை பக்கத்து வீட்டை பார்த்து அமைந்திருக்கும் காம்பவுண்ட் அருகே என் மனைவி காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் நான் ஒரு மூலையில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டின் அருகே நின்று அவளையும் பக்கத்து வீட்டு புல்வெளியில் நின்று புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்த தடிமாடையும் கண்கானித்தேன்.அவன் வெறும் முண்டா பனியனோடு நின்று படித்துக் கொண்டிருந்தது வேறு என்னை ஏகத்துக்கும் எரிச்சல்படுத்தியது.நான் அந்த தடிமாடை வெகுநுட்பமாக கண்கானிக்கும் பொழுது சட்டென என் மனைவி என்னை கவனித்துவிட்டாள்.வேகவேகமாக வீட்டுக்குள் சென்றவள் பால் பாத்திரத்தை அடுப்பில் படாரென வைத்தாள்.நான் அமைதியாய் வீட்டினுள் நுழைந்து அவள் அருகே சென்று அமைதியாய் நின்றேன்.

”நான் உங்களுக்கு என்னங்க குறை வெச்சேன்?” கலங்கிய கண்களுடன் அவள் சொன்னது எனக்கு புரியவில்லை.பிறகுதான் விளங்கியது அந்த தடிமாடின் அருகே கயல்விழி நின்றிருந்திருக்கிறாள்.இவள் நான் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்து பொங்கிவிட்டாள்.அட ஆண்டவா ஒரு வாரத்துக்கு நான் மூளைச்சாவடைய முடியாதா?
அடுத்து வந்த நாட்கள் முற்றிலும் வேறாய் இருந்தது.கயல்விழி இப்பொழுதெல்லாம் சிநேகமாய் என்னை பார்க்கிறாள்.நான் மொட்டைமாடியில் நிற்பது தெரிந்தால் அவள் புல்வெளிக்கு வந்து என்னுடன் சங்கேத விழிமொழியில் பேசுகிராள்.பார்க்கும் ஒவ்வொரு நொடியும் புன்னகைக்கிறாள்.எனக்கு உலகமே மாறிவிட்டதாய் தோன்றியது.சில நாட்கள் கழித்து அவளை என் அலுவலகத்தின் அருகே ஏதேச்சையாக சந்தித்தேன்.உடனே காஃபி சாப்பிட சென்றோம்.பிறகு திட்டமிட்ட சந்திப்புகள் தொடர்ந்தது.ஒருவரை விட்டு ஒருவர் லஞ்ச் சாப்பிடாத நிலைமைக்கு சென்றோம்.இப்பொழுதெல்லாம் என் மனைவியை நான் வீணாக சந்தேகப்படுவதில்லை.



கயல்விழியின் குடும்ப சுழ்நிலைகளெல்லாம் அத்துப்படியானது எனக்கு.அவளுக்கு பலமுறை நிறைய அறிவுரைகளை மானிடவியல்,அறிவியல் ரீதியாக அள்ளிவிட்டு நான் புத்திசாலியாகியிருந்தேன்.அவள் வீட்டில் கயல் மட்டும் தான் வேலைக்கு செல்கிறாள்,தனிக்குடித்தனம்,காதல் திருமணம்,பெற்றோர் ஆதரவு இல்லை,கணவன் வேலைக்கு செல்வதில்லை.அவளை பார்க்கும்போதே பாவமாய் இருந்தது.ஒரு பெண்ணுக்கு எத்தனை சோதனைகள்? ஆண்டவனை இந்த சமயங்களில்தான் நிற்க வைத்து கேள்வி கேட்க தோன்றுகிறது.திடீரென ஒரு நாள் கயல் என்னை கடைசியாய் பார்க்க வேண்டுமேன அழைத்தாள்.என்ன ஏதென புரியாமல் அவளை சந்திக்க சென்றேன்.கயல் தன் கணவனுக்கு தெரியாமல் ஏதோ வார சீட்டு எடுத்து அதை கட்ட முடியாமல் வட்டி கிட்டி என 3 இலட்சம் ஆகிவிட்டதாம்.நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாகவும் கணவனுக்கு தெரிந்தால் கொன்று விடுவார் எனவும் ஆதலால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னாள்.நான் அவளுக்கு முழுமுதல் உரிமையோடு திட்டு,அறிவிரை என அளித்து அரவணைத்தேன்.என் மனைவிக்கு தெரியாமல் தனிப்பட்ட என் அக்கவுண்டில் பத்து வருடமாய் சேமித்த ரூ.5,00,000 வைத்திருந்தேன்.என் சம்பளம் என்ன என்பது என் மனைவிக்கு தெரியாது குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு மீதியை இரகசிய அக்கவுண்டில் போட்டு வைத்திருந்தேன்.பாஸ் புக் கூட அலுவலகத்தில் தான் இருக்கும்.ஆகையால் எந்த பிரச்சனையும் இல்லாமல் கயலுக்கு உதவ முடிந்தது.கயல் சொன்னது சரிதான் அதுதான் நான் அவளை சந்தித்த கடைசி சந்திப்பு.

பெங்காலி பெண்ணின் கண்கள் அந்த கயலை நினைவுபடுத்தி என்னுள் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.நான் சொல்வதையெல்லாம் என் கண் வழியாக படிப்பது போல அவள் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.எங்களிருவரை தவிர எல்லோரும் தூங்கிய நடுஇரவு என்னை பார்த்தபடியே அவள் படுக்கையிலிருந்து கீழிறங்கினாள்.என்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே கதவினருகே சென்றாள்.சட்டென புரிந்தது எனக்கு நானும் இறங்கி அவள் பின்னே நடந்தேன்.கழிவறை அருகே சென்றவள் என்னை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.நான் படபடக்கும் இதயத்துடன்,சலசலக்கும் காற்றில் நின்றிருந்தேன்.அவள் வெளியே வந்து என்னை ஆழமாய் பார்த்து உள்ளே போய் பார்க்கும்படி சைகை செய்துவிட்டு அதே மாயப்புன்னகையுடன் தன் படுக்கையை நோக்கி நகர்ந்தாள்.நான் வேகமாய் உள்ளே சென்றேன்.ஏதேனும் எழுதியிருகிறாளா?குறிப்புகள் இருக்கிறதா? முகவரி எழுதியிருக்கிறாளா? என 15 நிமிடம் கழிவறையை அலசினேன், பார்வையால்தான்.
ஏதும் கிடைக்கவில்லை.ஏமாற்றத்துடன் அவளைத் தேடி படுக்கையருகே சென்றேன்.அவள் இல்லை.ஏதோ மாயத்தை செய்துவிட்டு மறைந்த தேவதை போல மறைந்துவிட்டாள்.என் படுக்கைக்கு திரும்பினேன்.அதிர்ச்சியில் உறைந்தேன்.அவள் செய்த மாயம் என் பெட்டியை காணாமல் போக வைத்துவிட்டது.லுங்கி,பனியன் உட்பட எதுவும் அவளுக்கு பயன்படப்போவதில்லை ஆனால் அலுவலகத்துக்கு தர வேண்டிய அந்த ரூ.2,00,000 காசோலை?
கயலுக்கு குடுத்தது போக மிச்சமிருந்த இரகசிய கணக்கு நினைவுக்கு வந்தது.
நானெல்லாம் எப்ப திருந்தறது?









Wednesday 18 January 2012

இதுதான் வளர்ச்சி நிதியா?

நம்முடைய முதல்வர் அம்மா அவர்கள் 2 நாட்களுக்கு முன் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சிகளின் வளர்ச்சிக்காக 7,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறார்.மகிழ்ச்சியான விடயம் தான் ஆனால் இதன் ஆதாரமும் விளைவுகளும் தான் மனதிற்கு ஒப்ப மறுக்கிறது. நகர்ப்புறங்களில் அசுர வேகத்தில் பெருகி வரும் மக்கள் தொகையை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கதான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிலும் 10 மாநகராட்சிகளுக்கு 6,600 கோடி ரூபாய் மிச்ச தொகை நகராட்சிகளுக்கும்,பேரூராட்சிகளுக்கும்.அதாவது பெருவாரியான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு வந்தாலும் அவர்களை நகரத்தின் சந்து பொந்துகளில் அடைத்து வைக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த முனைகிறது அரசு.ஏற்கனவே கட்டுக்கடங்காத மக்கள் தொகையால் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வில் உழலும் சென்னை மாநகரைப் போல எல்லா மாநகரங்களையும் மாற்ற ஏற்பாடு நடக்கின்றது.சில மாதங்களுக்கு முன் இந்திய திட்ட கமிஷன் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள் “மாநகரங்களின் மக்கள் தொகை அடுத்த 10 வருடங்களில் பல மடங்கு அதிகமாகும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும்” என உரைத்தார்.அதன் தொடர்ச்சியாகவே முதல்வரின் இந்த திட்டம் இருக்கின்றது.இது பொருளாதார அடிப்படையில் எவ்வளவு முட்டாள்த் தனமான செயல்பாடு என்பது அனைவருக்கும் புரியும்.


 
நகரங்களின் உட்கட்டமைப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல கிராமப்புறங்களின் பொருளாதாரம் தான் பெரும்பாலான மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியது என்பதை மறந்து விடக் கூடாது.நகரங்களுக்கு பெயரக் கூடிய மக்கள் பெரும்பாலும் கிராமத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை முக்கியமாக விவசாயத்தை இழந்தவர்கள் அல்லது வாழ்வாதாரத்தின் வளம் குன்றி மேற்கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்ட முடியாதவர்கள் ஆவர்.இவர்களெல்லாம் கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்கு நகர நகர கிராமப் பொருளாதாரம் நலிவடையும் என்பது உண்மை.ஏற்கனவே மூச்சுவிடத் திணறிக் கொண்டிருக்கும் சென்னை போல எல்லா நகரங்களிலும் மக்கள் அடைந்து கிடப்பர்.மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலைவாய்ப்பும்,கல்வியும் தருவது பெரும் சவாலாய் இருக்கும்.வேலையில்லாத சூழ்நிலையிலும்,பொருளாதார சூழ்ச்சியால் வாழ்விழந்தவர்களும்,ஏதேனும் செய்து வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுமாகிய பொருளாதாரத்தின் கடைசி கட்ட ஏழை மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் அது வசதி படைத்தோர் மற்றும் வசதியற்றோரிடையே பிரிவினையை உண்டாக்கும் சென்னையில் வடசென்னை,தென்சென்னைக்கான வித்தியாசம் போல.இதன் மூலம் தவிர்க்க முடியாத சூழலில் குற்ற செயல்களில் ஈடுபடுவொரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும்.ஏழை மக்கள்தான் தவறு செய்வர் என சொல்லவில்லை வசதி படைத்தோர் தங்கள் காரியங்களுக்காக ஏழை மக்களை பயன்படுத்த போகின்றனர் என்பதுதான் உண்மை.சென்னை பட்டணத்தின் பெரும்பாலான மக்களின் அடிப்படை தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.4x4 அடி இடத்துக்குள் நடைபாதை வாசிகளாக பெரும்பாலான மக்கள் உள்ளனர்.



மக்களின் இந்த நகர்வால் சீர்குழைய போவது கிராமங்கள்தான்.பெருகும் நகர மக்களின் தேவைகளுக்கேற்ப சந்தை என்பது கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து விலகி முற்றிலும் நகரம்தான் சந்தை என்ற நிலை உருவாகிவிடும்.ஆகவே தன் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதை விற்க முற்றிலும் நகரங்களை சார்ந்துதான் இருக்க நேரிடும்.இதனால் விவசாயிகள் வியாபாரிகளால் பெருமளவு நட்டம் அடைவர்.போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் காரணம் காட்டி விவசாயிகள் வஞ்சிக்கப்படுவர்.பெருவியாபரிகளிடம் நகரச் சூழலில் விவசாயிகள் நியாயம் பெற முடியாத சூழல் உருவாக நேரிடும்.அது விவசாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக கசக்கி பிழிந்து உயிரற்ற நிலைக்கு கொண்டு செல்லும்.குறு விவசாயம் ஒழிந்து பெரு விவசாயிகளிடமே எல்லா நிலங்களும் செல்லும்.அது பின்னர் அரசாங்க உதவியுடன் கார்ப்பரேட் தொழிற்சாலைகளுக்கு செல்லும்.



படிப்படியாக இன்னும் 100 வருடங்களுக்குள் தமிழக விவசாயம் பட்டுப்போகும் சூழ்நிலை இந்த நகரங்களை நோக்கிய நகர்வால் ஏற்படும்.ஆகையால் பெருகும் மக்கள் தொகைக்காக நகரங்களின் கட்டமைப்புகள் பல ஆயிரம் கோடிகள் செலவில் செழுமைபடுத்தப்படுவதை விட சில நூறு கோடிகள் செலவில் கிராமப்புற பொருளாதாரத்தை செப்பனிடுவதே இன்றியமையாதது.இடுபொருட்களின் விலை,செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்தல்,இடைத்தரகர்களை ஒழித்து நெல்,கரும்பு போல அரசே எல்லா விவசாய பொருட்களை கொள்முதல் செய்து வியாபரிகளுக்கு அளிப்பது,பாசன வசதிகளை சீர் செய்தல்,அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு சில நூறு கோடிகள் இருந்தால் போதும்.அதுதான் உண்மையான வளர்ச்சியாய் அமையும்.ஆடு,மாடுகளால் மட்டும் கிராமங்கள் செழுமை பெறாது.உழுதவனை காக்காது அவனை வேறெங்கோ விரட்டி அடித்தல் நம் எதிர்கால சமூகத்திற்கு மாபெரும் கேடாய் அமையும்.கிராமங்களை காத்து நகரங்களுக்கு மக்கள் நகராமல் ஆரோக்கியமான சீரான பொருளாதாரத்தை நோக்கிய பயணமாக இருப்பதுதான் நல்லாட்சி.
                                                                                                    -மு.சுந்தர பாண்டியன்.

Tuesday 17 January 2012

சனநாயகம்



வலுத்தவனுக்கு
வாழ்க்கைப்படு
வலு குன்றியதும்
துரத்திவிடு
அடுத்தவனைத் தேடு
அவனும் போனால்
அடுத்தவன்
ஆயுள் முழுதும்
அடிமையாய் இரு-சனநாயகம்.

யாரோடு வாழ்வது?




காயங்கள் எப்பெரிதாயினும்
காலத்திடம் மருந்துண்டாம்
வேண்டாம் எனக்கு
என் காயங்கள் அற்பமானதல்ல
என் இதயத்தில் கீறிவிட்டது
உன் நகம்
குருதியாய் பொங்கிய கண்ணீர்
உன் நினைவுகள்
எதிர்கால மகிழ்ச்சிகள்
உன்னால் களவாடப்பட்டது உண்மைதான்
அதனால் என்ன?
கடந்தகால பொக்கிஷங்களை
எதிர்காலத்தில் இட்டு நிரப்புவேன்
போதவில்லையெனில்
இன்னும் ஆழமாய் தோண்டுவேன்
இடைமறிக்கின்றனர் சிலர்
காயம் முற்றினால்
சீழ் பிடித்து செத்துப் போவாய் என்றனர்
நீயே சொல்
நான் யாருடன் வாழ்வது?
உன்னோடா?
காயங்களற்ற என் சவத்தோடா?

வஞ்சம் - பகுதி 7

                                                        பகுதி 7-திருநங்கை

படிக்கட்டில் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர் சிவாவும் நண்பர்களும்.வேறு என்ன செய்ய? மாளிகை முழுதும் தேடிப் பார்த்த பொழுது யாருமே தென்படவில்லை, திடீரென ஓலக்குரல் கேட்டு ஓடிப்போய் பார்த்தால் அங்கே ஒருத்தி உப்பரிகையில் இருந்து கீழே குதிக்கின்றாள்,இப்பொழுது அவள் ஓடிப்போய் குதித்த அறையும் இருந்த சுவடே தெரியாமல் தானாய் மூடிக்கொண்டது.எல்லாவற்றிற்கும் மேல் பஷீர் ஏன் கடத்தப்பட்டான்? தாங்கள் ஏன் இங்கே அடைக்கப்பட வேண்டும்? என மாறி மாறி மண்டையை குடைந்தது.ஐந்து பேரும் குழப்பத்தின் உச்சிக்கே வந்துவிட்டனர்.

”டேய் நாம இப்ப என்னதாண்டா பண்றது? இங்க சாப்பிடக் கூட ஏதும் கிடைக்காது போல,என்னென்னமோ நடக்குது.யோசிக்க கூட முடியல அவ்ளோ டயர்டா இருக்கு.என்னால முடிலடா” சுவரில் சாய்ந்தபடி விக்கி புலம்பினான்.பசி பொறுக்க முடியாது தவித்தான்.வேலை,சோறு,மது,காதல் என சராசரி குதூகலத்துடன் வாழ்ந்தவனாதலால் அவனால் இந்த அசாதாரண சூழ்நிலையையும்,பசியையும் பொறுக்க முடியவில்லை.

”நாம என்ன பிக்னிக்காடா வந்திருக்கோம் ஐஸ் பாக்ஸ்ல இருந்து அள்ளிப்போட்றக்கு” சிவாவும் அயர்வாக இருந்ததால் படிக்கட்டின் பிடியில் சரிந்தான். “சிவா” ஐசுவர்யா கெஞ்சலாய் அழைத்ததும் திரும்பினான். “பசிக்குதுடா” என அவள் பாவமான கண்களோடு கேட்ட பொழுது சிவா தவித்துவிட்டான்.தன் வாரிசை சுமக்கும் ஆருயிர் காதலிக்கு பசியை கூட போக்காவிட்டால் தான் என்ன ஆண்மகன் என அவனுக்கு உள்மனது குத்தியது. பெண் துணைக்காக வேட்டையாடப் போகும் காட்டில் வாழ்ந்த ஆணைப் போல ஆகிவிட்டான்.
”இருடா தங்கம் கொஞ்சம் பொறுத்துக்க.நான் இங்க ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு வரேன்” சிவா எழுந்ததும் சுதாகரும் எழுந்து உடன் சென்றான். விக்கி தன்னால் இதற்கு மேல் நடக்க முடியாது எனக் கூறி வர மறுத்து விட்டான். ’பொண்டாட்டிக்குன்னா மட்டும் எந்திரிச்சு போவானுங்க’ காதுபடும்படி விக்கி புலம்பினாலும் அதை பொருட்படுத்தாது இருவரும் சென்றனர்.
2ஆம் தளத்தில் நுழைந்த போதே நெய் போல ஏதோ வாசனை வந்தது.பசியால் நடக்க முடியாது நடந்து கொண்டிருந்த இருவருக்கும் அந்த வாசனை வாயில் எச்சில் ஊற வைத்தது.உணவு கிடைக்கப் போகும் நம்பிக்கையில் கால்கள் புதிதாய் எங்கோ ஒளித்து வைத்திருந்த சக்தியை திரட்டிக் கொண்டு வேகமாக நடந்தது.வாசனை வந்த திசையை நோக்கி விரைந்தனர்.ஒரே ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.பரவசப்பட்டவர்கள் உதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தனர்.ஓற்றை படுக்கையின் அருகில் இருந்த சின்ன மேசையில் அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது கூடவே ஒரு தாம்பூலத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.அதை திறந்து பார்த்த பொழுது உள்ளே 10 பேர் சாப்பிடக் கூடிய அளவு நெய் சாதம் இருந்தது.இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயினர்.உடனே அந்த தட்டை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு சென்றதும் ஐந்து பேரும் அரக்க பரக்க சாப்பிட்டனர்.சிவா தனக்கு கிடைத்த பங்கில் பாதியை ஐசுவர்யாக்கு ஊட்டி விட்டான்.யாருமில்லாத வீட்டில் தட்டில் சோறு எப்படி என யோசிக்கவெல்லாம் யாருக்கும் தோன்றவில்லை.சாப்பிட்டு முடித்ததும் தான் பூமியில் இருப்பதாய் உணர்ந்தனர்.
சேர்ந்தார் போல் அனைவருக்கும் விக்கல் எடுக்கத் தொடங்கியது.வேகமாய் சாப்பிட்டதால் வந்த விக்கலா?இல்லை உணவில் ஏதும் கலந்துவிட்டனரா? என குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.திடீரென தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது.உணவு கிடைத்ததைப் போலவே தண்ணீரும் கிடைக்குமென சத்தத்தைத் தொடர்ந்து 5 பேரும் சென்றனர்.முதல் தளத்தில் ஓர் அறையில் அதே போல  விளக்கொளி தெரிந்தது.உள்ளே தண்ணீர் தழும்பிய ஒரு அண்டாவும் அதன் அருகே ஒரு சொம்பும் இருந்தது.ஐந்து பேரும் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.உருகிய பனிக்கட்டி நீரில் தேன் கலந்தது போன்று சுவையில் உள்ளம் வரை நீர் இனித்தது.இவ்வளவு சுவையான நீரை அவர்கள் இதுவரை வாழ்வில் பருகியதில்லை.
தாகம் தீர்ந்ததும் சொம்பை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல முற்பட்டனர்.சிவா அறை வாசல் அருகே சென்ற பொழுது அறையின் கதவு அசுர வேகத்துடன் இடி போன்ற பலத்த ஓசையுடன் படாரென மூடியது.சிவா சற்று முன்னே நின்றிருந்தால் உடல் துண்டாய் போயிருக்கும்.அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவாவின் சட்டையை பிடித்து ஐசுவர்யா பின்னிழுத்துக் கொண்டாள்.அவனுக்கு எதும் ஆகவில்லையென உறுதி செய்து கொண்டாள்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னர் ஐவருக்கும் பின்னால் சரக் சரக் என சத்தம் கேட்டது.இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் படபடக்கத் தொடங்கியது.யாருக்கும் திரும்பிப் பார்க்கும் தைரியம் இல்லை.ஐசுவர்யா சிவாவின் தோளில் முகத்தை பதுக்கி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். முக்கால் பகுதி தண்ணீர் நிரம்பியிருந்த அண்டா மெல்ல ஆடத் தொடங்கியது.மெதுமெதுவாய் அதன் வேகம் அதிகரித்து ஒரு சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.சூறாவளி போல அதன் வேகமும் சத்தமும் அதிகரிக்கத் தொடங்கியது.சத்தத்தின் அளவு அதிகமாக அதிகமாக எல்லோருக்கும் வியர்த்துக் கொட்டியது.திரும்பிப் பார்த்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உடல் வெடவெடத்தது.பயத்தின் பாரம் தாளாது சுதாகர் திரும்பிப் பார்த்தான்.காற்றே இல்லாத அறையில் கனமான அண்டா இவ்வளவு வேகமாய் சுற்றுவது கண்டு விக்கித்துப் போனான்.அவன் விழிகள் விரியவும் அண்டா சாய்ந்து விழுந்து அறை முழுதும் தண்ணீர் சிதறவும் சரியாய் இருந்தது.தங்கள் மேல் தண்ணீர் தெரித்ததும் மற்ற நால்வரும் பயத்தில் பதறிப் போய் அடிவயிற்றின் ஆழ்த்திலிருந்து கத்தினர்.ஐவரும் உடல் வியர்த்து,நெஞ்சு படபடக்க,நடுங்கியபடி திரும்பிய போது அறை முழுதும் வெள்ளம் வந்தது போல கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
”எனக்கு பயமா இருக்கு சிவா,போயிடலாம் சிவா,ப்ளீஸ் என்ன வெளில கூட்டிட்டு போ” சிவாவின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு அலறினாள் ஐசுவர்யா.அவளை தைரியபடுத்தும் நிலையில் சிவா இல்லை.முற்றிலும் பயத்தால் உறைந்திருந்தான்.மற்ற மூவரின் நிலையும் அதுதான்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவின் அருகே செல்ல சுதாகர் முயற்சி செய்தான்.சற்று முன் கணுக்கால் அளவு இருந்த தண்ணீர் இப்பொழுது அதிகமாகிவிட்டது போல தோன்றியது அவனுக்கு.ஆம் சரிதான் தண்ணீர் ஏறத் தொடங்கியது.முட்டியளவு நீரில் நடக்க அனைவரும் தடுமாறினர்.சுதாகர் கதவை பிடித்து திறக்க முயன்றான்.எவ்வளவு இழுத்தும் முடியவில்லை.சிவாவும்,விக்கியும் சேர்ந்து கைகொடுத்தனர்.பெரும்பலம் கொண்டு இழுத்தனர்.கொஞ்சம் கூட கதவு அசையவில்லை.தண்ணீர் இடுப்பளவு ஏறிக்கொண்டது.நிரின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.ஐசுவர்யாவும்,ஹரிணியும் தேம்பித் தேம்பி அழுதனர்.கழுத்தளவு வந்த நீர் நொடிப் பொழுதில் தலைக்கு மேல் ஏறிவிட்டது.



எல்லோருக்கும் ஓரளவு நீச்சல் தெரியுமாதலால் எம்பி எம்பி காற்றிருக்கும் இடைவெளியிலேயே இருக்க முயற்சித்தனர்.நீர் குறைந்தபாடில்லை.மேலும் மேலும் ஏறிக்கொண்டிருந்தது.தலை கூரையை இடித்தது.இதற்கு மேல் காற்றும் இல்லை.தண்ணீர் அறையை மூழ்கடித்தது.கிடைத்த காற்றை உள்ளிழுத்துக் கொண்டு ஐவரும் நீரினடியில் சென்றனர்.
உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.
நீரின் அடியில் ஒரு பெண் எந்த சலனமுமின்றி நின்றிருந்தாள்.நீச்சலடிக்கவோ,நகரவோ அவள் முற்படவில்லை.அவளுக்கு 15 வயதிருக்கும்.பால் முகம் கலைந்து சில நாட்களே ஆன பருவ முகம்.பட்டுடை உடுத்திய சீமாட்டி.நீரில் இருந்ததால் முகம் சரியாக புலப்படவில்லை.சிவாவின் கண்களையே அவள் உத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் ஏதோ சொல்ல வருவது போல தோன்றியது.சிவாவால் அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.



சட்டென உடலைத் திருப்பி அவள் நீந்தத் தொடங்கினாள்.கட்டளையிட்டது போல் சிவாவும் அவள் பின்னே நீந்திச் சென்றான்.எல்லோரும் அவளுடன் நீந்தினர்.காட்டாற்று வெள்ளம் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.அந்த பெண் வளைந்து நெளிந்து நீந்தி சென்றாள்.அவள் சென்ற பாதை திடீர் திடீரென எங்கெங்கோ வளைந்ததால் பிந்தொடர்வது படு சிரமமாயிருந்தது. சிறிது தூரம் வந்ததும் ஒரு வெளிச்சம் தெரிந்தது.நெருங்க நெருங்க அது ஒரு கதவென தெரிந்தது.நீண்ட தூரம் நீந்தியதால் மூச்சு முட்டத் தொடங்கியது.கதவை நோக்கி வேகமாய் நீந்தினர். நீரில் வந்த அனைவரும் அந்த கதவின் வழியே வெளியே விழுந்தனர்.அவர்கள் முன்பு அமர்ந்திருந்த படிக்கட்டின் அருகிலேயே விழுந்தனர்.தண்ணீர் எல்லாம் வடிந்து வெளியேறியது.இறுமி இறுமி நுரையீரலில் நுழைந்த தண்ணீரை வெளியேற்றினர் ஐவரும்.வேக வேகமாக காற்றை உள்ளிழுத்தனர்.சிறிது நேரம் சென்ற பின்னரே நிதானத்திற்கு வந்தனர்.சற்று முன் அவர்களை அழைத்து வந்த பெண்ணை இப்பொழுது காணவில்லை.சுற்றும் முற்றும் பார்த்த பொழுது விக்கி அதிர்ச்சியடைந்தான்.தங்களுடன் நீந்தி வந்தவள் கையில் ஒரு தட்டும் அதில் சில கோப்பைகளையும் ஏந்திக் கொண்டு மலர்ந்த முகத்துடன்,உடலில் துளி ஈரம் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தாள்.அந்த பெண்ணின் அருகே சென்று அழைத்தனர்.இவர்கள் பேச்சு அவளுக்கு கேட்டதாய் தெரியவில்லை.தன் போக்குக்கு அவள் நடந்து சென்றாள்.சற்று நெருக்கமாய் அவள் முகத்தை பார்த்த பொழுது ஐவரும் திடுக்கிட்டனர்.அவள் வேறு யாருமல்ல கொஞ்ச நேரத்திற்கு முன் உப்பரிகையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாளே அவளேதான்... 
                                                                                                                       -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்ததை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்

Sunday 15 January 2012

அறியாமை



அறிவைத் தேடுதலினும்
அறியாமை ஒளித்தல்
கடினமாய் உள்ளது...

வேட்டை-செம ட்ரைலர்

அடிதடி,அதிரடி லிங்குசாமியிடமிருந்து மற்றுமொரு மசாலா.

செம யூத்து ஆர்யா, எஸ்.டீ.டி பூத்து மாதவன், வெடக் கோழி அமலா பால், முத்துன கோழி சமீரா ரெட்டி, மொழுக்குனு ஒரு வில்லன், பரக்கு பரக்குனு பங்களா நாய் மாதிரி ஒரு வில்லன்.இவங்க எல்லாரும் சேர்ந்து ஆளுக்கொரு சீன் மாறி மாறி வந்து ஸ்பீக்கர் கிழிய கிழிய ஆட்றதுதான் இந்த வேட்டை.



கதை என்னன்னா... ஹீரோக்கள் 2 பேரும் அண்ணன் தம்பி,ஹீரோயின் ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி, வில்லன்கள் 2 பேரும் எதிரிகள்.ஹீரோவாகிய அண்ணன் மாதவன் பயந்தாங்கொள்ளி, தம்பி ஆர்யா வெட்டியா இருக்குற மாஸ் ஹீரோ. ஹீரோக்களோட போலீஸ் அப்பா புட்டுகிட்ட பிறகு அப்பாவோட வேலை பசங்களுக்கு வருது.மாதவன் அதுல போலீஸ் ஆயிட்றார்.எங்க இனி நீங்களே கதைய யோசிங்க பார்ப்போம். அதாங்க... அதாங்க... அதே தான்... அட ரொம்ப அதிகமா யோசிக்காதீங்க கம்மியா ஃபீல் பண்ணுங்க போதும்.வில்லனுங்களுக்கு இடைஞ்சலா வர்ற அண்ணன் தம்பி கூட்டணிய புரட்ட நினைக்கறாங்க வில்லனுங்க.இதுல அண்ணன் மாதவன் டம்மி பீசுனு தெரிய வந்து அவர் கால உடைச்சிட்றாங்க.அவருக்கு தம்பி ஆர்யா தண்டால்,பஸ்கி,பஞ்ச் டயலாக் எல்லாம் சொல்லி குடுத்து பெரிய வீரன் ஆக்கிடறார்.அண்ணன்,தம்பிகள் வில்லனுங்கள எப்படி புரட்டி எடுக்கறாங்கங்கிறது தான் கதை.வேற எப்படி  அடிச்சு தான்.ஆர்யா தம்பி வில்லனுங்கள புரட்டுதோ இல்லையோ அமலா பால நல்லாவே புரட்டுறாரு.ஃபிட்டா இருக்கறாப்ல,நல்லா ஆட்றாப்ல,முறைக்கறாப்ல, சண்டை போட்றாப்ல,காமெடி பண்றாப்ல சரி அவரு மாஸ் ஹீரோ ஆயிட்டாரு இதுக்கு மேல என்ன எதிர்பார்க்க முடியும்? ஆனா தம்பி வேகமா தமிழ்ல டயலாக் பேசும் போது (அதுவும் க்ளைமேக்ஸ்ல) தமிழ் தான் பேசறாரானு டவுட் ஆயிடுது.



நம்ம மாதவன் இப்ப பூதவன் மாதிரி இருக்காரு.முதல் பாட்டுல அவர் டான்ஸ் ஆடறக்கு பட்ற கஷ்டத்த பாத்து நமக்கே கண்ணு கலங்குது.போலீஸ் வேசத்துக்காக தொப்பை எல்லாம் போட்டு ரிஸ்க் எடுத்திருக்காரு.பயந்தாங்கொள்ளி கேரக்டர சிறப்பா பண்ணிருக்காரு கட்ட கடசில ஹீரோயிசம் பண்ணாலும் இந்த கேரக்டருக்கு அவர் தேவையில்லங்கிறது நம்ம கருத்து.
அமலா பால் இந்த படத்துக்கு தேவையான அளவுக்கு காஸ்ட்யூம் போட்டுட்டு எந்த வேலையும் செய்யாம அமைதியா லவ்வாங்கி பண்றாங்க.தைரியமா எக்கச்சக்க லிப் கிஸ் அடிக்குது பொண்ணு. இனி டிமாண்ட் எகிறுமே.

சமீராவ அறிமுக காட்சில தாவணில பாத்ததும் பயந்துட்டோம் எங்க முழுக்க முழுக்க இப்படியே வந்திருமோனு.நல்லவேளை சட்டுபுட்டுனு மாதவனுக்கு கட்டி வெச்சு,அப்பப்ப பெரிசா டயலாக் குடுத்து கன்ட்ரோல் பண்ணி வெச்சுட்டாங்க.
வில்லன்கள் 2 பேரும் மாத்தி மாத்தி அடிச்சுக்கறாங்கோ,அவங்க 2 பேரையும் ஆர்யா அடிக்கறதால இவங்க 2 பேரும் மாதவன அடிக்கறாங்கோ, நடுவுல போர் அடிக்கறப்ப அடியாள அப்பறாங்கோ.மெயின் வில்லனா வர்ற அண்ணாச்சி ஸ்பாட்ல பே,பே,பா,பூ,இ,ஆ,ஊனு தான் டயலாக் பேசிருப்பார் போல வசனத்துக்கும் அவர் உதட்டசைவுக்கும் சுத்தமா பொருந்தல.
இரண்டாவது வில்லனுக்கு ரெண்டே டயலாக்.பாடல்கள்ல “பப்ப பப்பா” பாட்டு ஆட்டம் போட வைக்குது மத்ததெல்லாம் ஓ.கே. வசனங்கள்ல லிங்குசாமியின் ட்ரேட்மார்க் வசனங்கள் வந்துற கூடாதுனு ரொம்பவே மெனக்கெட்ருக்காங்க (அதாங்க “அவன் யாரா இருக்கட்டும்,எவனா இருக்கட்டும் எனக்கு கவலை இல்ல”,”யார்றா நீ?”,”இவன்கிட்ட என்னமோ இருக்கு!” இது மாதிரி).அதுலயும் ஒரு சில வசனங்கள் புதுசா இருக்கு.உதாரணத்திற்கு ரத்ததானம் பண்ணும் வில்லனுங்கள பாத்து ஆர்யா சொல்றார் “நீங்க குடுத்த இரத்தத்த எடுத்து வெச்சுக்கங்கடா உங்களுக்கே தேவைப்படும்”.சில வசனங்கள் டார்ச்சர் பண்ணுது உதாரணத்திற்கு ஒரு சண்டை காட்சில ஆர்யா வில்லனுங்கள அடிச்சிட்டிருக்கும் போது பிண்ணனில பெரிய பெரிய பாலித்தீன் கவர் கூடைகள்ல பஞ்ச நிரப்பி அத பறக்க விட்டுட்டு இருக்காங்க அப்ப ஒரு அடியாளோட தலை ஆர்யா குத்துன குத்துல பாலித்தீன் கூடைக்குள்ள போயி மூஞ்சியெல்லாம் பஞ்சு ஆயிடுது அப்ப ஆர்யா கேக்கறார் “செம பஞ்ச்சுல்ல(punch)” முடியலடா சாமி.



அண்ணி கொழுந்தன் சண்டை,ஆர்யா அண்ணிக்கு அடங்கி போறது,சமீராவ வெச்சே அமலா பால கல்யாணம் பண்றது,ஆர்யா-அமலா பால் ரொமான்ஸ்,அங்கங்க லைட்டா வர்ற காமெடி இதெல்லாம் தான் ஓரளவுக்கு படத்த சுவாரசியப்படுத்துது.கதை விவாதத்துக்கு நன்றினு ஒரு 5 பேரோட பெயர டைட்டில்ல போடுறாங்க அவங்க அப்படி என்னதான்யா விவாதம் பண்ணீருப்பாங்க?
நாசர்ங்கிற அருமையான திறமைசாலிய இன்னும் தமிழ் திரையுலகம் வீணடிச்சுட்டு தான் இருக்கு.நச்சுன்னு அவருக்குன்னு கதாபாத்திரம் குடுத்து பெர்ஃபார்ம் பண்ண விட்டா மனுசன் பிண்ணி பிண்ணி எடுப்பார்.

தலைப்பு விளக்கம்- ட்ரைலர்ல பாத்தத விட பெரிசா படத்துல எதுவும் இல்ல.ஹிட் ஆனாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல ஆனா புதுசா எதுவும் எதிர்பார்த்து போயிடாதீங்க.

Saturday 14 January 2012

நண்பன் - ALL IS WELL

தமிழ் திரைப்பட வரலாற்றுல இதுவரை விஜய் அடிச்ச க்ளைமாக்ஸ் தான் வந்திருக்கு ஆனா அடி வாங்குற கிளைமாக்ஸோட வந்திருக்கிற முதல் படம் இதுதான்னு நினைக்கிறேன்.

நான் 3 idiots பார்க்கல அதனால நண்பன மட்டும் விமர்சனம் பண்றேன்.இந்த படத்த விமர்சனம் பண்ணனும்னா குறைஞ்சபட்சம் 3 தடவயாவது பாக்கணும். அவ்வளவு அழகான,நேர்த்தியான விசயங்களை படம் முழுக்க தெளிச்சிருக்காரு ஷங்கர்.”இது காலேஜ் பிரஷர் குக்கர் இல்ல”னு சொல்ற நாயகனுக்கும், "லைஃப் இஸ்  எ ரேஸ், நீ ஓடலீனா தோத்துருவ"னு சொல்ற வாத்தியாருக்கும், “இந்த சிஸ்டம வெச்சே படிச்சு உங்கள விட பெரிய ஆள் ஆகிக் காட்டறேண்டா” என சொல்லும் டப்பா உருட்டி மாணவனுக்கும் இடையே நடக்கும் வாழ்வியல்,கல்வியியல் ரீதியிலான மோதலும்,கோபமும்,நட்பும்,நன்றியும் தான் நண்பன்.படத்தோட மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களின் அமைப்பு தான் அதனால ஒவ்வொரு கதாபாத்திரமாவே பார்ப்போம்.



இலியானா- யாருப்பா அது எட்டாங்க் கிளாஸ் ல அசெம்ப்ளி லைன்ல கடைசில நிக்கற பொண்ண எல்லாம் ஹீரோயின் ஆக்கினது? மொசு மொசுனு இட்லி சாப்பிட்ற தமிழனுக்கு இந்த நூடுல்ஸ் சரிப்பட்டு வருமான்னு தெரில.பொண்ணுக்கு பெருசா ஒண்ணும் வாய்ப்பு இல்ல.பாட்டுல கூட பக்கத்துல ஆட்ற ஃபிகருங்கள தான் கண்ணு பாக்குது.தண்ணி அடிச்சுட்டு பேசுற சீன்ல மட்டும் அப்ளாஸ் வாங்குறாங்கோ.எனக்கொரு சந்தேகம் தெலுங்கல ஓடி முடிஞ்ச வண்டிங்கள(அனுஷ்கா,ஜெனிலியா,காஜல் அகர்வால்,இலியானா) எல்லாம் பெரிய ஃபிகர்ஸ்னு சொல்லி தமிழுக்கு கொண்டு வரீங்களே டைரடக்கர்ஸ் இவங்க எல்லாரும் தமிழ்ல ஆரம்ப காலத்துலயே இருந்தவங்க தான அப்ப வுட்டுட்டு இப்ப ஓல்டு பீஸ் ஆனப்புறம் 1 கோடி சம்பளம் குடுத்து கூட்டிட்டு வரீங்களே இதெல்லாம் அடுக்குமா? ஹீரோயின்ஸ எப்படி மெயிண்டெயின் பண்ணனும்னு தெலுங்கு படவுலக மக்கள பாத்து கத்துக்கங்கப்பா.ஸ்ரேயா,தமன்னானு எங்கள கொடுமைபடுத்தினதுக்கு இனிமேலாவது பிராயசித்தம் பண்ணுங்க.ஹன்ஸிகா பாப்பாவயாவது ஒழுங்கா மெயிண்டெயின் பண்ணுங்க.



ஷ்ரீகாந்த்- இதுவரைக்கும் வந்த படத்துலயே இதுல தான் ஸ்மார்ட்டா இருக்கார்.படிக்க முடியாம வருத்தப்படும் போதும்,நண்பன் முதலாவதா வரும் போது கடுப்பாவதும்,கேம்பஸ் இண்டர்வியூ போகாம தந்தையிடம் எப்படி தன் ஆசையை புரிய வைப்பதென தெரியாமல் மருகுவதிலும் சரி நல்ல பாவனைகளுடன் பண்ணிருக்கார்.அதுவும் ஜெயா அக்காவ கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்களோனு முழிக்கற சமயம் டாப்பு.

ஜீவா- எங்க எத செய்யணுமோ அங்க அத செஞ்சிருக்கார்.நல்ல முதிர்ச்சி.

சத்யன் - ஜட்டி பெல்ட்ல இருந்து டிக்‌ஷ்னரி எடுத்து தமிழ் பேசறதுல ஆரம்பிக்கற இவரோட அலப்பறை ‘நட்புல இதெல்லாம் சகஜமப்பா’னு சரண்டர்  ஆகற வரை வெளுத்து வாங்கறார்.டப்பா அடிச்சே பெரிய ஆள் ஆயிடலாம்னு சுத்திட்டிருக்குற சாம்பார் கதாபாத்திரத்துக்கு கனகச்சிதம் “I didn't do it.senthiiiil”, "sir they are still writing","வாங்கடா தோத்தாங்கோளிகளா", ”நட்புல இதெல்லாம் சகஜமப்பா”,உச்சகட்டமாக மேடைப் பேச்சு என வசன பாவத்துல (அதாங்க மாடுலேஷன்) பிச்சு எடுக்குறார்.அமெரிக்க வீடு,வேலை என பீத்திக் கொள்வது முதல் ஜீவாவிடம் பேண்ட் என்னுது என அவிழ்க்க போராடுவது  வரை இவர விட்டா இந்த கதாபாத்திரத்துக்கு சத்தியமா வேற யாரும் பொருந்த முடியாது.



சத்யராஜ் - நீண்ட இடைவெளிக்கப்புறம் சத்யராஜுக்கு சரியான வேட்டை.நாக்கு துறுத்தி வசனம் பேசும் பாங்கு,தன்னுடைய கொள்கையை விட்டுக் குடுக்காத அடம்,கண்டிப்பான வாத்தியார்னு பக்காவா செஞ்சுரி அடிச்சிருக்கார்.ரொம்ப அலட்டிக்காம மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது,விஜயிடம் மூக்குடைபடும்போது பொருமுவது, மகளோட பிரசவத்தப்ப பதறுவது, விஜயிடம் தன்னுடைய தோல்வியை கண்டிப்பான ஆசிரியராகவே வெளிப்படுத்துவது என சத்யராஜ்னு நினைச்சா நினைவுக்கு உடனே வரக்கூடிய கதாபாத்திரமா இதுல முத்திரை பதிச்சிருக்கார்.

விஜய் - அமீர்கான் பாத்திரத்துல விஜயா?னு புருவம் சுருக்குன ஆளுங்களுக்கெல்லாம் பலமாவே பதில் சொல்லியிருக்கார். மலங்க மலங்க முழிச்சுட்டு முதலாமாண்டு மாணவனா ராகிங் நடக்கறப்ப விடுதிக்குள்ள வராரு விஜய்.சீனியர்களின் ராகிங்கு பயந்து ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்கறாரு.பத்து எண்றதுக்குள்ள வெளிய வரணும்னு சீனியர் மிரட்டுறாரு.நமக்கு உடனே மனசுல என்ன தோணிச்சுனா தலைவர் பட்டாசான ஒரு பிண்ணனி இசையோட கதவை எட்டி உதைச்சு வந்து நிக்க போறாருனு தான் சத்தியமா தோணுச்சு.ஆனா படம் முடிச்சுட்டு வெளிய வர்றப்ப விஜய் ஒரு நெருங்கிய நண்பனா தோன்றுகிறார்.அது தான் அவரோட நடிப்பின் வெற்றி.இப்படி படத்தோட உயிரோட்டமாக விஜய பாத்து ரொம்ப நாள் ஆச்சு.ஒரே ஒரு விசயம் விஜய்க்கு உங்க விருப்பப்படி உருட்டுக்கட்டை,அருவா,துப்பாக்கினு நடிச்சாலும் இப்படி எல்லாருக்கும் பிடிக்கற மாதிரி படங்கள் கண்டிப்பா பண்ணுங்க.விஜயை எந்த உறுத்தலும் இல்லாம இரசிக்க முடிஞ்சது தான் மகிழ்ச்சி (நல்லவேளை சூர்யா நடிக்கல).

ஷங்கர்- அழகான படத்த நேர்த்தியா,அதன் இயல்பு கெடாம,சிறந்த பாத்திர தேர்வோட தந்ததுக்கு நன்றி.

எஸ்.ஜே.சூர்யா, அமெரிக்க மாப்பிள்ளை,அஷ்க லஷ்கா பாட்டுல ஷங்கர் தன்னைத் தானே ஓட்டிகிட்டது எல்லாம் வானவெடியில் சில பொறிகள்.

உறுத்தல்கள்:
1)  பஞ்சவன் பாரிவேந்தன், சேவற்கொடி செந்தில்னு தமிழ் பெயர்கள் வெச்சது மகிழ்ச்சி ஆனா ”பாரிவேந்தனா? யக் (yuck)”னு இலியானா சொல்றப்ப (அப்படி சொல்லக் கூடிய சைலன்சர்கள் உண்டுனு வைங்களேன்) பொடனில ஒரு போடு போட்ருந்தா சந்தோசபட்ருப்போமே.ஒரு வாட்டி தமிழர்கள் கிட்ட கெட்ட பேர் வாங்கினது போதாதா? (அலோ பாஸ்... நான் ஐ.ஜே.கே ஆள் இல்லப்பா சங்ககால தமிழ் பெயர்ங்கிறதால் கேட்டேன்.நான் அந்த பப்ளிசிட்டி கூட்டத்துல சேர்த்தி இல்ல)

2) ஆளாளுக்கு பேண்ட் அவுக்கறது நல்லாலீங்க பாஸ்.

3) சத்யனின் மேடை பேச்சுல டபுள் மீனிங்க தவிர்த்துட்டு நேரடியாவே பலான பலான டயலாக்ஸ விளக்கத்தோட எடுத்து விட்டதுக்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செஞ்சிருக்கலாம் (குடும்பத்தோட போனதால வந்த ஃபீலிங்).

நண்பன் - ALL IS WELL








Friday 13 January 2012

தை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்புகள்

சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி ஆபாசத்துக்கு துணை போக வேண்டாம் தமிழர்களே... தை 1 தான் தமிழ்புத்தாண்டென அறிஞர்கள் அறுதியிட்டு கூறுவதை படித்துவிட்டு தெளிவான சிந்தனையுடன் தை புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.கீழே உள்ள இணைப்புகளை வாசித்தால் உண்மை விளங்கும் நண்பர்களே.




பஞ்சர் ஒட்டும் தாத்தா

”பூகோள ரீதியாகவும்,வரலாற்று ரீதியாகவும் தமிழகத்திற்கு சொந்தமான தேவிகுளம்,பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்” இது நம்ம தமிழினத் தலைவர்,முத்தமிழ் அறிஞர்,தலைவர் கருணாநிதியுடைய அறிக்கை.






ஏனோ தெரில இத படிக்கறப்ப ஒரு விசயம் நியாபகத்துக்கு வந்துது.கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கலைஞர் தொலைகாட்சில ஏதோ ஒரு எழவுக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தினாங்க அதுல நம்ம ’இட்லி புகழ்’ குஷ்பு அக்கா இப்படி பேசுச்சு ”தலேவர் கலாய்ஞரோட படாங்கல் பத்தி அவர் வார்தைல சொல் வேனுமென்ரால் ஓடீச்சீ ஓடீச்சீ வெற்றியின் எல்லக்கே ஓடீச்சீ”

தலைவரே ட்யூப் பல எடத்துல பஞ்சராயி நஞ்சு போச்சு அதுக்கு இன்னும் ஏன் முக்கி முக்கி காத்தடிக்க ட்ரை பண்றீங்க?

Thursday 12 January 2012

பழைய கதையாகப் போகும் ஸ்பீக்கர்கள்

தொலைக்காட்சியின் வரலாறு என்பது நம் ஒவ்வொருவர் வீட்டோடு சம்பந்தப்பட்டது தான். கறுப்பு வெள்ளை,வண்ணம்,பெரிய கறுப்பு டப்பா,குட்டி தொலைக்காட்சி,எல்.சி.டி, இப்பொழுது எல்.இ.டி என காலந்தோறும் அதன் தொழில்நுட்பம் மெருகேறிக் கொண்டே இருக்கின்றது.தொலைக்காட்சியிலிருந்து துல்லியமான ஒலிக்காக சில வருடங்களாக 2.1,5.1,7.1 என ஒலிபெருக்கிகளின் படையெடுப்பு திரையரங்கு போன்ற அனுபவத்தை வீட்டிலேயே தந்து கொண்டிருந்தது. ஆனால் தற்சமயம் இதன் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது.அது என்ன?

சென்னையில் ஒரு புகழ்பெற்ற அடுக்குமாடி விற்பனை வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கிகள் விற்பனை கூடத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதன் பணியாளர் எங்களை அழைத்து உங்களுக்கு ஒரு டெமோ காட்டுகிறேன் வாருங்கள் என அழைத்து ஒரு அறைக்கும் அமர் வைத்தார்.எதிரே ஒரு 46 இன்ச் தொலைக்காட்சி அதன் இருபக்கமும்,கீழேயுமாக துணியால் மூடப்பட்ட ஸ்பீக்கர்கள்.ஒரு ஒளி/ஒலிக்காட்சியை ஓட விட்டார்.அறையே அதிரும் அளவு எல்லா சத்தங்களும் எங்களை சுற்றிச் சுற்றி வந்தது.நாங்களும் பே என பார்த்துக் கொண்டிருந்தோம்.சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த அவர் மூடப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் துணியை எடுத்தார்.அப்பொழுது வாயைப் பிளந்தவர்கள்தான் வெளியே வரும் வரை மூட முடியவில்லை.ஆம் அங்கே எந்த ஒலிபெருக்கியும் இல்லை.வெறும் துணிதான் இருந்தது.பிறகுதான் விளக்கினார்கள் 10 வருட ஆராய்ச்சிகளுக்கு  பிறகு ஒலிபெருக்கிகள் எதுவும் இல்லாமல் தொலைக்காட்சியிலிருந்தே DTS போன்று ஒலிகள் வெளிப்பட வைத்திருக்கின்றனர்.அதற்குப் பெயர் BOSE VIDEO WAVE ENTERTAINMENT SYSTEM. தொலைக்காட்சி பெட்டிக்குள்ளயே 16 ஒலிபெருக்கிகள் வைத்துள்ளனர்.இனி 6,7 ஒலிபெருக்கிகளை சுவரெங்கும் ஆணியடித்து மாட்ட வேண்டாம் ஒரே ஒரு தொலைக்காட்சி போதும்.





#என்ன பிரச்சனைனா இந்த நிறுவனம் சென்னை,பெங்களூரு இப்படி பெரிய ஊர்ல தான் கடை வெச்சிருக்காங்க.கோயம்புத்தூர்ல கூட இல்லன்னா பாத்துக்கங்க.
#ஒரே ஒரு அளவுல தான் பொட்டி இருக்குது. 46 இன்ச்- இதவிட சின்னது இல்லபா.
#இதன் விலை ஜஸ்ட் ரூ.4,79,000 மட்டுமே

இனி வரும் வருடங்களில் இந்த தொழில்நுட்பம் பரவலாகி ஒலிபெருக்கிகள் எல்லாம் காலாவதியாகிவிடும்.






Tuesday 10 January 2012

சென்னையில் நான் - அருந்ததிராயின் உரை

கடந்த வாரம் முழுக்க சென்னையில் இருந்ததால் என் பதிவையும்,நான் பின்தொடர்கிற பதிவுகளையும் கவனிக்க முடியாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.இருப்பினும் வாழ்வின் சில நல்ல தருணங்களை இந்த பயணம் அளித்தது மறக்க முடியாதது.அதில் முக்கியமான ஒன்று அருந்ததி ராய் அவர்களின் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.சனிக்கிழமை மாலை சென்னை தி.நகரில் உள்ள ஜி.ஆர்.டி அரங்கத்தில் காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக 7 புத்தகங்களை வெளியிடும் விழா நடைபெற்றது.அதில் புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்களின் ‘காடாற்று’,’THE SECOND SUNRISE’, அருந்ததி ராய் அவர்களின் ‘THE BROKEN REPUBLIC’ ன் தமிழாக்கமான ‘நொருங்கும் குடியரசு’,காஷ்மீர் பிரச்சனையை மையமாகக் கொண்டு பஷரத் பீர் எழுதிய ‘ஊரடங்கு இரவு’, ஈழத்தில் இலங்கை அரசின் வெறியாட்டங்களை வெளிக்கொணரும் கார்டன் வைஸ் எழுதிய ’கூண்டு (THE CAGE)’, தலித்துகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு ஸ்டாலின் இராஜாங்கம் எழுதிய “சாதியம்:கைகூடாத நீதி”,கோ.இரகுபதி எழுதிய ’தலித்களும்,தண்ணீரும்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. புலம்பெயர் எழுத்தாளர் சேரன் ருத்திரமூர்த்தி அவர்கள் என்னுடைய நண்பர் சதீஷ்குமாருக்கு முகநூல் மூலம் நண்பராகினார். ஆகையால் சதீஷ்குமார் மூலம் நான் பங்கேற்ற முதல் புத்தக வெளியீட்டு விழா இது.புத்தகங்கள் வெளியிடப்பட்டு நிகழ்ச்சி நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்க திடீரென்று அரங்கத்தின் உள்ளே அமர்ந்திருந்த 20 பேர் எழுந்து “காலச்சுவடு டௌன் டௌன்” “ஆண்டி தலித்,ஆண்டி ஈழம், ஆண்டி முஸ்லிம்-காலச்சுவடு டௌன் டௌன்” “R.S.S ன் கைக்கூலி காலச்சுவடு டௌன் டௌன்” என முழக்கமிட்டுக் கொண்டு பதாகைகளை பிடித்தனர். எனக்கும் சதீஷுக்கும் என்ன நடக்கிறதென புரியவில்லை.பதிப்பாளர் பெண்மணி புத்தகத்தை படித்துப் பாருங்க என சொல்லிக் கொண்டு அவர்கள் அருகில் வந்தார்.எதிர்ப்புக் குழுவிலிருந்த ஒருவர் ‘நீங்கள் ஐ.நா வின் அறிக்கையை புறக்கணிக்கின்றீர்கள்.தலித்,தமிழ்,இஸ்லாம் மீது பாசம் உள்ளது போல வேடம் போடுகிறீர்கள்’ என வாதிட்டார் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்திய பின் அவர்கள் வினியோகித்திருந்த துண்டுப் பிரசுரத்தை பார்த்த பொழுது காலச்சுவடின் மீது பலமான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தனர்.இந்த பதிப்புலக அரசியலுக்கு நான் புதிது என்பதால் தொடர்ந்து நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கினோம். எங்களை வசீகரித்த அருந்ததி ராய் அவர்களின் பேச்சிலிருந்து சில துளிகள்.



தன்னுடைய புத்தகத்தை பற்றி அவர் பேசியது...

“தமிழில் பேச முடியாததற்கு மன்னிக்கவும்.எனக்கு மலையாளம் தான் தெரியும் ஆனால் தற்சமயம் மலையாளம் இங்கே விரும்பப்படுவதில்லை எனத் தெரியும் ஆகையால் ஆங்கிலத்தில் தொடர்கிறேன்.உலகத்தில் எங்கெங்கெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு இலவச சந்தை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் போரின் மூலம் ஜனநாயகம் உருவாக்கப்படுகிறது.அதன் மூலம் இலவச சந்தையும் நிர்மானிக்கப்படுகிறது.இந்தியா ஏற்கனவே கார்ப்பரேட்டுகளின் செல்லப் பிள்ளையாக இருப்பதால் அது தேவையில்லை.பணம் எப்படி ஜனநாயகத்தை விழுங்கும் என தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என நினைக்கின்றேன். நம் நாட்டின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் ஹார்வார்டில் படித்தவர் அவருக்கு எண்ணிக்கைகளும்,விடைகளும் தான் முக்கியமாக இருக்கிறது.மக்களை பற்றி அவர் கவலைப்படுவதில்லை.அவர் இந்திய கிராமங்களில் இருக்கும் 70 கோடி மக்களும் நகரத்திற்கு பெயர்ந்து விட வேண்டும் என விரும்புகிறார்.தந்தேவாடாவில் ஒரு ஆதிவாசி காட்டில் பழங்களோ,விறகோ பறித்தால் அவர் தவறு செய்ததாகக் கூட சொல்ல மறுக்கின்றனர்,அவரைக் குற்றவாளி என்று தான் சொல்கின்றனர்.அரசாங்கம் அறிவித்திருக்கிற முகாம்களுக்கு இடம் பெயராத ஆதிவாசிகளை அவர்களை நக்ஸலைட்டுகளாக பார்க்கின்றனர்,எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொல்கின்றனர்.ஏற்கனவே அங்கு விமானத்தளம்,படைத்தளம் எல்லாம் கட்டி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.இந்த மக்கள் அவர்களிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது.ஆதிவாசி இனத்திலிருந்து முதல் முதலாக ஒருவர் நிருபராக உருவானார்.அவர் ஆதிவாசி மக்களிடம் உள்ள பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டு அதை பத்திரிக்கைகளில் எழுதினார்.இந்த அரசு அவரை கைது செய்தது.அவரை படிக்க வைத்த அவருடைய உறவுக்கார பெண்ணையும் தேடியது.இதை தெரிந்து கொண்ட அவர் காடுகள் வழியாக தப்பித்து டெல்லிக்கு சென்று விட்டார்.அங்கே நீதிமன்றத்தில் சரணடைந்து பாதுகாப்பு அளிக்கக் கோரினார்.நீதிமன்றம் காவல்துறையின் மீது நம்பிக்கை இருப்பதாக சொல்லி காவல்துறையினருடன் அனுப்பி வைத்தது.சில நாட்களில் நோய் வாய்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி அவரை தனியார் மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றனர்.அங்கே அவர் பலமுறை கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும், பெண்ணுறுப்பில் கற்களும்,குப்பைகளும் இருப்பதாகத் தெரிவித்தனர். குடியரசு என்கிற தத்துவத்தையே பொய்யாக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளை தான் இந்த புத்தகத்தின் கட்டுரைகளில் விளக்கியிருக்கிறேன்.பத்திரிக்கைகளும்,மீடியாக்களும்,எழுத்தாளர்களும், அறிவாளிகளும் தாங்கள் யாருக்கும் எதிரியாகிவிடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருக்கின்றனர்.அதனால் தான் ஈழத்தில் படுகொலைகள் நடந்த போதும்,காஷ்மீரில் போராட்டங்கள் நடந்த போதும் எல்லோரும் வேடிக்கை பார்க்க முடிந்தது.அநியாயங்களை திட்டி எழுதுபவர்களை எல்லோரும் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் என விமர்சிப்பது உண்டு.ஒரு அறையில் 10 பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அதில் 7 பேர் பசியால் வாடும் ஏழைகள்,2 பேர் ஒரளவு வசதி படைத்தவர்கள்,ஒருவர் கோடீசுவரர் என வைத்துக் கொள்வோம்.அந்த கோடீசுவரரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? அல்லது பசியால் வாடும் 7 பேரைப் பற்றி எழுதுவது நன்மையைத் தருமா? இதில் யார் எதிர்மறையாய் செயல்படுபவர்கள்? நாம் அனைவரும் எப்படிப்பட்டவர்கள் என்றால் மலைப்பாதையில் செங்குத்தாக கீழே இறங்கும் சாலையில் ப்ரேக் பிடிக்காத பேருந்தில் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது என்ன பாட்டு பாடலாம் என சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் போன்றவர்கள்.”

அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

இந்த நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆட முக்கிய காரணமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான்.அதை எதிர்க்காதவர் எப்படி ஊழலை எதிர்க்க முடியும்? ஆதிவாசிகளின் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை இந்த ஊழல் எதிர்ப்பு மாயை மூலம் கார்ப்பரேட் மீடியாக்கள் திசைதிருப்பிவிட்டனர். ராம்லீலா மைதானத்தில் அத்தனை பேனர்களை கட்டிய அவர்கள் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து ஒரு பேனர் கூட கட்டவில்லை. இவர்கள் மீது நம்பிக்கையில்லை.

லோக்பால் பற்றி...?

லோக்பால் அமைப்பு எல்லா அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவித்துவிடுகிறது.சீரான வளர்ச்சிக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே சிறந்ததாகும்.இப்படி குவித்து வைப்பதால் அதுவும் கடிவாளம் போலாகும் என்பதே உண்மை.லோக்பாலின் வரம்புக்குள்ளிருப்பவர்கள் நேர்மையானர்வகளாக கருதப்படுவார்கள்.அதை விட்டு வெளியில் இருப்பவர்கள் சட்டத்தை ஏமாற்றுபவர்கள் ஆவர்.அப்படி பார்த்தால் இந்த நாட்டில் ஏழை மக்கள் தான் பெரும்பாலும் சட்டத்திற்கு புறம்பானவர்களாக கருதப்படுகின்றனர்.ஏனெனில் அவர்களிடம் தாங்கள் தங்கும் இடத்திற்கோ,வாழ்வாதாரத்திற்கோ எந்த பத்திரங்களும் இருப்பதில்லை.அவர்களை அப்புறப்படுத்தி பெருநகர வளர்ச்சிக்கு வித்திடவே லோக்பால் பயன்படும்.ஏழை மக்கள் மீது நடுத்தர வர்க்கம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவே இது பயன்படும்.

2 ஜி வழக்கு சரியான திசையில் செகிறதா?

ஊழலுக்கு காரணமான கார்ப்பரேட்டுகள் தண்டிக்கப்படாத வரை அது சரியான திசை அல்ல.

பெரும்பான்மை ஜனநாயகத்தில் இருந்து பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு நாம் நகருவது எப்படி?

இது ஒரு மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளாக வேண்டிய தலைப்பு. பெரும்பான்மை ஜனநாயகம் எப்படி பிழையாகும் என்றால் பாபர் மசூதியை இடிக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நடக்கும்? தலித்துகளுக்கு உரிமை கொடுக்கலாமா? வேண்டாமா? என ஓட்டெடுப்பு நடத்தினால் என்னாகும்? .

இன்னும் அவர் நிறைய பேசினார்.ஆனால் எனக்கு நினைவில் இருந்த வரை எழுதியிருக்கின்றேன்.

பின்குறிப்பு: இதழ் வெளியீட்டின் போது முழக்கமிட்டவர்கள் மே 17 இயக்கத் தோழர்கள் என இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அவர்களின் குற்றச்சாட்டுகள் எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் சேர்ந்து கத்தியிருக்கலாம்.படிக்கிற புத்தகத்தின் எழுத்தாளர்களை நினைவு வைத்துக் கொள்ளவே தடுமாறுகிறேன் இதில் பதிப்பகம் பற்றிய விவரங்கள் நிச்சயமாய் எனக்கு புதிதுதான்.மே 17 இயக்கம் மனதிற்கு நெருக்கமான இயக்கம் என்பதால் இனி வரும் காலங்களில் சற்று கவனமாக இருப்பேன் என நினைக்கின்றேன்.





நொய்யல்




கழிவுகளின்
பாரம்
தாளாது
நிற்கிற
நொய்யலாறு போல...
நிற்கிறது
என் மனமும்
கடந்த காலத்தை
சுமந்து...
என்னை
நகர வைக்கும்
’சிறுதுளி’
எங்கிருக்கிறது?
எதுவாயிருக்கிறது?

Wednesday 4 January 2012

சில விந்தையான கின்னஸ் சாதனைகள்

நான் பார்த்து வியந்த சில வியப்பூட்டும் கின்னஸ் சாதனைகள் இதோ உங்களுக்காக.

உலகத்துலயே பெரிய வாய்


சில பேருக்கு வாய் நீளம் வாய் நீளம்னு சொல்லுவாங்க ஆனா இவர் அளவுக்கு முடியாது சும்மா இல்ல 17 செ.மீ.

நாக்குல நரம்பிருக்கா?



வாயால வெயிட்டா பேசலாம் ஆனா இப்பிடி வெயிட்டா தூக்க முடியுமா?

சிம்ரன் செத்தா போங்க



கொடி இடைனு சொன்னது இதத்தான்.குழைந்தைய தூக்கி வெச்சா கமுக்கமா உட்காந்துக்கும் போல.வெறும் 15 இன்ச் தான் மக்களே.

Tuesday 3 January 2012

அரைகுறை



அரைகுறை ஆடைப்பெண்கள்
அடங்க மறுக்குது ஆண்மகன் கண்கள்
அடக்கச் சொல்லுது பெண்ணியம்
குடி குடியை கெடுக்குமென
சாராய போத்தல் சொல்வது போல...

ஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

வெகுநாட்களாக என்னுடைய ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது எனத் தெரியாமல் பல வகையில் குழம்பினேன்.இன்று ஓய்வாக இருந்த சமயம் செய்த சிறு முயற்சி பலனளித்துவிட்டது.அதை உங்களுடன் பகிர்கின்றேன்.



கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1) உங்கள் அலைபேசியில் செயலிகளை விற்பனை செய்ய ஒரு செயலியை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும்.அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை.அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை அழுத்தவும்.

3) தமிழ் தொடர்புடைய செயலிகள் (அகர முதலி, தட்டச்சு) பட்டியல் வரும்.அதில் உங்களுக்கு பிடித்த தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்து பதிவிறக்கவும்.நான் தேர்வு செய்தவை தமிழ் விசை, பணிணி, கே.எம் தமிழ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட். இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

4) உதாரணத்திற்கு சாம்சங் கைபேசியில் தமிழ் விசையை எடுத்துக் கொள்வோம்.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் நிறுவிக் கொள்ளவும்.

5) உங்கள் கைபேசியின் மெனுவை திறந்து SETTINGS  பகுதிக்கு செல்லவும்.

6) SETTINGS ல் உள்ள LOCALE AND TEXT என்னும் தேர்வை திறக்கவும்.அதன் உள்ளே நீங்கள் பதிவிறக்கம் செய்த தமிழ்விசை செயலி பட்டியலிடப்பட்டிருக்கும்.அதனை தேர்வு செய்துவிட்டு மாற்றங்களை சேமிக்கவும்.

7) SETTINGS லிருந்து வெளியேறி புதிய குறுந்தகவலை தட்டச்சு செய்யத் தொடங்கவும்.வார்த்தைப் பெட்டியில் (TEXT BOX)  விரலை வைத்து அழுத்திப் பிடித்தால் INPUT MODE என்னும் தேர்வு திரையில் வரும் அதை திறக்கவும். அதன் உள்ளே SAMSUNG KEYPAD, TAMIL VISAI ஆகியவை இருக்கும்.தமிழ் விசையை தேர்வு செய்யவும்.தமிழ் தட்டச்சுப் பலகை தோன்றும்.மகிழ்ச்சியுடன் தமிழில் தட்டச்சு செய்து தமிழை பரப்புங்கள்.

FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE "about:config" WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS "USE BITMAP TO SEE COMPLEX FONTS" IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

ENJOY TAMIL FONTS IN MOBILE.  

Monday 2 January 2012

வஞ்சம்-பகுதி 6

                                                        பகுதி 6-மாளிகை

”சிவா சிவா”
மார்பில் அழுத்தி உலுக்கியதில் கண்விழித்து எழுந்தான்.
சிவாவைச் சுற்றி நால்வரும் அமர்ந்திருந்தனர்.தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் கடைசியாக என்ன நடந்ததென யோசித்துக் கொண்டே கைகளைப் பார்த்தான்.கயிறால் இறுக்கிக் கட்டியிருந்ததால் மணிக்கட்டு சிவந்திருந்தது, வலி எடுத்ததால் லேசாக மணிக்கட்டை சுற்றினான்.தலை சுற்றலுடன் நிமிர்ந்து பார்த்தவன் முன் ஐசுவர்யாவும் மற்ற நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.ஐசுவர்யா அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.

“தலைவலிக்குதா சிவா?” தலையை தடவிக் கொடுத்து பரிவுடன் கேட்டாள்.
”இல்ல,பரவால்ல... உனக்கு ஒண்ணும் ஆகலியே?” கொஞ்சம் சுயநலமாய் கேட்டு விட்டதால் வெட்கி “யாருக்கும் எதுவும் ஆகலல?” என வினவினான்.

“ஒண்ணும் ஆகலடா,எல்லாரும் இப்ப தான் முழிச்சோம்.அந்த காட்டுவாசிப் பயலுங்க இங்க கொண்டு வந்து போட்டுட்டானுங்க” விக்கி.

“இது என்ன இடம்னு கூடத் தெரியல ஏதோ பழைய வீடு மாதிரி இருக்கு.வெளிய போறதுக்கு ஏதாது வழி இருக்கான்னு பார்க்கணும்” சுதாகர் சொன்னவுடன் தான் சிவா தாங்கள் எங்கே அடைபட்டிருக்கிறோம் என பார்த்தான்.



ஓரெழுத்தில் சொன்னால் அது அரண்மனை.ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் பக்கம் பக்கமாய் வர்ணிக்கலாம்.ஒரே சீராய் செதுக்கப்பட்ட கருங்கற்களினால் ஆன சுவர்கள் குறைந்தபட்சம் முப்பதடி உயரமாவது இருக்கும்.ஒவ்வொரு கல்லின் நான்கு முனைகளிலும் கொடிகளைப் போல வளைவுடன் செதுக்கப்பட்ட கோடுகள் சுவற்றின் மீது முல்லைக் கொடியை படற விட்டது போல இருந்தது.ஆங்காங்கே குடம் சுமக்கும் மாந்தர்களும்,பிள்ளையை கொஞ்சும் அன்னைகளும் ஓவியங்களாய் மாட்டப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தது வாசற்கதவருகே.கதவின் கணம் ஒரு யானை அளவுக்கு இருக்கும் போல அனைவரும் சேர்ந்து இழுத்தும்,தள்ளியும்,முட்டியும் பார்த்து தூசி கூட அசைந்து கொடுக்கவில்லை.அறையின் இருமூலைகளும் படிக்கட்டுகள் தொடங்கி மேல்தளத்திற்கு சென்றது.ஒவ்வொரு படிக்கட்டிலும் சேர்ந்தார் போல 10 பேர் ஒன்றாக ஏறலாம்.முழுக்க முழுக்க மரவேலைப்பாடால் ஆனவை.கைபிடி சாரத்தை வடிவமைக்கவே எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை அவ்வளவு நேர்த்தியான வளைவுகள் சீராக இருந்தன.படிக்கட்டுகளுக்கு நடுவே கீழ்தளத்தில் ஓர் அறை தென்பட்டது அவ்வறை கணமான பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.பத்தடிக்கு ஒரு சித்திரமும்,கூரையில் கூட வேலைப்பாடுகள் நிரம்பியிருந்ததும் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது.வெளியே செல்ல வழி தேடி மாளிகையை சுற்றியவர்கள் பிரமித்துப் போனார்கள்.ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் நின்று மாளிகையை இரசித்துக் கொண்டிருந்தனர்.மாளிகை அவர்களை ஈர்த்துக் கொண்டது என சொல்வது தான் பொருத்தம்.

ஐசுவர்யா மட்டும் மாளிகையை ஆராயவில்லை.சிவாவின் பின்னே அவன் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.
“சிவா”
“ம்...” சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஐசுவர்யாவின் பக்கம் திரும்பினான்.
“என்னை மன்னிச்சிரு சிவா” தலையை கவிழ்ந்தபடி கூறினாள்.
“எதுக்குடா செல்லம்?” அவள் கண்ணத்தை உள்ளங்கையில் தாங்கியபடி முகத்தை நிமிர்த்தினான்.
"என்னாலதான் இதெல்லாம்" அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"ஹே என்ன உளர்ற”
“நான் தான ஏற்காடு போலாம்னு ஆரம்பிச்சேன் அதான் இப்ப இப்படியெல்லாம் நடக்குது” விசும்பத் தொடங்கினாள்.
“ப்ச்... அப்படி எல்லாம் இல்லமா.உண்மைய சொல்லணும்னா நாங்க தான் தப்பு பண்ணிட்டொம்.உங்க கிட்ட முன்னாடியே எச்சரிச்சிருக்கனும்.அந்த கிறிஸ்டியும்,கூட இருந்தவனும் தான் பஷிர கடத்திருக்கானுங்க.அத உங்க கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா நீங்களும் ஜாக்கிரதையா இருந்திருப்பீங்க” சிவா நெற்றியில் கை வைத்து சுவரில் சாய்ந்தான்.
சுவரில் சாய்ந்தவன் மாரில் ஐசுவர்யா சரிந்தாள் “சிவா ஐ லவ் யூ” என்றாள்.
“ஐ டூ லவ் யூ” என சிவாவும் அவளை அணைத்தான்.
“எப்பவுமேவா?”
“சாகற வரைக்கும்டி”.
 ஐசுவர்யாவின் முகம் கறுத்தது.சட்டென நினைவு வந்தவனாய் “ஐசு, பாப்பாக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே”
“உன் கொழந்த பத்திரமாத்தான் இருக்குடா” நாணத்துடன் புன்னகைத்தாள்.
”சரி வா வெளிய போற வழிய தேடுவோம்” அவளை அழைத்துக் கொண்டு சிவா வழி தேடத் தொடங்கினான்.

வீட்டினுள் ஒரு ஈ,எறும்பு கூட இல்லை,நிஜமாகத்தான்.ஒரு தூசி கூட இல்லை  மூலை,முடுக்கு உட்பட அனைத்தும் துடைத்து சுத்தமாய் பளிச்சிட்டது.படுக்கைகளும்,சாமான்களும் சீராக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால் யாரேனும் வீட்டினுள் இருக்க வேண்டுமெனத் தோன்றியது.முதல் தளத்திலும்,இரண்டாவது தளத்திலும் வழி தேடித் தேடி கால்  வலித்தது தான் மிச்சம்.இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு கதவு,ஜன்னல் கூட திறந்திருக்கவில்லை.திறக்க முயற்சித்து கை காலெல்லாம் சோர்ந்து விட்டது.

சிவா சட்டென ஏதோ நினைத்தவனாய் கால் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான்.சிக்னல் சுத்தமாக இல்லாததால் வேலை செய்யவில்லை,”விக்கி உன்னொட மொபைல் எடேன்”
வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகக் கூட இவ்வளவு தூரம் நடந்திராத விக்கி எரிச்சலடைந்தான்.

“ஹீரோ சார்,எல்லாம் நீங்க மல்லாக்க படுத்து தூங்கிட்டிருந்தப்பவே ட்ரை பன்ணியாச்சு,ஒண்ணும் வேலைக்காகல”
சிவா அசிங்கப்பட்டுவிட்டோமே என தலை குனிய அனைவரும் சிரித்துவிட்டனர்.

திடீரென்று “ஆஆஆஆ.........” வென மாளிகையே அதிர்வது போல அடித்தொண்டையிலிருந்து ஓலமிடும் ஓசை கேட்டது.ஒரு இள வயது பெண்ணின் குரலாய் இருந்தது அது.ஐவருக்குள்ளும்.ஊடுருவிச் சென்று திடுக்கிட செய்த அந்த ஓலம் மீண்டும் ஒருமுறை கேட்டது.அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினர்.இரண்டாவது தளம் நோக்கிச் செல்லச் செல்ல ஓலம் கூடிக்கொண்டே இருந்தது.கதவில்லாத ஒரு அறையில் இருந்து சத்தம் வருவதை அறிந்து அதனுள் சென்றனர்.ஓர் அழகிய இளம்பெண் அலறிக் கொண்டே ஓடியதைக் கண்டனர்.15 அல்லது 16 வயது இருக்கும்.ஓடிக் கொண்டே இருந்தவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.புலியிடமிருந்து தப்பிக்க வழியில்லாத மானின் விழிகளைப் போல அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது.தங்களைத்தான் பார்த்தாளா ? எதற்காக ஓடுகிராள்? என சுற்றும் முற்றும் பார்த்தனர்.அறையின் முனையில் இருந்த உப்பரிகையில் நின்றாள்.ஏதேனும் விபரீதம் செய்துவிடப் போகிறாளோ என தடுக்க முயற்சிக்கும் முன்னரே உப்பரிகையில் இருந்து வெளியே குதித்து பள்ளத்தாக்கில் விழுந்து சிதறினாள்.அடுத்த கணமே மூவரின் பின்னிருந்து வந்த ஒரு கரிய உருவம் ஒன்று அவர்களை கடந்து சென்று உப்பரிகையில் இருந்து கீழே குதித்தது.என்ன நடக்கிறது என உணரும் முன்னரே நடந்துவிட்ட இரு தற்கொலைகளும் ஐவரையும் திடுக்கிடச் செய்தது.இதற்கு முன் மாளிகை முழுவதும் தேடிய பொழுது யாரும் இல்லையே? எப்படி வந்தார்கள்? ஏன் குதித்தார்கள்?  குழம்பிப் போன அனைவரும் மாடிப்படிகளில் சென்று அமர்ந்தனர்.

அந்த உப்பரிகை? அதன் வழியாக வெளியே செல்ல முடியுமா எனப் பார்க்க சிவா ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தான்.சற்று உப்பரிகையுடன் இருந்த அறை நாலாபக்கமும் சுவர்களால் மூடப்பட்டிருந்தது.

                                                                                                    -காத்திருங்கள்.

இதுவரை நடந்தவற்றை தெரிந்துகொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்