Sunday 30 October 2011

பறிபோகும் உரிமைகள்-மீண்டும் ஓர் சதி

NEET - National Eligibility cum Entrance Test. மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு ஏவி விட்டிருக்கும் மற்றுமொரு சாத்தான். 12 ம் வகுப்பு முடிந்தவுடன் பெரும் மதிப்பெண்கள் எடுத்த பல மாணவர்கள் ஆசைப்படும் முதல் விடயம் மருத்துவராக வேண்டும் என்பது தான். இந்த ஆசையும், வேகமும் ஆங்கில வழியில் படித்தவருக்கும், தமிழ் வழியில் படித்தவருக்கும் வேறு எந்த மொழி வழி படித்தவருக்கும் உண்டு. அப்படி ஆசைப்படுவதில் தவறு ஏதுமில்லை என அனைவரும் அறிவோம். இனி அப்படி மருத்துவராய் ஆவதற்கு அயல் மொழியில் தான் படித்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தகுதி ஆனால் அதை ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமமாய் ஆகும். NEET என்பது இந்தியா எங்கும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்த இருக்கும் நுழைவுத் தேர்வு. இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு, அதன் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் அனுமதி. இந்தத் தேர்வு 2012 ம் ஆண்டு மே மாதம் முதல் அமலுக்கு வருகின்றது. மேம்போக்காக நல்ல விசயமாகத் தெரியலாம் ஆனால் இதில் உள்ள களவானித் தனங்களைப் பார்த்தால் நெஞ்சு எரிகின்றது.  

இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் பயிற்று மொழி எனப்படும் MEDIUM OF INSTRUCTION பலவாக உள்ளது. பணக்கார மற்றும் உயர்நடுத்தர வகுப்பு மாணவர்கள் பயிலும் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம், மத்திய அரசின் பாடத்திட்ட பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி, கீழ் நடுத்தர மற்றும் ஏழை பிள்ளைகள் பயிலும் மாநில மொழியை பயிற்று மொழியாய் கொண்ட பள்ளிகள். ஆனால் இந்த NEET நுழைவுத் தேர்வு நடத்தப் படுவது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே. அதாவது இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வழியில் படித்திருந்தால் அவர்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனவு. இதே நிலை தான் மற்ற மாநில மொழியில் பயின்ற மாணவர்களுக்கும். கோவா, மகாராட்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பை “its not practically possible”  என்ற ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளி விட்டது மருத்துவக் கவுன்சில். கேள்வித் தாள்களை தமிழில் மொழி மாற்றம் செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற முட்டாள்த்தனமான கவுன்சிலை என்ன செய்யலாம்? 

நாடு முழுமைக்கும் ஒரே தேர்வு என்றால் அலோபதியின் தார்மீக மொழியான ஆங்கிலம் மட்டும் இல்லாமல் அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஹிந்தி எதற்காக? நீ டாக்டர் ஆகணும்னா ஒன்னா ஹிந்தி படி இல்ல இங்கிலீஷ் படி உன் தாய் மொழிய மறந்துடு என செருப்பால் அடித்தாற் போல சொல்கிறது மத்திய அரசு. இதன் அடுத்த கட்டங்கள் என்ன தெரியுமா? படிப்படியாக மாநில மொழிவழிக் கல்வியை ஒழித்துவிட்டு ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே இருக்கும். அடுத்து பிள்ளைகள் வீட்டில் தமிழை மறக்கும். அவர்கள் அடுத்த தலைமுறையாய் உருவெடுக்கும் போது தமிழும் மறையும். மாநில மொழி உணர்வை மறக்கடித்து நிரந்தர அடிமைகளாக ஆகப் போகின்றோம். விரைவில் பொறியியலுக்கும் இது நடக்கலாம்.தமிழ் புத்தகங்களை பரணில் போடுங்கள். சமச்சீர் கல்வியை குப்பையில் போடுங்கள்.தமிழக அரசு இந்த திட்டத்திற்கு தலையாட்டினால் “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”
                                                   -மரு.மு.சுந்தர பாண்டியன்

Saturday 29 October 2011

சொட்டுது சொட்டுது...



சொட்டுது சொட்டுது துளித்துளியாய்...
விண்ணிலிருந்து ஓர் ஆரவாரம்
வெந்து போன விழிகளில் ஓர் பரவசம்
வெகுகாலம் விடுதி சென்ற மகன்
வீடு வரக்கண்ட அன்னையைப் போல...

இன்னும் இருதினத்தில்
நன்னீர் வரும்
குடங்கள் தரித்து போருக்குத் தயார்
பெண்மணிகள்...

பொங்கலுக்கு பேத்திக்கு கொலுசு
மாபெரும் திட்டத்துடன்
விதைநெல் வாங்க ஓட்டைப் பேருந்தில்
நிரந்தரக் கடனாளி-விவசாயி

வானத்தை முறைத்தபடி
திண்ணையில் பூக்கோலம்...
வாங்கிய பட்டாசுகளை வெடிக்க முடியா பிஞ்சுகள்...

ஒரு 3 மணி நேரம் கழிச்சு பேயக் கூடாதா?
மழை காரணமாய் இந்தியா தோல்வியடையுமோ?
என வரலாற்றுக் கவலையில் மட்டைப் பற்றாளன்
மன்னிக்கவும் தேசப்பற்றாளன்...

புயல் வந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொன்னாள்
மீனவனின் மனைவி...
இன்னும் ஒரு சில நாட்கள் அவன்
உயிரோடிருப்பது உத்திரவாதம்....

இன்னும் சில கவலைகள் உண்டு
30 மைல் தொலைவில்...



"இஞ்ச மழைக்கு என்ட பிள்ளை உயிர் தப்ப வேணும்..."
ஓட்டைத் தார்ப்பாய் வீட்டில்
ஒற்றைப் பிள்ளையுடன் விதவை...

"இஞ்ச மழைக்கு எண்ட மண்ணு 1000 மூட்டை நெல்லு தருமே"
தன் நிலத்தில் சிங்களவன் கட்டிய முகாமில்
அகதியாய் விவசாயி...

"மழைக்கு தண்ணி போட்டுக்கொண்டு ஆர்மிக்காரனுக
கும்பலா வந்திடக் கூடாது..."
நாய்களால் குதறப்பட்ட பொம்மை போல்
13 வயது சிறுமி...

மழை ஒன்றுதான்
இனமும் ஒன்றுதான்
கவலைகள் வேறானதேன்?
நம்மைப் போல் அவர்களுக்கு புத்தியிருக்கவில்லை
எங்களைப் பாருங்கள்
அடிமையாய் இருப்பதே தெரியாமல்
நாங்கள் அடிமையாய் வாழவில்லையா?
என்ன கெட்டுவிட்டோம்?
எங்கள் சங்கிலிகள் தங்கத்தால் ஆனாது
எங்கள் தட்டுகள் வைரம் பதித்தவை
கத்தாமல் வாலாட்டினால் முதலாளி எலும்பை வீசுவார்...
அதிகமாய் கத்தினால்
இறையாண்மை என்னும் தடி கொண்டு அடிப்பார்...
முதலாளிகளோடு விளையாடுவது அலாதியானது...
இன்னும் கொஞ்சம் எலும்பு வீசினால்
மொழியாவது? வரலாறாவது?
அப்பன் பேரைக் கூட மறக்கத் தயார் நாங்கள்...




Wednesday 26 October 2011

ஏழாம் அறிவு- திறம்பட ஒரு பதிவு


ஏழாம் அறிவு- இன்று தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் பற்றி ஒரு ரசிகனாக என் விமர்சனத்தை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். படத்திற்கு செல்லும் முன்னே சில விமர்சகர்களின் எதிர்மறை விமர்சனங்களை பார்த்துவிட்டு ஒரு நம்பிக்கை இல்லாத நிலையில் தான் படம் பார்க்கச் சென்றோம். முதல் 20 நிமிடங்கள் வந்த போதிதர்மன் பற்றிய பதிவுகள் மிக ஆழமாக செதுக்கப்பட்டிருப்பதற்கு பாராட்டுக்கள். அந்த பிரமிப்பு விலகும் முன்னர் வரும் சூர்யா-ஸ்ருதி இடையிலான காதல் காட்சிகள் ஈர்க்கவில்லை. போதிதர்மனே இன்னும் கொஞ்சம் வந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. ஸ்ருதியின் நடிப்பு அளவாக, கச்சிதமாக இருந்தது. ஆராய்ச்சி, ஆபரேஷன் ரெட் என மற்றவர்கள் பேசும் போது ஒன்றுமே புரியாமல் விழித்தோம் ஆனால் இரண்டாம் பகுதியில் போதிதர்மனையும் இணைத்து தெளிவான விளக்கம் தந்து அசத்தினார் முருகதாஸ். முதல் பாதியில் நொண்டியடிக்கும் திரைக்கதையை இரண்டாம் பகுதி எங்கேயோ கொண்டு போய் விடுகிறது. ஆபரேஷன் ரெட் பற்றி தெரிந்தவுடன் சூடு பிடிக்கின்றது இறுதி வரை. சண்டைக் காட்சிகளில் கடின உழைப்பு தெரிகின்றது. சண்டைக் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வசனங்கள் ஒரு சில இடங்களில் மட்டும் ஈர்க்கின்றன. சூழ்நிலைக்கு கட்சிதமாக பொருந்தக் கூடிய பாடலாக “இன்னும் என்ன தோழா” பாடல் மட்டுமே அமைந்தது.மற்றவை 1/2 மணி நேர நிரப்பல் மட்டுமே. தமிழனாக முருகதாசின் ஆதங்கம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. படத்திற்கு பின்னடைவுகள் முதல் பாதியின் சுவாரசியமின்மை, துருத்திக் கொண்டு நிற்கும் பாடல்கள், அழுத்தமில்லாத வசனங்கள், வில்லனின் ஒரே முக பாவம். சிறப்பு அம்சங்கள்- போதிதர்மன், சண்டைக் காட்சிகள், வில்லனாக வரும் டாங்க் லீ, இரண்டாம் பகுதி. நிச்சயமாய் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தைப் பார்த்த பிறகு ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு திமிர் வரும் என முருகதாஸ் சொன்னதை செய்து காட்டிவிட்டார். தமிழ் சினிமாவின் மற்றொரு மைல்கல் முருகதாஸிடமிருந்து மறுபடியும்.

Saturday 15 October 2011

பார்வை-ஓர் விவாதம்-பாகம் 2



கடந்த பாகத்தில் இளைஞர்கள் யோசிக்காமல் செயல்பட்ட இரு விடயங்களைப் பற்றி பேசினோம்.வாதத்தை தொடர்வோம்…
அண்ணாவைப் போன்றே பல போராட்டங்களை வரலாறு கண்டிருக்கின்றது.சில வெற்றிகளும், பல தோல்விகளும் உண்டு. வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் என்னவெனில் வெற்றியடைந்த போராட்டங்களில் மக்களுக்கு தனக்கு என்ன தேவை? அதை எவ்வாறு செயல் படுத்துவது? அதன் சாதக பாதகங்கள் என்ன? என்பதை அறிந்திருந்தனர். அறிந்திருந்தனர் என்பதை விட அவர்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களால் படிப்பிக்கப்பட்டனர். தெருவுக்குத் தெரு மக்களிடம் சென்று அவர்கள் நிலையை விளக்கினர், அதற்கு மாற்றை முன் வைத்தனர், அதை மக்கள் சிந்தித்தனர்.அதற்கு உதாரணங்கள் தான் தந்தை பெரியார், லெனின், மா வோ ஆகியோர். அவர்கள் காலத்திற்குப் பிறகு மக்களிடம் எடுத்துச் சொல்ல மறந்ததால் அவ்வறிஞர்களின் கனவுகள் எல்லாம் பாழாயின. (எ.டு) முகநூலில் கூட சாதி சங்கங்கள் உள்ளன. தற்போதைய நிலவரம் என்ன? தலைவர்கள் மக்களிடம் பேசுவது எப்படி உள்ளது? “நான் சொல்வதைக் கேட்டால் நீ என் கட்சி இல்லையேல் எதிர்க் கட்சி” என்ற ரீதியில் தான் உள்ளது.களத்தில் இருந்தோரில் ஒரு சிலருக்கு மட்டுமே அண்ணாவின் போராட்டத்தின் உள்ளும் புறமும் தெரியும். மீதி உள்ள மக்களில் ஊழலை ஒழிப்போம் என்றவுடன் ஏதோ ஒரு மயக்கத்தில் என்னவென்றே தெரியாமல் ஆட்டு மந்தை போல் இணைந்தனர், சிலர் “லோக்பால் வந்தால் 1000000,00,00,000 கோடி கறுப்பு பணம் மீட்கப்படும்.அப்படி மீட்கப்பட்டால் 30 வருடத்திற்கு வரி இல்லை,எழுவது முதல் உறங்கும் வரை அனைத்தும் இலவசமாக கிடைக்கும்” என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு இணையான குருஞ்செய்திகளில் மனம் பறிகொடுத்தனர்.மீதி சில பேர் அண்ணாவின் பரபரப்பான அரசியல் பிரவேசத்தில் தன்னை அவர் அனுதாபி ஆக்கிக் கொண்டு தனக்கான ஒரு குறுகிய கால அடையாளத்தை தேடிக் கொண்டனர். Anna Hazare became a trend rather then a leader among youngsters. இங்கே ரத்தன் டாட்டாவின் ஐ.ஐ.டி மாணவர்களுடனான கலந்துரையாடலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.”என்னைப் போன்ற வியாபாரிகள் அரசியலுக்கு வர முடியாது.முன்னெல்லாம் லைசென்சுக்கு மட்டும் தான் லஞ்சம் தர வேண்டி இருந்தது ஆனால் இப்பொழுது ஒவ்வொரு படிக்கும் லஞ்சம் தர வேண்டியுள்ளது.அதனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவளித்தால் எவ்வளவு நிதியுதவி வேண்டுமானாலும் செய்கிறோம்” என சொன்னார். லஞ்சம் குறைவாக இருந்திருந்தால் ரத்தன் டாட்டாவின் ஆதரவு இந்த போராட்டத்திற்கு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் அண்ணா ஹசாரே போன்ற யாரையாவது வைத்துக் கொண்டு அவருக்கு கேள்வி கேட்காமல் தலையாட்டும் இளைஞர் கூட்டத்தையும் வைத்துக் கொண்டு லஞ்சத்தின் அளவுகோலை அவருக்குத் தகுந்தார் போல் குறைத்துக் கொள்ள முடியும். ஏனெனில் மக்கள் அண்ணா ஹசாரேவை போராட்டத்திற்கு பின்னான காலங்களில் எளிதில் மறந்து விடுவர்.அவர் செய்யும் தவறுகளையும் சேர்த்து. அண்ணா அவர்கள் டாட்டாவின் ஆதரவுடன் தான் செயல்படுகிறார் என நான் சொல்லவில்லை.அது உண்மையா எனவும் தெரியவில்லை. அவ்வாறு அண்ணா செயல்பட்டார் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது இந்த ஆட்டுமந்தை என்ன செய்யும்? டாட்டாவிற்கு தேவையான நேரத்தில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டால்? மக்களில் ஒருவரை தெளிவான சிந்தனையுடன் முன்னிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினால் மக்கள் சிதறிவிடுவார்கள். ஏனெனில் புதிதாய் வந்தவர் பற்றி யாருக்கும் நம்பிக்கை இருக்காது ஒரு சிலரைத் தவிர. அந்த ஒரு சிலர் தன்னுடைய தேவை என்ன அதை அடைவது எவ்விதம் என புரிதலுடன் உள்ளவராய் இருப்பர். அந்த புரிதலைத் தான் அரசியல் பார்வை என்கிறோம். அனைத்து மக்களும் புரிதலுடன் இணைந்தால் தான் தலைவரைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பர். எத்தனை தலைவர்கள் மாறினாலும் தங்கள் போராட்டத்தில் கண்ணாக இருப்பர். அப்படி இருந்திருந்தால் இது அண்ணா ஹசாரேவின் போராட்டமாக இருந்திருக்காது மக்கள் போராட்டமாக மாறியிருக்கும்.அதன் வலு லிபியாவைப் போல பல மடங்கு இருந்திருக்கும்.
அத்தகைய போராட்டங்கள் தான் பெரியாரின் சாதி ஒழிப்பும், லெனின் மற்றும் மா வோ வின் மக்கள் புரட்சியும், ஈழ மக்களின் விடுதலைப் போரும்.தங்கள் தலைவர் மறைந்ததாய் சொல்லப்பட்ட பின்பும் அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து பின்வாங்கவில்லை அது தான் மக்கள் போராட்டம். இது பிரபகரனின் போராட்டமாக மட்டும் இருந்திருந்தால் 2 வருடங்களுக்கு முன்பே தமிழ் ஈழம் என்பது சரித்திரத்தின் ஒரு பகுதியாக முடிந்து போயிருக்கும்.
நாம் கேட்பதெல்லாம் இது தான் உங்கள் கருத்துக்கள் எங்கேயும் எப்போதும் வரவேற்கப்படுகின்றன ஆனால் பிரச்சனைகளின் ஆழமோ, வீரியமோ தெரியாமல் மேம்போக்காக எதிலும் இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.நிச்சயம் தேவை ஆழமான அரசியல் பார்வை.
                                            -மரு.மு.சுந்தர பாண்டியன்.

பார்வை-ஓர் விவாதம்-பாகம் 1


பார்வை- இந்த சொல்லைப் பற்றி பல அர்த்தங்களில் நமக்கு புரிதல் உண்டு ஆனால் புரிதலுடன் கொண்ட பார்வைக்குத் தான் பஞ்சம் உள்ளது.நான் சொல்வது அரசியல் பார்வை பற்றி. நம் இளைய சமூகத்தினிடையே தற்சமயம் பரவியுள்ள சமூக அக்கறை தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டுதலாக அமைந்தது.முகநூல் வலைதளத்தில் சமீப காலமாக அதிகமாக பேசப்பட்ட இந்திய அரசியல்வாதி அண்ணா ஹசாரே என்பதில் ஐயமில்லை. இவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. சிலர் ஒருபடி மேலே சென்று காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமலாகி உள்ள இந்திய இராணுவத்திற்கான சிறப்பு அதிகார சட்டத்தை நீக்கக் கூடாது என்று விபரீதமாக இடுகை செய்வதும் அதை பெரும்பாலோனோர் பகிர்வதும் ஒரு குழப்பமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உண்மையாகவே இந்த இளைய தலைமுறை விவாகாரங்களை அறிந்து கொண்டு தான் செயல்படுகின்றனரா? அல்லது நாட்டுப்பற்று என்ற பெயரில் மேம்போக்காக எதைச் சொன்னாலும் அதை நம்பி ஏமாந்து போகின்றனரா? இல்லை தேசப் பற்றுள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்வது கவுரவத்திற்கான ஒரு சுயஅடையாளத்திற்கா?
                சற்று விரிவாக அலசலாம் வாருங்கள். முட்டாள்த்தனமான மந்தை ஆடுகளாய் இல்லாமல் இருக்க சற்று சேர்ந்து யோசிக்கலாம். இந்தியா முழுமையும் பட்டையை கிளப்பிய அண்ணா ஹசாரே போராட்டத்திற்கு இளைஞர் படையின் ஆதரவு மகத்தானது. தாத்தா சொன்னவையெல்லாம் கச்சிதமாக செய்து முடித்து, தார்மீக ஆதரவெல்லாம் தந்து உறுதுணையாய் நின்றனர்.

பல வருடங்களாக அண்ணா ஹசாரே  பல விதமான போராட்டங்களில் தனியாளாய் நின்று சாதித்தார். அத்துனை வருடங்களும் இவர் மீது இத்தகைய வெளிச்சம் இல்லை. லோக்பால் பற்றிய போராட்டத்திற்கு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகம் ஆகியவற்றின் ஆதரவு வந்தவுடன் தான் இளைய சமுதாயம் கண் விழிக்கின்றது. அண்ணா ஹசாரே தலைப்புச் செய்திகளில் வந்தவுடன் தான் முகநூலின் பலரது ஸ்டேட்டஸ்களில் இடம் பிடிக்கிறார்.பலரும் அண்ணா பற்றி பகிரத் தொடங்கியவுடன் ஒவ்வொருவரும் லைக் மற்றும் ஷேர் செய்தனர்.

நம்முடைய கேள்வி இது தான். மீடியா வெளிச்சம் குறைந்த அளவே அண்ணாவின் மீது விழுந்துள்ளது என வைத்துக் கொள்வோம். அண்ணா தலைப்புச் செய்தியில் இல்லாமல் வெறும் பெட்டிச் செய்தியாக வந்திருந்தால் எத்தனை பேர் அதற்கு முக்கியத்துவம் அளித்திருப்பர்? எத்தனை பேர் தங்களுடைய முகநூல் ஸ்டேட்டஸில் அவருக்கு இடம் அளித்திருப்பர்? இரண்டு நிலைக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கும் என்பதில் ஐயமில்லை. உதாரணம் தான் வடகிழக்கில் 13 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் இரோம் ஷர்மிளா. ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்ததினால் ஓரங்கட்டப்பட்ட போராளி அவர். சரி அண்ணாவை புரிந்து, தெரிந்து தான் இவர்கள் ஆதரவளித்தனர் என்றால் இதில் எத்தனை பேருக்கு லோக்பாலின் லாப நட்டங்களைப் பற்றி தெரியும்? ஜன் லோக்பால் நிறைவேற்றப்பட்ட பின் ஒரு சாமானிய ஏழை இந்திய உள்துறை அமைச்சர் மீது புகார் அளிக்க முடியுமா? அப்படி ஒருவர் புகார் கொடுத்துவிட்டால் அவரை மிரட்டுவதும், புகாரைத் திரும்பப் பெற வற்புறுத்தவும் ஒரு உள்துறை அமைச்சரால் முடியாதா? அப்போது எந்த இடத்தில் இருந்து அந்த மனிதன் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்? அண்ணா அதற்காக எத்தனை முறை உண்ணவிரதம் இருப்பார்? ஜன் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யப் போவது யார்? அவர்களின் நம்பகத்தன்மை என்ன? நீதித் துறையிலேயே ஊழல் பெருகிவிட்ட நிலையில் ஜன் லோக்பால் என்ற அமைப்பை சிதைத்து அதன் மீது இருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை இழக்கச் செய்வது அரசியல்வாதிகளுக்கு கடினமான காரியம் அல்ல. அப்படி மக்கள் நம்பிக்கை இழக்கும் பொழுது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல மக்கள் போராட்டங்கள் இந்த முன்னுதாரத்தினால் சிதைந்து போகும் என்பது கண்கூடு.இது பற்றிய விவாதங்கள் “சமூக அக்கறை கொண்ட” இளைய தலைமுறையினரிடையே எழுந்ததாய்த் தெரியவில்லை.
                   இதே போலத் தான் வடகிழக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக அமலில் உள்ள இந்திய இராணுவத்திற்கான சிறப்பு அதிகார சட்டத்தை தொடர வேண்டும் என்ற இளைஞர்களின் வாதம். அந்த சட்டத்தின் சாரம் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.அதாவது காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தினரே மாநில பாதுகாப்புக்கு பொறுப்பு. அவர்களின் நடவடிக்கைகல் அனைத்துமே தேசத்தின் நலனுக்காக செய்யப்படுவது. அவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் விசாரனைக்கோ, தண்டனைக்கொ இடமில்லை. சுருக்கமாக அந்த மாநிலங்களில் இராணுவம் வைத்தது தான் சட்டம். இது தீவிரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க பயன்படுவதை விட இராணுவத்தின் கொடுமை எல்லை மீறிச் செல்வதற்குத்தான் பயன்படுகிறது. தனக்கு பதவி உயர்வு வேண்டுகிற ஒரு அதிகாரி என்கவுண்டர் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் சுடுவார். சுடப்பட்டவர் தீவிரவாதி என சொல்லிவிட்டால் போதும் அவருக்கு பதக்கமும், பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணி மாறுதலும் கிடைக்கும்.பதட்டம் நிறைந்த கஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்ற விரும்பாத அதிகாரிகள் தீவிரவாதிகளின் வரவுக்காக காத்திருப்பதில்லை.ஏதேனும் ஓர் இளைஞனைப் பிடித்து சுட்டு விட்டு தீவிரவாதி என கதை கட்டி விடுவர்.அவர் பதக்கத்துடன் வேறோர் மாநிலத்திற்கு மாற்றல் வாங்கி சென்று விடுவார். பணி மாறுதலுக்காக இப்படி பலியான இளைஞர்கள் பல ஆயிரம் பேர். சிறப்பு சட்டம் அமலில் இருப்பதால் இத்தகைய அதிகாரிகள் மீது எந்த அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. தீவிரவாதி செத்தான் என்றதும் நாம் தான் உற்சாகமாக பாரத் மாதா கி ஜே என நம் நாட்டுப்பற்றை தெரிவிப்போமே.அதனால் அரசாங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பொறுக்க முடியாத காஷ்மீர் மக்கள் பொங்கி எழுந்ததைத் தான் சில மாதங்களுக்கு முன்னால் பார்த்திருப்பீர்கள்.

 இது போதாதென்று பல இளம் பெண்கள் இராணுவத்தினரின் காமப் பசிக்கு இரையாகி செத்தனர். எந்த மக்களை காப்பாற்றுகிறோம் என இராணுவம் நிலை கொண்டுள்ளதோ அதே மக்கள் அவர்களால் பாதிக்கப்படுவதை எந்த நாட்டுப்பற்றோடு ஆதரிக்க முடியும்? இப்படிப்பட்ட சிறப்பு சட்டம் வேண்டாம் என்று தான் 13 வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறார் இரோம் ஷர்மிளா.

 ஆனால் நம் இளைஞர்களோ இந்த விடயங்களைப் பற்றி துளி கூட அறியாமல் சிறப்பு சட்டத்தை ஆதரிக்கின்றனர். எந்த தவறும் செய்யாத சக மனிதன் செத்தாலும் பரவாயில்லை நம் வீட்டுப் பெண்களைப் போலவே வாழ நினைக்கும் அப்பாவிப் பெண்கள் இராணுவத்தினால் சிதைக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றால் அது எப்படிப்பட்ட தேசப்பற்று? மனிதர்கள் சேர்ந்து வாழ்வது தான் தேசம்.சக மனிதன் மீது அக்கறை காட்டாமல் “இந்த நாட்டிலிருந்து ஒரு பிடி மண்ணகூட எடுத்துட்டு போக முடியாது” என கர்ஜிக்கும் முட்டாள்த்தனமான தேசப்பற்றை என்னவென்று சொல்வது? மக்களைக் கொன்று விட்டு மண்ணை மட்டும் வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
                                                   -வாதம் தொடரும்

Monday 10 October 2011


செய்தி-புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்தார்.(கடந்த வாரம்)

மந்திரியின் புலம்பல்: “நான் என்ன ஓசி ல டாக்டர் பட்டமாடா கேட்டேன்? ஒரு எஜுகேசன் மினிஸ்டரு SSLC பாஸ் பண்ணனும்னு நினைச்சது ஒரு குத்தமாடா? ஒரு மனுசன பாத்தாலே தெரிய வேணாமா அவனுக்கு படிப்பு வருமா? வராதானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்”

தேவனுக்கே வரம்......???



சொர்க்கலோகம்...
புராணங்கள்
தரிசனங்கள்
துதிகள்
தவங்கள்
போர்கள்
பூசைகள்
எதிலும் மனம் செல்லவில்லை
தேவரோடு தேவராய்
களி நடனம் காணவும் விரும்பவில்லை...

மற்ற தேவரிடமிருந்து பிரிந்தேன்
பூமியை நோக்கி ஒடினேன்
அடர்த்தியான மேகங்களிடையே
குதித்தோடி களித்தேன் 
தனியாய்...

உள்ளம் சருகாய் லேசாக-மனம் மோகத்தில் 
ஒரு கணம் சரிந்தேன் ஓர் மேகத்தில்...

திடீரென ஓர் மணம்
பழகிய மணமென தவித்தது மனம்...

கீழே பார்த்தால்
மேகத்தை விட தூய்மையாய் சிரித்தாய்...

நிச்சயமாய் எங்கள் சொர்க்கத்துக்காரி அல்லவே
அங்கே இப்பேரழகைக் கண்டதும் இல்லயே...
மானிடப் பெண்ணிடம் மையல் கொண்டேன்...

மேகத்திலிருந்து உடனே குதித்து
உனை நோக்கி வந்தேன்
இரண்டொரு மேகங்களுக்கு கீழே
ஒரு குறுமுனி தவம் செய்யக் கண்டேன்…
அவர் உன்னைக் காணாமல்
கண் மூடி அமர்ந்ததால்
உன்னை முதலில் காணும் பேறு
எனக்கு வாய்த்தது…
குறுமுனியை வென்றதோர் களிப்புடன்
உன் முன் தோன்றினேன்...
ஒளி கொண்ட உடலும்
சிரசிற்குப் பின் ஒளிவட்டமும்,
முதுகில் சிறகும் கொண்ட தேவனாய் 
வந்து காதல் சொன்னதும்...
பயப்படுவாய் என நினைத்தேன்...
நடக்கவில்லை...
ஆச்சர்யப்படுவாய் என ஊகித்தேன்...
இல்லை...
குறைந்தபட்சம் வெட்கப்படுவாய் என எதிர்நோக்கினேன்...
ம்ஹூம்...
தோழிகளிடம் மட்டும் 
பெருமிதமாய் ஒரு பார்வை சிதறிவிட்டு
உன் வழியே சென்றாய்...
தேவனென,அழகனென 
சொர்க்கத்தில் என்னைப் போற்றிய வாய்களெல்லாம்
பஸ்பமாய் போகட்டும் என சாபமிட்டேன்...



அன்றிரவே மீண்டும் வந்தேன்
சிறகுகளை வெட்டி விட்டு மானிடனாய் வா 
என்றாய்...
பறந்துவிடுவேனோ என்ற பயம்
கட்டளையாய் வந்தது கண்டு வியப்பேதும் கொள்ளவில்லை...

நேரே சொர்க்கம் சென்றேன்...
தேவ பதவியினின்று 
விடுதலை கோரும் வரம் கேட்டேன்...
பரமாத்மா பெரிதாய் அலட்டாமல் வரமளித்தார்
ஓர் எச்சரிக்கையோடு...

மகிழ்ச்சியாய் உன் முன் வந்தேன்
சொர்க்கத்திலிருந்து பொடிநடையாக...

நாளும் பொழுதும் கண் கொட்டாமல் உன்னை 
பத்திரமாய் பார்த்துக் கொள்ள சொன்னாய்...
செய்தேன்...
பார்த்துக் கொண்டே இருப்பதால் 
பொறுப்பில்லாதவன் என்றாய்...
திகைத்தேன்...
வேலையோடு வந்தால்தான்
விவாகம் முடியுமென்றாய்...
அந்த வேலைக்கென்று கவுரவமும் வேண்டுமென்றாய்...
ஊர் முழுக்க தேடிய பின் தான் தெரிந்தது
பணத்தின் மறுபெயர் தான் கவுரவம் என்று...
முழு மூச்சாய் பணியில் இருந்தேன்...
வேலையில் சேர்ந்ததும் உனை 
மறந்து விட்டதாய் சொன்னாய்...
தவித்தேன்...
காதல் குன்றிவிட்டதாய் அழுதாய்
துடித்தேன்...
பணியை விட்டொழித்துவா காதலிப்போம்என்றதும்
முட்டாள் என வசை வீசினாய்...
வெடித்தேன்...
உன்னுடன் இருக்கையில்
புறத்திணையில் குறை சொன்னாய்...
ஊருடன் இருக்கையில்
அகத்திணையில் குறை சொன்னாய்…
என்ன செய்வதென்றே தெரியாது குழம்பினேன்…
இனி என்ன செய்து உன்னை
மகிழ்விக்கவென சிந்திக்கையில்…
ஒரே கேள்வி கேட்டாய்
எனக்காக நீ என்ன செய்தாய் என்று…



மானிடனாய் மாற வரம் கேட்கையிலே
பரமாத்மா எச்சரித்தது நினைவுக்கு வந்தது
“நீ கோருவது வரமல்ல”…

குறுமுனியை நானே எழுப்பி விட்டிருந்தால்
நலமென நினைத்தேன்…
சாபம் வாங்கி கல்லாய் மண்ணாய் போயிருக்கலாம்…







Saturday 8 October 2011

தெலுங்கானாவும் காங்கிரசு துரோகமும்

தெலுங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படலாம்-செய்தி

எப்போதோ பிள்ளையை கிள்ளி விட்டார்கள் இப்போது தொட்டிலை ஆட்டவா இல்லை உடைக்கவா எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது காங்கிரசு அரசு. இன்று தெலுங்கானாவைத் தனியே விடுவதா வேண்டாமா என யோசிக்கும் தகுதி காங்கிரசு அரசுக்கு சுத்தமாய் கிடையாது.ஏனெனில் “ஆந்திராவுக்கு இணையாக அனைத்து வசதிகளும் வளர்ச்சித் திட்டங்களும் செய்து தரப்படும்.ஆந்திராவுடன் இணைந்து இருப்பது பிடிக்கவில்லை என்றால் தாராளமாய் பிரிந்து விடலாம்” என சத்தியம் செய்து கொடுத்து அந்த மக்களை ஏமாற்றி தான் ஒருங்கினைந்த ஆந்திரபிரதேசத்தை உருவாக்கியது காங்கிரசு அரசு.
கொஞ்சம் தெலுங்கானா வரலாற்றைப் பார்ப்போமா? 
பிரிடிஷ்காரர்கள் வருவதர்க்கு முன்னர் சுதந்திர மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி தான் தெலுங்கானா.வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு தெலுங்கானா பகுதியின் மன்னர் வெள்ளை அரசுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார். அதன்படி ஹைதிராபாத்தை தலைமையாகக் கொண்ட தெலுங்கானா மன்னராட்சியின் கீழ் இருக்கும் எனவும் மன்னர் ஆங்கில அரசுக்கு உறுதுனையாக இருப்பார் எனவும் முடிவு செய்யப்படுகிறது. மிச்சமிருக்கும் ஆந்திர பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.இந்த நிலை தான் சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. சுதந்திரத்திற்குப் பின் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க முனைந்த நேரு தலைமையிலான அமைச்சரவை மன்னரின் விருப்பத்திற்கு எதிராக “OPERATION POLO” என்னும் இராணுவ நடவடிக்கையின் மூலம் தெலுங்கானா பகுதியை இந்தியாவுடன் இணைக்கின்றனர்.1953 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கானாவை ஆந்திராவோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின் காரணமாக நல்ல கல்வியையும், வசதி வாய்ப்புகளையும் பெற்ற ஆந்திர மக்களின் முன்னால் பெரிய அளவில் கல்வியோ, வசதிகளையோ பெறாத தெலுங்கானா மக்கள் அவர்களுடன் போட்டியிட முடியாது என ஐயமுற்றனர்.அதனால் ஆந்திராவுடன் இணைய மறுத்தனர். விதி வசமாக மத்தியிலும் காங்கிரசு அரசு,தெலுங்கானா பகுதியிலும் காங்கிரசு அரசு. இந்தியாவின் முடிசூடா மன்னரான நேருவின் விருப்பத்திற்கு தாழ் பணிந்து தலையாட்டியது புர்குல இராமகிருஷ்ண ராவ் தலைமையிலான காங்கிரசு அரசு, மக்களின் விருப்பத்தைக் கண்டு கொள்ளாமலே.மக்கள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். மக்களை ஆற்றுப்படுத்த அவர்கள் தந்த வாக்குறுதி “ஆந்திரத்துக்கு இணையாக அனைத்து வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும், கல்வியும்,விவசாயிகளுக்கு பாசன வசதிகளும் செய்து தரப்படும். அப்படி எதும் செய்யாமல் விட்டாலோ, ஆந்திரத்தின் இணைப்பு பிடிக்கவில்லை என்றலோ தாராளமாக பிரிந்து விடலாம்” என்பதுதான். நம்ம மாமா நேரு குறிப்பிடுகையில் “இது ஒரு திருமணம் போலத் தான் பிடிக்கவில்லை என்றால் என்றுமே விவாகரத்திற்கு இடம் உண்டு” என்றார். இவை எல்லாவற்றையும் நம்பித்தான் ஏமாந்து போயினர் தெலுங்கானா மக்கள். இன்று வரை வளர்ச்சி என்ற வார்த்தையை அவர்கள் அனுபவித்ததே இல்லை. சொன்னபடி பிரித்துக் கொடுங்கள் எனக் கேட்டு போராடினால் போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாகக் காட்டி பிரச்சனையை திசை திருப்பவே முயல்கிறது அரசு. செய்வதையும் செய்துவிட்டு இப்போது தனக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தை கையாள்வது நடந்து கொள்கிறது காங்கிரசு அரசு.  
In December 1953, the States Reorganization Commission was appointed to study the creation of states on linguistic basis.[16] The States Reorganisation Commission (SRC) was not in favour of an immediate merger of Telangana region of with Andhra state, despite their common language.
Paragraph 382 of the States Reorganisation Commission Report (SRC) said "opinion in Andhra is overwhelmingly in favour of the larger unit; public opinion in Telangana has still to crystallize itself. Important leaders of public opinion in Andhra themselves seem to appreciate that the unification of Telangana with Andhra, though desirable, should be based on a voluntary and willing association of the people and that it is primarily for the people of Telangana to take a decision about their future". The people of Telangana had several concerns. The region had a less-developed economy than Andhra, but with a larger revenue base (mostly because it taxed rather than prohibited alcoholic beverages), which people of Telangana feared might be diverted for use in Andhra. They feared that planned irrigation projects on the Krishna and Godavari rivers would not benefit Telangana proportionately, even though people of Telangana controlled the headwaters of the rivers. It was feared that the people of Andhra, who had access to higher standards of education under the British rule, would have an unfair advantage in seeking government and educational jobs.
The commission proposed that the Telangana region be constituted as a separate state with a provision for unification with Andhra state, after the 1961 general elections, if a resolution could be passed in the Telangana state assembly with a two-thirds majority.
The Chief Minister of Hyderabad State, Burgula Ramakrishna Rao, expressed his view that a majority of Telangana people were against the merger.[17] He supported the Congress party's central leadership decision to merge Telangana and Andhra despite opposition in Telangana.[18] Andhra state assembly passed a resolution on 25 November 1955 to provide safeguards to Telangana. The resolution said, "Assembly would further like to assure the people in Telangana that the development of that area would be deemed to be special charge, and that certain priorities and special protection will be given for the improvement of that area, such as reservation in services and educational institutions on the basis of population and irrigational development."[19] Telangana leaders did not believe the safeguards would work.[20][21] With lobbying from Andhra Congress leaders and with pressure from the Central leadership of Congress party, an agreement was reached between Telangana leaders and Andhra leaders on 20 February 1956 to merge Telangana and Andhra with promises to safeguard Telangana's interests.[22][23]
Prime minister Jawaharlal Nehru initially was skeptical of merging Telangana with Andhra State, fearing a "tint of expansionist imperialism" in it.[24][25] He compared the merger to a matrimonial alliance having "provisions for divorce" if the partners in the alliance cannot get on well.[26][27]
Following the Gentlemen's agreement, the central government established a unified Andhra Pradesh on November 1, 1956.[13][28][29] The agreement provided reassurances to Telangana in terms of power-sharing as well as administrative domicile rules and distribution of expenses of various regions.
Anti-Nehru politics emerged with the repression of the Telengana movement; many within the Congress Party extended their hands to leftist causes. Feroze Gandhi was among them.

வானவேடிக்கை

வந்துட்டு….
தினமும் வர்ற
வானவேடிக்கை…
தம்பிய கூட்டி வரணும்…
அவன் கை தட்டி கை தட்டி
பார்ப்பான்…

இன்னும் சில பிள்ளைகள்
ஒன்றாய்க் கண்டனர்…
தீப்பிழம்பாய் வெடிகள்
குதித்து மகிழ்ந்தன பிஞ்சுகள்…

வெடிகள் எங்கிருந்து வந்ததென
பெரும் குழப்பம்..
தினமும் வெடிக்கிறதே
எங்கே திருவிழா?
புது வருசம் போய்
5 மாசம் ஆச்சே?
யாரோ இறந்தததுக்கு
வெக்கற வெடியா?
இந்த பெருங்குழப்பம் தீருமுன்
அடுத்த குழப்பம்…-வெடின்னா
கீழ வெச்சு கொளுத்தி
மேல போய் வெடிக்கணும்…-இது ஏன்
மேல இருந்து கீழ வந்து வெடிக்குது?

அடுத்த கருத்துக் களம் ஆரம்பம்….
பாட்டி கதை சொன்ன மாதிரி
தேவதை எல்லாம் இப்படித்தான்
கீழ இறங்கி வருவாங்களாம்
அவ்வறிஞர்களுக்கு திருப்தி இல்லை…
சாமிக்கு இப்பதான்
தீபாவளியாம்
3 வயது மாணிக்கம் சொன்னதை
ஒருமனதாய் ஏற்றனர்…

அடுத்து வந்த
ஒவ்வொரு வெடியையும்
பயபக்தியுடன்
கன்னத்தில் போட்டுக் கொண்டு
கண்டனர்….

தங்களை நோக்கி ஓர் வெடி
வந்தது…
சாமி தங்களை பார்த்து விட்டதாய்
கைதட்டி ஆராவரித்து
வரவேற்றனர்…

நெருக்கமாய் வந்து
நெருப்பாய் வெடித்தது
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………


நீண்ட மெளனம்…
வெடித்து முடித்த புகைக்கு
நடுவே வானிலிருந்து
வேடிக்கை பார்த்த ஐ.நா வின்
செயற்கைக்கோளில் ஆவணப் படமாய்
பதிந்தனர்.

                                        -மரு.மு.சுந்தர பாண்டியன்



Friday 7 October 2011

அண்ணாவும் கிரிக்கெட்டும்

அண்ணா ஹசாரே.... இந்த தாத்தாவ பார்த்து வாயப் பொளந்தவங்கள்ல நானும் ஒருத்தன்.காங்கிரஸ் ஆட்சிக்கு பெருசா சவுக்கடி குடுத்த பெரிய மனுசர். நல்ல வேளை அவருக்கு மக்கள் ஆதரவும் முக்கியமா மீடியா ஆதரவும் இருந்துது.அதனால போராட்டம் களை கட்டி பட்டைய கிளப்புச்சு. இல்லாட்டி இவரும் இரோம் சர்மிளா மாதிரி கவனிக்கப்படாமயே போயிருப்பார். சரி எல்லாம் முடிஞ்சுது வழக்கம் போல கவர்மெண்டு கம்பி நீட்டிடுச்சு.ஆனா தாத்தா விட்றதா இல்ல மறுபடியும் உண்ணாவிரதம்னு அறிவிச்சுருக்காரு.

யார நம்பி தாத்தா இப்பிடி ஒரு ஸ்டெப் எடுத்தீங்க? நம்ம மக்களையா? முதல் போராட்டத்துக்கு ஆதரவு தந்தாங்கன்ற நம்பிக்கைதான? நம்ம மக்கள் எல்லா விசயத்துலயும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு இருந்தா தான் கவனிப்பாங்க. முழுக்க முழுக்க மீடியா ஆதரவோட பல பரபர திருப்பங்களோட உண்ணாவிரதம் இருந்தா தான் மக்கள் நியூஸ் அ பாப்பாங்க இல்லாட்டி அசால்ட்டா சேனல மாத்திருவாங்க.அதனால முன்னாடியே ஸ்க்ரிப்ட்ட ரெடியா வெச்சுக்கங்க.
ஏன்னா நம்ம மக்கள் கிரிக்கெட்ட திருப்பி திருப்பி பழைய மேட்ச கூட பாப்பாங்க ஆனா தன் ஊர் விவசாயிய பத்தி செய்தி வந்தா கூட தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி போய்டுவாங்க. ஏன்னா தங்களுடைய மொத்த தேச பக்தியையும் கிரிக்கெட்டுல முதலீடு பண்ணிருக்குற தேசம் தான இது. அப்புறம் நம்ம மீடியா.... மக்கள் பிரச்சனைக்காக வெளிச்சம் காட்டாம தங்களோட கருத்துக்கு ஆதரவான போராட்டங்களை மட்டும் தான் காட்டுவாங்க.ஒரு இனப் படுகொலையை நிறுத்த சொல்லி தமிழ்நாடே கதறுனப்ப கண்டுக்காத மீடியாக்கு திடீர்னு இந்த இந்தியன் தாத்தா மேல பாசம் வந்ததுல அவங்களுக்கு அரசியல் லாபம் இல்லாம இருக்காது.அவங்களுக்கு பிடிக்கலனா உங்களையும் கண்டுக்க மாட்டாங்க கவனம்.


மாயை இல்லாத இராமாயணம்

இராமாயணம் சொல்லும் சேதிகள் ஏராளம். ஒழுக்கம், கற்பு, நட்பு, அன்பு என எக்கச்சக்கமான வாழ்க்கைப் பாடங்கள். இராமாயணம் வெறும் கற்பனை மட்டும் அல்ல உண்மையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்றொரு கூற்றும் உண்டு. இராமனுக்காக கோவில் கட்ட மற்ற கோவில்களை இடிக்கும் அளவிற்கு இராம பக்தி இந்திய தேசத்தில் விரவி உள்ளது. ஏன் இராமன் மீது இவ்வளவு பக்தி? இராமன் நல்லவன், ஒழுக்கமானவன், கடவுளின் அவதாரமாக கருதப்படுபவன். தந்தை சொல் தட்டாத மகன், மனைவியை கண் போல் காத்தவன், நட்புக்கு நியாயம் செய்தவன், சகோதரனைக் கைவிடாத அண்ணன். கடவுளுக்கான அனைத்து பண்புகளும் உள்ளவன் தான்.மறுக்கவில்லை. ஆனால் உலகெங்கிலும் இராமன் கொண்டாடப்படும் பொழுது தமிழ் மன்னனாய் இருந்ததற்காக, போரில் தோற்றதற்காக இராவணன் இழிவுபடுத்தப்படுவது தான் வேதனையாக உள்ளது. புரியவில்லையா? இராமாயணத்தில் பிண்ணப்பட்டிருக்கும் மாயைகளை விலக்கிப் பார்த்தால் தான் உண்மை புரியும்.
முதலில் இராமனும் இராவணனும் போரிட்டது மாயாஜாலங்கள் நிறைந்த போர் அல்ல.இரு மன்னர்களிடையே நடந்த ஒரு சாதாரண போர்.பத்து தலைகளோ, மந்திரங்களோ இல்லை வாளும்,வேலும் கொண்டு போரிட்ட ஒரு போர். தந்தையால் வனவாசத்திற்கு அனுப்பப்பட்ட இராமன் தெற்கே வந்தான். இலக்குமணனைக் கண்டு காதல் வயப்பட்ட சூர்ப்பனகை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறாள். இது எந்த வகையில் தவறு எனப் புரியவில்லை ஆணவம் கொண்ட இலக்குமணன் பெண் என்றும் பாராமல் அவள் மூக்கை அறுக்கின்றான்.(ஒழுக்கத்தில் சிறந்த மனிதர்கள் பெண்ணை அங்ககீணப் படுத்துவது எப்படி கடவுள் தன்மையாக இருக்க முடியும்?). தன் தங்கையை அவமானப்படுத்தியது பொறுக்காமல் இராமன் வீட்டுப் பெண்ணை(சீதை) சிறையெடுத்து பழி வாங்குகிறான் இராவணன். வாணரங்களின் (தமிழ் பகுதிகளில் வாழ்ந்த குரங்குகளை வணங்கிய மலைவாழ் மக்களைத் தான் வாணரங்களாக வர்ணிக்கின்றது இராமாயணம் ) உதவியுடன் போரிடும் இராமன் போரில் வெல்கிறான்.
இது தான் உண்மையில் நடந்த இராமாயணம் ஆனால் இதில் இராமனை உயர்திக் காட்ட இராவணனை இழிவாய் சித்தரித்தது தான் வரலாற்றின் வடு. நன்றாய் சிந்தித்தீர்களானால் ஆரியர்கள் எழுதிய காப்பியங்களில் எல்லாம் தமிழனை எப்படி எல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் செய்தார்கள். அரக்கர்கள் எனக் கூறப்படுகிற அனைவருக்கும் மீசை இருக்கும், அனைவருமே கருப்பாக இருப்பர். இவை இரண்டுமே தமிழனின் பண்பாட்டுச் சொத்து என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கடவுளர்கள் அனைவருமே மீசை இன்றி சிவப்பாகத் தான் இருப்பர்.(கண்ணன் கருப்பு எனக் கூறிக் கொண்டாலும் நீல நிறத்தில் தான் காட்டுவர்). அப்படி ஓர் அரக்கனாக சித்தரிக்கப்பட்டவன் தான் இலங்கையிலே தமிழ் மன்னனாக இருந்த இராவணன். தமிழர்க்கே உரிய சிவ வழிபாட்டில் சிறந்தவனாய் விளங்கினான்.இசையில் தேர்ந்த வித்தகன். இவனைப் பற்றிய மாயைகளைக் களைந்தால் உண்மை புரியும். இராவணன் ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளைத் தொட்டால் எரிந்து விடுவானாம் அப்படி ஓர் சாபம் பெற்றானாம். எந்த பெண்ணைத் தொட்டும் எவனும் எரிந்ததாய் ஆதாரத்துடன் வரலாறு எழுதப்பட்ட காலத்திலிருந்து அறியப்படவில்லை. உண்மையில் இராவணன் சீதயை சிறை பிடித்தாலும் அவளைத் தொடாத கற்பு நெறி கொண்டவன். அந்த நற்பெயர் அவன் பெறாமல் ஒழுக்கக்கேடு கொண்டவனாகக் காட்டினர். தன் வீட்டுப் பெண்ணை அவமானப் படுத்தியதற்காக பழி வாங்க சீதையைத் தூக்கினான். அது சாதாரண எந்த மனிதனுக்கும் ஏற்படக் கூடிய மான உணர்ச்சி தான் அது இராவணனுக்கு ஏற்பட்டால் தவறா?
சூர்ப்பனகையை மூக்கறுத்ததும்,வாலியை ஒளிந்து நின்று கொன்றதுமான தெய்வீக குணங்களைத் தான் இராமனும் அவன் தம்பியும் கொன்டிருந்தனர். வாலியை ஒளிந்திருந்து கொன்றதர்க்கும் ஒரு கட்டுக் கதை இடுவர்.வாலியை நேருக்கு நேர் பார்த்தால் பாதி வலிமையை உறிந்து விடுவானாம். அறிவுடன் நம்பக் கூடிய காரணமாய் இது இல்லை.
இராவணன் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். போரில் தோற்றது.வென்றவன் சொன்னது இராமாயணம் ஆனது.இராமனை எப்படி வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளுங்கள் ஒரு தமிழனாய் இனி இராவணனை இழிவு படுத்தாமலாவது இருப்போம். ஆரியரின் நீண்ட கால சூழ்ச்சியிலிருந்து கண் விழிப்போம்.பெரும் ஆதங்கங்களின் சிறு துளி தான் இது.தங்களுக்குத் தெரிந்ததையும் பகிரவும்.