Tuesday 27 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 2

தமிழகத்தின் 2 பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்குமென பார்த்தோம்.இனி அடுத்த தலைமுறை அரசியலுக்காக முன்னணியில் இருக்கும் கட்சிகளைக் காண்போம்.

தே.மு.தி.க

வெள்ளித்திரையில் வாசிம் கான் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி பந்தாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கேப்டனின் கட்சி. இந்த கட்சியின் சுருக்கமான வரலாற்றைக் காண்போம்.தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலம் அது.இருவரிடமும் எந்த வித்தியாசத்தையும் உணராத ஒரு பகுதி மக்கள் ஒரு மாற்று கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த சமயம்.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என பொதுஅறிவுமிக்க பொதுஜனம் விரும்பிக் கொண்டிருந்த போது அவர் வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை காட்டி விட்டு இமயமலைக்கு ஓடிக் கொண்டிருந்த நேரம்.ரசிகர் மன்றத்தில் பிரியாணி,தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள் என சிறிய அளவில் அரசியல் செய்து கொண்டிருந்த விஜயகாந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கினார்.ஓரளவு ஆதரவும் பெற்றார்.திடீரென செப்டம்பர் மாதம்,2005 ஆம் ஆண்டு மதுரையில் மாநாடு நடத்தி கட்சியை துவங்கினார்.தலைவர் கட்சியின் பெயரையே மாநாடு அன்று காலையில் தான் முடிவு செய்தார் என்பது கொசுறு.தேசியத்தையும்,திராவிடத்தையும் கட்சியின் பெயரில் ஒன்று சேர்த்தது மாபெரும் சாதனை (முடியலடா சாமி).தமிழகத்தில் புதிய கட்சி அதுவும் பிரபலமான நடிகர் என்பதால் மீடியாக்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டன.மக்களோடும்,தெய்வத்தோடும் தான் கூட்டணி என எம்.ஜி.ஆரின் வேனில் ஏறி தமிழகம் முழுக்க சுற்றிச் சுற்றி மாற்று தேடிக் கொண்டிருந்த மக்களிடம் ஒரு சிறிய அபிப்ராயத்தை உருவாக்கியதால் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு சதவிகித அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.



தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை செய்யாத அரசியலை நான் செய்து காட்டுகிறேன் என சொன்னவர் அச்சு அசல் அவர்களைப் போலவே இவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் சட்டசபைக்கு செல்லவில்லை இன்று வரை.மேடைப் பேச்சில் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் போல பேசுவது இவருக்கு கூட்டம் கூட்டியது.ஆனால் மாற்றாக உருவாகியிருக்க வேண்டியவர் இன்று ஓட்டு சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ளவே அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெட்ட வெளிச்சமானது.மக்களுக்கு நல்லது செய்வது தான் கொள்கை என கூறி வந்தாலும் தெளிவான கொள்கை இல்லாமல் பிற கட்சிகளை சாடுவதே தன் முழுநேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.




அவரின் மேடைப் பேச்சைக் கேட்டவர்கள் ஒரு வரியாவது புரிந்தது என்று சொன்னால் அது அவர்கள் செய்த பாக்கியம்.முழுக்க முழுக்க விஜயகாந்தின் பிரபலமும், சினிமா பாணி பேச்சும் தான் இக்கட்சியின் பலமாக உள்ளது.தொண்டர்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றத்தினர் தான்.ஆனால் தலைவர்களாக உள்ளவர்கள் யாரென பார்த்தால் விஜயகாந்தால் ஊழல் கட்சி என பட்டம் சூட்டப்பட்ட திராவிடக் கட்சிகளில் இருந்து ஒரம்கட்டப்பட்டவர்களும்,உள்ளுரில் இரு கட்சிகளிலும் சேர முடியாத ஆனால் அரசியல் பலம் பெற விரும்பியவர்களும் தான்.குடும்ப அரசியலை சாடும் இவர் கட்சியிலும் மனைவியும்,மச்சானும் தான் முக்கிய சக்திகளாக விளங்குகின்றனர்.பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டுமே இந்த கட்சியில் தமிழக அரசியலின் நீண்ட கால வரலாற்றை உள்வாங்கி அதன் பாரம்பரியத்தில் திளைத்தவர் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் போனால் கட்சி கண்டபடி தள்ளாடுவது உறுதி.மற்ற அனைவருமே தமிழக அரசியலின் வரலாற்றில் ஆனா ஆவன்னா கூட அறியாதவர்கள் என்பதே உண்மை.அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கட்சிக் கூட்டம் ஒன்றில் பிரேமலதாவின் பேச்சு “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்ததென்றால் அது பெரியாரின் ஆட்சி தான்”.



விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மை சமீபத்தில் மதுரையில் நடந்த அவர் கட்சிக் கூட்டங்களில் வெளிப்பட்டது.மதுரை மக்களிடம் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் நற்பெயர் பெற்றிருக்கும் ஆட்சியர் சகாயம்,காவல்துறை ஆணையர் ஆஸ்ரா கார்க் ஆகிய இருவரையும் மேடையில் விளாசி எடுத்தார்.அதற்குக் காரணம் தன் கட்சிக் காரர்களை ஃபிளக்ஸ் பேனர் கட அனுமதிக்கவில்லை என்பதால்.குறைந்தபட்சம் இவர்களுக்கு தமிழர் நலன் சார்ந்த விடயங்களிலாவது கொள்கை இருக்குமா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.2009 ஆம் ஆண்டு தமிழகமே ஈழப் பிரச்சனைக்காக கொந்தளித்துக் கொண்டிருந்த போது தலைவர் ‘விருத்தகிரி’ திரைப்பட படப்பிடிப்பில் தான் முழு கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயம் ஒரே ஒரு கூட்டம் மட்டும் போட்டு ஒபாமாவிற்கு தந்தி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அதை அவர்கள் கட்சிக்காரர்கள் கூட செய்யவில்லை.தி.மு.க விற்கு எதிரான அலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து தற்சமயம் கிடைத்தாலும் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்ச இடங்களைக் கூட பிடிக்கவில்லை என்பது இவருடைய கட்சி பலத்திற்கு எடுத்துக்காட்டு.கட்சி தொடங்கிய 6 வருடங்களில் இப்பொழுது தான் முதன்முறையாக போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அதுவும் பிரதமருக்கு எங்கோ கறுப்புக் கொடி காட்டியதற்காக.விஜயகாந்தின் வளர்ச்சிக்குக் காரணம் சரியான நேரத்தில் அவர் கட்சியை தொடங்கியது மட்டும் தான் என கூறப்படுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

எதிர்காலம்

#ஆளுங்கட்சி அசுர வலிமையுடன் இருந்த போதே கோவையில் கூட்டிய ஒரு கூட்டத்தில் அரசியலில் மாபெரும் திருப்புமுனையை உருவாக்கியது அ.தி.மு.க. இப்பொழுது ஆளுங்கட்சி அத்தகைய வலிமையுடன் திகழுமானால் அதற்கு எதிராக நின்று நிலைக்க தேவையான வலு இந்த கட்சிக்கு இல்லை.
#இன்று வரை மக்களின் ஏகபோக நம்பிக்கையை வெல்ல முடியாததால் இனி வரும் காலங்களில் அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே அரசியலில் நிலைக்க முடியும்.
#ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும் பதவியை மட்டுமே இலக்காக கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களால் ஒரு வலுவான அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ முடியாது.மேலும் தோல்விகள் தொடருமாயின் அவர்களும் கட்சியை விட்டுச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
#திராவிட கட்சிகளுக்கு தான் மாற்று என சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த காரியத்தையும் விஜயகாந்த் செய்யவில்லை.அதே திராவிட கட்சிகளை பிரதி எடுத்தது போல் தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரை பற்றி பேசவே நிறைய எழுத வேண்டியதாகி விட்டது.அடுத்த பாகத்தில் முடித்துக் கொள்ளலாம்.
                                                                                                 -தொடரும்.

No comments:

Post a Comment