Monday 23 January 2012

வஞ்சம்-பகுதி 8

பகுதி 8 - அன்றோர் காலம்



தட்டுடன் நடந்து சென்றவள் தான் சற்று முன் உப்பரிகையிலிருந்து விழுந்தவள் என தெரிந்ததும் ஐவரும் திடுக்கிட்டனர்.நீரில் மூழ்க இருந்த தங்களை வழிகாட்டி அழைத்து வந்த அவளை பின்தொடர்ந்தனர்.யாரையோ தேடிக் கொண்டு அவள் ஒய்யாரமாக நடந்து சென்றாள்.முகமெங்கும் பருவத்தின் உற்சாகமும்,துள்ளலான புன்னகையும் அவளின் அழகை மென்மேலும் மெருகூட்டியது.இதற்கு முன் தாங்கள் இதே அரண்மனையில் கட்டப்பட்டு கிடந்த பொழுது இவ்வளவு பொலிவுடன் இந்த அரண்மனை இல்லை.ஆங்காங்கே இடுப்பில் வேட்டியும்,தலையில் முண்டாசும் கட்டிய பணியாட்கள் தரை,சுவர்,சிலைகள் என எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.முறுக்கேரிய உடம்பும்,காது வரை படர்ந்த மீசையும்,அகலமான தொடைகள் தெரியும்படி முறுக்கிக் கட்டிய வேட்டியும்,கையில் ஆளுயர வேலும்,இடுப்பில் குறுவாளும் கொண்டு ஆங்காங்கே காவல் வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர்.யாருமே இவர்கள் ஐவரையும் கவனித்ததாகத் தெரியவில்லை.இவர்கள் அங்கு இல்லாதது போலவே அவரவர் வேலையை கவனித்துக் கொண்டிருந்தனர்.ஐவரும் மிகுந்த குழப்பத்துக்குள்ளாயினர்.என்ன நடக்கிறது இங்கே? நாம் முன்பு பார்த்த மாதிரி இந்த இடம் இல்லையே? எப்படி இத்தனை பேர் திடீரென வந்தனர்? நம்மையும் யாரும் கண்டுகொள்ளவில்லையே? எல்லாவற்றிற்கும் நம்மை அழைத்து வந்த பெண்ணை பிடித்தால் தான் விடை தெரியுமென அவளை நெருங்க முயன்றனர். ஊஹும் அவளைத் தொட முடியவில்லை சீரான இடைவெளியில் அவள் பின்னே செல்ல முடிந்ததே தவிர நெருங்க முடியவில்லை.என்ன நடக்கின்றது என கவனிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது...

200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த காட்சிகளை ஐவரும் பார்வையாளராய் கண்டனர்
”திருநங்கை” துள்ளலாய் சென்று கொண்டிருந்த இளம்பெண் சோமசுந்தரம் தாத்தாவின் குரலுக்கு திரும்பினாள்.திருநங்கை 15 வயதே பூர்த்தியான பட்டாம்பூச்சி.அந்த அரண்மனைக்கே அழகு சேர்க்கும் நங்கை.அவள் இட்ட சொல்லை கட்டளையாய் செய்வது தான் அங்கிருக்கும் வேலையாட்களின் முதல் பணி.திருநங்கைக்கு தாய்,தந்தை இல்லை.சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர்.தாத்தாவின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறாள்.சோமசுந்தர தாத்தா திருநங்கையுடைய தாத்தா ராஜசிவத்தின் நீண்ட கால நண்பர்.இருவருடைய குடும்பமும் 4 தலைமுறைகளாக நெருக்கம்.பெருத்த உடல்,சிவந்த நிறம்,தளர்ந்த நடை கொண்டு வெளுக்காத வேட்டியும்,சட்டையும் போட்டுக் கொண்டு பாசமாய் பேசும் சோமசுந்தர தாத்தாவை திருநங்கைக்கு மிகவும் பிடிக்கும்.தன்னுடைய தாத்தாவிடமாவது அவளுக்கு கொஞ்சம் பயமிருக்கும் ஆனால் சோமசுந்தர தாத்தாவிடம் எந்த பயமுமின்றி சகஜமாய் பழகுவாள்.
“என்ன தாத்தா?” தவளும் புன்னகையுடன் பாந்தமாய் கேட்டாள் திருநங்கை.
“சமையல் பண்ணுறவங்க எல்லாரும் இன்னைக்கு மதியத்துக்கு உனக்கு என்ன செய்யட்டும்னு கேட்டுகிட்டே இருக்காங்களாமே நீ எதுமே சொல்ல மாட்டேங்குறியாம் அவங்க வேலை ஆரம்பிக்கணும்லமா ஏதாவது சொல்லுடா கண்ணு” திருநங்கையின் கன்னம் தடவி கேட்டார் சோமசுந்தர தாத்தா.
தன்னை போன்ற சின்னப் பெண்ணின்  கட்டளைக்காக காத்திருக்கும் வேலையாட்களை நினைத்து சிரிப்பு மேலிட்டாலும் அதை காட்டிக் கொள்ளாமல்”எத வேணாலும் செய்ய சொல்லுங்க தாத்தா” என சொல்லி விட்டு சிட்டாக விரைந்தாள்.
”எங்கடா கண்ணு போற?”
”தாத்தாவ பாக்க போறேன்” திரும்பாமல் பதில் சொன்னாள்.
 ”இரும்மா நானும் வரேன்” இருவரும் சேர்ந்து ராஜசிவ பூபதியை காண சென்றனர்.
அவளுடைய தாத்தா ராஜசிவ பூபதி தான் இந்த அரண்மனைக்கே அதிபதி.அவருக்கு சொந்தமாக இந்த மலையை சுற்றியுள்ள மலை கிராமங்கள் எல்லாம் வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தால் தரப்பட்டிருந்தது.அதன் மூலம் வரும் வருமானத்தில் அவர் ஒரு குறுநில மன்னர் போல அரசாண்டு வந்தார்.லண்டனுக்கு சென்று படித்து சிறுவயதிலேயே பல முனைவர் பட்டங்களைப் பெற்றவர் ராஜசிவ பூபதி.ஆறடி உயரம்,பாதி முகம் மறைக்கும் கலையாத வெள்ளை தாடி,பட்டுடை உடுத்தி மிடுக்காக அவர் நடந்து வந்தால் சத்தியமாய் 60 வயதென யாரும் சொல்ல மாட்டார்கள்.தன் மகளையும்,மருமகனையும் பெயர் தெரியாத வியாதிக்கு பலி கொடுத்து விட்டு பேத்தியை இளவரசி போல செல்லம் கொடுத்து வளர்த்து வருகிறார்.இப்பொழுது தோட்டத்தில் தன்னுடைய அந்தரங்க உதவியாளன் விஜயசேகரனுடன் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்.

விஜயசேகரன் ராஜசிவத்துடைய தூரத்து உறவினன்.23 வயதான இளைஞன்.5 1/2 அடி உயரமும், கருத்த நிறமும்,கட்டான உடல்வாகும் கொண்டவன்.வெளிநாட்டுக் கல்வி இல்லாவிடினும் உள்ளூரில் பயின்று பல நூல்களை கற்றுத் தேர்ந்தவன்.ராஜசிவத்தின் ஆராய்ச்சிக்கு உதவியாய் இருப்பானென கருதியதால் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.தீர்க்கமான சிந்தையுடையவன் எந்த விடயமாக இருந்தாலும் தடுமாறாமல் செயல்படும் ஆற்றல் உடையவன்.ஆராய்ச்சியின் போது சிக்கலான விடயங்களில் எளிதாக தீர்வு கண்டுபிடித்த இவனின் ஆற்றலை பலமுறை ராஜசிவம் பாராட்டியும்,வியந்துமிருக்கிறார்.கல்வியறிவு மட்டுமின்றி வாள்வீச்சிலும் வல்லவன்,வேலை எறிந்தால் ஆலமரத்தை கூட பிளந்துவிடும் ஆற்றல் படைத்தவன்.உடன் யாருமில்லாத அந்த தோட்டத்தின் தனிமை தங்களுடைய ஆராய்ச்சியை பற்றி பேச ஏதுவான இடமென்பதால் காலாற நடந்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

”நேத்து நீங்க பண்ணினது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல” விஜயசேகரன் ஏதோ மனக்கலக்கத்துடன் தலைகுனிந்தபடி கூறினான்.

”எத சொல்ற சேகரா?” அவன் பேசப்போகும் விசயம் அவருக்கு தெரிந்துதான் இருந்தது.

“நீங்க கிட்டதட்ட 10 வருசமா ஆராய்ச்சி பண்றீங்க.நான் 5 வருசமா உங்களுக்கு உதவியா இருக்கேன்.இந்த ஆராய்ச்சில நாம 2 பேரும் காட்ற ஆர்வம்,அக்கறைய விட ரெவரண்ட் ஃபெர்னாண்டஸ் எவ்ளோ அக்கறையா இருக்காரு.நாம சில சமயம் துவண்டு போனா கூட அவர் எத்தன முறை நமக்கு உதவிருக்காரு.அவர் கிட்ட நீங்க இப்படியா பண்றது?” நேற்று மாலையிலிருந்து அடக்கி வைத்த கோபத்தையெல்லாம் பொங்கித் தீர்த்தான்.

ராஜசிவம் பதில் எதுவும் சொல்லாமல் பரிகாசமாய் உதட்டோரத்தை இழுத்து லேசாக புன்னகைத்தார்.இந்த அலட்சியம் விஜயசேகரனை மேலும் ஆத்திரமூட்டியது சற்று பலமாகவே பொங்கினான்.

“அவர் என்ன அவ்வளவு சாதாரண ஆளா? அவர் ஒரு வார்த்தை சொன்னா இந்த ஜில்லாவே நடுங்கும்.அவரோட கட்டளை ஒண்ணு போதும் இந்த நாட்டொட எந்த மூலையையும் இல்லாம பண்ணிடுவாரு.ஆனா உங்க கிட்ட மட்டும் எவ்வளவு கனிவா இருக்காரு அதுக்கு காட்ற நன்றி தானா இது? இத்தன நாளா செஞ்ச ஆராய்ச்சிகள எல்லாம் அவர்கிட்ட இருந்து மறைச்சுட்டு ஏதோ சின்ன புள்ளைகளுக்கு வேடிக்கை காட்ற மாதிரி சின்ன விசயங்கள காட்டிட்டு அவர ஏமாத்திட்டீங்க.பாவம் மனுசன் ரொம்ப நொந்திருப்பாரு” ரொம்பவே வேதனைப்பட்டான். 


”ஆமா ஆராய்ச்சிக்கு காசு குடுக்கறவன் எதிர்பார்க்குற அளவு ரிசல்ட் கிடைக்கலனா நோகத்தான் செய்வான்.இட்ஸ் நேச்சுரல்” அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னார் ராஜசிவம்.

”எனக்கு தெரியும் நீங்க நேத்து அவர்கிட்ட காமிச்சதெல்லாம் வெறும் சின்ன சின்ன வேலைகள் அதுக்கு மேல நிறைய செஞ்சீங்களே அதெல்லாம் ஏன் அவர்கிட்ட காமிக்கல.இதெல்லாம் நன்றி கெட்டத்தனமா தெரியல?” விஜயசேகரன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.

’’கொஞ்சம் மூச்சு விடு விஜயா” அவரின் அலட்டலில்லாத உட்பொருள் பொதிந்த பதிலோடு ஏதோ சொல்லப் போகும் பரவசம் அவரிடம் இருந்தது. ”உனக்கு சில விசயங்கள் நேரம் வரும் போது தெரிஞ்சா போதும்னு நினைச்சேன்.ஆனா அது எதையும் உனக்கு தெரியப்படுத்தாம போயிடுவனோனு எனக்கு பயமா இருக்கு.அதனால இப்ப உனக்கு தெரிய வேண்டிய எல்லா விசயத்தையும் சொல்றேன் கேளு.ரெவரண்ட் ஃபெர்ணாண்டஸ்ஸ 30 வருசத்துக்கு முன்னாடி நான் லண்டன்ல படிச்சுட்டு இருந்தப்ப இருந்தே தெரியும்.அந்த சமயம் லண்டன்ல அவர் சர்ச்சோட சமயப் பள்ளில படிச்சிட்டிருந்தாரு அவரோட மதத்துல தீவிர பற்று கொண்டவரு.எப்படியாவது உலகம் முழுக்க தன்னுடைய மதத்த பரப்பணும்னு ஆசைப்பட்டவரு.என்னோடயும் பல தடவ விவாதம் பண்ணிருக்காரு.எனக்கு அவரோட தீவிரமான பற்று பிடிச்சிருந்தது.அதே நேரம் நான் பாரானார்மல் சயின்ஸ்ல முனைவர் பட்டத்துக்காக படிச்சுட்டு இருந்ததால என்னோட ஆராய்ச்சி முடிவுகள் அவருக்கு பயன்படும்னு என்னோட நட்பாயிட்டாரு.படிப்பு முடிச்சதும் நான் இந்தியாவுக்கு திரும்ப வந்துட்டேன்.ஆராய்ச்சி,ஆராய்ச்சினு செலவு பண்ணி அரண்மனைய கவனிக்காம விட்டதால கடன் தலைக்கு மேல போயி 10 வருசத்துக்கு முன்னாடி என்னோட ஜமீன் சொத்துக்கள் எல்லாம் வெள்ளையர்கள் கைக்கு போயிடுச்சு.என் மகள்,மருமகன்,பேத்தி எல்லாரும் நடுத்தெருவுக்கு வந்துட்டோம்.அப்ப ஃபெர்னாண்டஸ் இந்தியாவுல மாபெரும் மதத்தலைவர். எப்படியோ என்ன தேடிபுடிச்சு வந்து பார்த்தாரு.என்னோட நிலைமைய புரிஞ்சுகிட்டு அரசாங்கத்து கிட்ட என்னுடைய அரண்மனை மட்டுமில்லாம,10 மலை கிராமங்களும் எனக்கு குடுக்க வெச்சாரு.அதுக்கு பிரதிபலனா என்னை பாரானார்மல் சயின்ஸ்ல ஆராய்ச்சி செய்ய சொன்னாரு”

“பாரானார்மல் சயின்ஸா? நீங்க ஆவிகள பத்திதான ஆராய்ச்சி பண்றீங்க?” விஜயன்.

”ஆமா.அதுவும் ஒரு சயின்ஸ்தான்.நார்மலா நடக்குற ஆராய்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட சயிண்ஸ்.இட்ஸ் டோட்டலி டிஃபெரெண்ட்” ராஜசிவம் தன்னுடைய ஆராய்ச்சிய ஆழத்தை உள்ளூர சிலாகித்து மேம்போக்காய் பதில் சொன்னார்.

”இவ்ளோ நாள் வேலை வாங்கினீங்க அப்பப்போ ஏதாவது இத்துனூண்டு சமாச்சாரம் மாயமந்திரம் மாதிரி சொல்லி குடுத்தீங்க.இப்ப தான் தெரியுது நீங்க எங்கிட்ட இதுவர எதுவும் சொன்னதில்லனு.அவர் உங்களையும் உங்க ஆராய்ச்சியையும் காப்பாத்தறக்கு தான எல்லாம் செஞ்சாரு அவர் கிட்ட ஏன் மறைக்கனும்?” விஜயனுக்கு அவரிடம் எதையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.

”நான் கண்டுபிடிச்ச விசயங்கள தெரிஞ்சுகிட்டா உனக்கு தலை வெடிச்சுடும்” என சொல்லிவிட்டு வானத்தை நிமிர்ந்து பார்த்து மெல்ல சிரித்தார் “நீ மட்டுமில்ல இந்த உலகமே என்னை நோக்கி படையெடுக்கும் அதுக்கு முன்னாடி இந்த கண்டுபிடிப்ப பாதுகாக்கனும்.இத உனக்கு படிப்படியா புரிய வெச்சு இத உலகத்தின் புதிய சக்தியா உருவாக்கனும்.அதனால தான் யாருக்கும் இத பத்தி நான் சொல்லல.இன்னும் ஃபெர்னாண்டஸ்க்கு கூட நான் என்ன செய்யறேன்னு தெரியாது.அவனுக்கு என் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு.அவன் முழிக்கறக்கு முன்னாடி நாம வேகமா செயல்படணும்”

”என்னமோ சொல்றீங்க.ஆனா எனக்கு சுத்தமா புடிபடல” விஜயன் சலித்துக்கொண்டான்.

”அது...” ராஜசிவம் ஏதோ சொல்லத் தொடங்கும் பொழுதே தூரத்தில் திருநங்கையும், சோமசுந்தர தாத்தாவும் வந்து கொண்டிருந்தனர்.ஆகையால் உரையாடலை உடனடியாக நிறுத்தினார்.துள்ளி வந்த நங்கை தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

”என்னமா மாப்பிள்ளை முன்னாடி இப்படி உட்காரலாமா?” விஜயசேகரனை மாப்பிள்ளையென விளித்து நங்கையை கேலி செய்வது சோமசுந்தர தாத்தாவுக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

”இந்த கருவாயன யார் கட்டிப்பா?” இடது கையை காற்றில் இடமும் வலமுமாய் ஆட்டி பல்லை கடித்துக் கொண்டு விரிந்த இதழ்களுடன் கேலியாய் அவள் சொன்ன அழகில் சொக்கித்தான் போனான் சேகரன்.இருப்பினும் அவள் அழகுக்கு தான் பொருத்தமானவன் இல்லை என அவனுக்குள் ஓர் தாழ்வு மனப்பான்மை உண்டென்பதால் அவன் என்றைக்கும் தன் ஆசையை வெளிப்படுத்தியதில்லை.

”ஓகோ... அம்மனிக்கு கரடு மாதிரி நல்லா தின்னு கொழுத்த வெள்ளைக்கார துரைய கூட்டி வரேன்.மாட்டு கறி,பன்னி கறினு சீதனம் கொடுத்து கட்டிக்குங்க ”  அவனும் தன் அன்பை பரிகாசத்தில் மறைத்தான்.
                                                                                                             -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்தவற்றை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்...

வஞ்சம்


No comments:

Post a Comment