Tuesday 17 January 2012

வஞ்சம் - பகுதி 7

                                                        பகுதி 7-திருநங்கை

படிக்கட்டில் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர் சிவாவும் நண்பர்களும்.வேறு என்ன செய்ய? மாளிகை முழுதும் தேடிப் பார்த்த பொழுது யாருமே தென்படவில்லை, திடீரென ஓலக்குரல் கேட்டு ஓடிப்போய் பார்த்தால் அங்கே ஒருத்தி உப்பரிகையில் இருந்து கீழே குதிக்கின்றாள்,இப்பொழுது அவள் ஓடிப்போய் குதித்த அறையும் இருந்த சுவடே தெரியாமல் தானாய் மூடிக்கொண்டது.எல்லாவற்றிற்கும் மேல் பஷீர் ஏன் கடத்தப்பட்டான்? தாங்கள் ஏன் இங்கே அடைக்கப்பட வேண்டும்? என மாறி மாறி மண்டையை குடைந்தது.ஐந்து பேரும் குழப்பத்தின் உச்சிக்கே வந்துவிட்டனர்.

”டேய் நாம இப்ப என்னதாண்டா பண்றது? இங்க சாப்பிடக் கூட ஏதும் கிடைக்காது போல,என்னென்னமோ நடக்குது.யோசிக்க கூட முடியல அவ்ளோ டயர்டா இருக்கு.என்னால முடிலடா” சுவரில் சாய்ந்தபடி விக்கி புலம்பினான்.பசி பொறுக்க முடியாது தவித்தான்.வேலை,சோறு,மது,காதல் என சராசரி குதூகலத்துடன் வாழ்ந்தவனாதலால் அவனால் இந்த அசாதாரண சூழ்நிலையையும்,பசியையும் பொறுக்க முடியவில்லை.

”நாம என்ன பிக்னிக்காடா வந்திருக்கோம் ஐஸ் பாக்ஸ்ல இருந்து அள்ளிப்போட்றக்கு” சிவாவும் அயர்வாக இருந்ததால் படிக்கட்டின் பிடியில் சரிந்தான். “சிவா” ஐசுவர்யா கெஞ்சலாய் அழைத்ததும் திரும்பினான். “பசிக்குதுடா” என அவள் பாவமான கண்களோடு கேட்ட பொழுது சிவா தவித்துவிட்டான்.தன் வாரிசை சுமக்கும் ஆருயிர் காதலிக்கு பசியை கூட போக்காவிட்டால் தான் என்ன ஆண்மகன் என அவனுக்கு உள்மனது குத்தியது. பெண் துணைக்காக வேட்டையாடப் போகும் காட்டில் வாழ்ந்த ஆணைப் போல ஆகிவிட்டான்.
”இருடா தங்கம் கொஞ்சம் பொறுத்துக்க.நான் இங்க ஏதாவது இருக்கான்னு பாத்துட்டு வரேன்” சிவா எழுந்ததும் சுதாகரும் எழுந்து உடன் சென்றான். விக்கி தன்னால் இதற்கு மேல் நடக்க முடியாது எனக் கூறி வர மறுத்து விட்டான். ’பொண்டாட்டிக்குன்னா மட்டும் எந்திரிச்சு போவானுங்க’ காதுபடும்படி விக்கி புலம்பினாலும் அதை பொருட்படுத்தாது இருவரும் சென்றனர்.
2ஆம் தளத்தில் நுழைந்த போதே நெய் போல ஏதோ வாசனை வந்தது.பசியால் நடக்க முடியாது நடந்து கொண்டிருந்த இருவருக்கும் அந்த வாசனை வாயில் எச்சில் ஊற வைத்தது.உணவு கிடைக்கப் போகும் நம்பிக்கையில் கால்கள் புதிதாய் எங்கோ ஒளித்து வைத்திருந்த சக்தியை திரட்டிக் கொண்டு வேகமாக நடந்தது.வாசனை வந்த திசையை நோக்கி விரைந்தனர்.ஒரே ஒரு அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.பரவசப்பட்டவர்கள் உதவி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளே நுழைந்தனர்.ஓற்றை படுக்கையின் அருகில் இருந்த சின்ன மேசையில் அகல் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது கூடவே ஒரு தாம்பூலத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது.அதை திறந்து பார்த்த பொழுது உள்ளே 10 பேர் சாப்பிடக் கூடிய அளவு நெய் சாதம் இருந்தது.இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயினர்.உடனே அந்த தட்டை எடுத்துக் கொண்டு படிக்கட்டுக்கு சென்றதும் ஐந்து பேரும் அரக்க பரக்க சாப்பிட்டனர்.சிவா தனக்கு கிடைத்த பங்கில் பாதியை ஐசுவர்யாக்கு ஊட்டி விட்டான்.யாருமில்லாத வீட்டில் தட்டில் சோறு எப்படி என யோசிக்கவெல்லாம் யாருக்கும் தோன்றவில்லை.சாப்பிட்டு முடித்ததும் தான் பூமியில் இருப்பதாய் உணர்ந்தனர்.
சேர்ந்தார் போல் அனைவருக்கும் விக்கல் எடுக்கத் தொடங்கியது.வேகமாய் சாப்பிட்டதால் வந்த விக்கலா?இல்லை உணவில் ஏதும் கலந்துவிட்டனரா? என குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.திடீரென தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது.உணவு கிடைத்ததைப் போலவே தண்ணீரும் கிடைக்குமென சத்தத்தைத் தொடர்ந்து 5 பேரும் சென்றனர்.முதல் தளத்தில் ஓர் அறையில் அதே போல  விளக்கொளி தெரிந்தது.உள்ளே தண்ணீர் தழும்பிய ஒரு அண்டாவும் அதன் அருகே ஒரு சொம்பும் இருந்தது.ஐந்து பேரும் தண்ணீரை மொண்டு மொண்டு குடித்தனர்.உருகிய பனிக்கட்டி நீரில் தேன் கலந்தது போன்று சுவையில் உள்ளம் வரை நீர் இனித்தது.இவ்வளவு சுவையான நீரை அவர்கள் இதுவரை வாழ்வில் பருகியதில்லை.
தாகம் தீர்ந்ததும் சொம்பை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே செல்ல முற்பட்டனர்.சிவா அறை வாசல் அருகே சென்ற பொழுது அறையின் கதவு அசுர வேகத்துடன் இடி போன்ற பலத்த ஓசையுடன் படாரென மூடியது.சிவா சற்று முன்னே நின்றிருந்தால் உடல் துண்டாய் போயிருக்கும்.அதிர்ச்சியில் உறைந்து நின்ற சிவாவின் சட்டையை பிடித்து ஐசுவர்யா பின்னிழுத்துக் கொண்டாள்.அவனுக்கு எதும் ஆகவில்லையென உறுதி செய்து கொண்டாள்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னர் ஐவருக்கும் பின்னால் சரக் சரக் என சத்தம் கேட்டது.இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் படபடக்கத் தொடங்கியது.யாருக்கும் திரும்பிப் பார்க்கும் தைரியம் இல்லை.ஐசுவர்யா சிவாவின் தோளில் முகத்தை பதுக்கி கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள். முக்கால் பகுதி தண்ணீர் நிரம்பியிருந்த அண்டா மெல்ல ஆடத் தொடங்கியது.மெதுமெதுவாய் அதன் வேகம் அதிகரித்து ஒரு சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.சூறாவளி போல அதன் வேகமும் சத்தமும் அதிகரிக்கத் தொடங்கியது.சத்தத்தின் அளவு அதிகமாக அதிகமாக எல்லோருக்கும் வியர்த்துக் கொட்டியது.திரும்பிப் பார்த்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் உடல் வெடவெடத்தது.பயத்தின் பாரம் தாளாது சுதாகர் திரும்பிப் பார்த்தான்.காற்றே இல்லாத அறையில் கனமான அண்டா இவ்வளவு வேகமாய் சுற்றுவது கண்டு விக்கித்துப் போனான்.அவன் விழிகள் விரியவும் அண்டா சாய்ந்து விழுந்து அறை முழுதும் தண்ணீர் சிதறவும் சரியாய் இருந்தது.தங்கள் மேல் தண்ணீர் தெரித்ததும் மற்ற நால்வரும் பயத்தில் பதறிப் போய் அடிவயிற்றின் ஆழ்த்திலிருந்து கத்தினர்.ஐவரும் உடல் வியர்த்து,நெஞ்சு படபடக்க,நடுங்கியபடி திரும்பிய போது அறை முழுதும் வெள்ளம் வந்தது போல கணுக்கால் அளவு தண்ணீர் தேங்கியிருந்தது.
”எனக்கு பயமா இருக்கு சிவா,போயிடலாம் சிவா,ப்ளீஸ் என்ன வெளில கூட்டிட்டு போ” சிவாவின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு அலறினாள் ஐசுவர்யா.அவளை தைரியபடுத்தும் நிலையில் சிவா இல்லை.முற்றிலும் பயத்தால் உறைந்திருந்தான்.மற்ற மூவரின் நிலையும் அதுதான்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவின் அருகே செல்ல சுதாகர் முயற்சி செய்தான்.சற்று முன் கணுக்கால் அளவு இருந்த தண்ணீர் இப்பொழுது அதிகமாகிவிட்டது போல தோன்றியது அவனுக்கு.ஆம் சரிதான் தண்ணீர் ஏறத் தொடங்கியது.முட்டியளவு நீரில் நடக்க அனைவரும் தடுமாறினர்.சுதாகர் கதவை பிடித்து திறக்க முயன்றான்.எவ்வளவு இழுத்தும் முடியவில்லை.சிவாவும்,விக்கியும் சேர்ந்து கைகொடுத்தனர்.பெரும்பலம் கொண்டு இழுத்தனர்.கொஞ்சம் கூட கதவு அசையவில்லை.தண்ணீர் இடுப்பளவு ஏறிக்கொண்டது.நிரின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.ஐசுவர்யாவும்,ஹரிணியும் தேம்பித் தேம்பி அழுதனர்.கழுத்தளவு வந்த நீர் நொடிப் பொழுதில் தலைக்கு மேல் ஏறிவிட்டது.



எல்லோருக்கும் ஓரளவு நீச்சல் தெரியுமாதலால் எம்பி எம்பி காற்றிருக்கும் இடைவெளியிலேயே இருக்க முயற்சித்தனர்.நீர் குறைந்தபாடில்லை.மேலும் மேலும் ஏறிக்கொண்டிருந்தது.தலை கூரையை இடித்தது.இதற்கு மேல் காற்றும் இல்லை.தண்ணீர் அறையை மூழ்கடித்தது.கிடைத்த காற்றை உள்ளிழுத்துக் கொண்டு ஐவரும் நீரினடியில் சென்றனர்.
உள்ளே சென்றவர்கள் கண்ட காட்சி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.
நீரின் அடியில் ஒரு பெண் எந்த சலனமுமின்றி நின்றிருந்தாள்.நீச்சலடிக்கவோ,நகரவோ அவள் முற்படவில்லை.அவளுக்கு 15 வயதிருக்கும்.பால் முகம் கலைந்து சில நாட்களே ஆன பருவ முகம்.பட்டுடை உடுத்திய சீமாட்டி.நீரில் இருந்ததால் முகம் சரியாக புலப்படவில்லை.சிவாவின் கண்களையே அவள் உத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் ஏதோ சொல்ல வருவது போல தோன்றியது.சிவாவால் அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.



சட்டென உடலைத் திருப்பி அவள் நீந்தத் தொடங்கினாள்.கட்டளையிட்டது போல் சிவாவும் அவள் பின்னே நீந்திச் சென்றான்.எல்லோரும் அவளுடன் நீந்தினர்.காட்டாற்று வெள்ளம் போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.அந்த பெண் வளைந்து நெளிந்து நீந்தி சென்றாள்.அவள் சென்ற பாதை திடீர் திடீரென எங்கெங்கோ வளைந்ததால் பிந்தொடர்வது படு சிரமமாயிருந்தது. சிறிது தூரம் வந்ததும் ஒரு வெளிச்சம் தெரிந்தது.நெருங்க நெருங்க அது ஒரு கதவென தெரிந்தது.நீண்ட தூரம் நீந்தியதால் மூச்சு முட்டத் தொடங்கியது.கதவை நோக்கி வேகமாய் நீந்தினர். நீரில் வந்த அனைவரும் அந்த கதவின் வழியே வெளியே விழுந்தனர்.அவர்கள் முன்பு அமர்ந்திருந்த படிக்கட்டின் அருகிலேயே விழுந்தனர்.தண்ணீர் எல்லாம் வடிந்து வெளியேறியது.இறுமி இறுமி நுரையீரலில் நுழைந்த தண்ணீரை வெளியேற்றினர் ஐவரும்.வேக வேகமாக காற்றை உள்ளிழுத்தனர்.சிறிது நேரம் சென்ற பின்னரே நிதானத்திற்கு வந்தனர்.சற்று முன் அவர்களை அழைத்து வந்த பெண்ணை இப்பொழுது காணவில்லை.சுற்றும் முற்றும் பார்த்த பொழுது விக்கி அதிர்ச்சியடைந்தான்.தங்களுடன் நீந்தி வந்தவள் கையில் ஒரு தட்டும் அதில் சில கோப்பைகளையும் ஏந்திக் கொண்டு மலர்ந்த முகத்துடன்,உடலில் துளி ஈரம் இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தாள்.அந்த பெண்ணின் அருகே சென்று அழைத்தனர்.இவர்கள் பேச்சு அவளுக்கு கேட்டதாய் தெரியவில்லை.தன் போக்குக்கு அவள் நடந்து சென்றாள்.சற்று நெருக்கமாய் அவள் முகத்தை பார்த்த பொழுது ஐவரும் திடுக்கிட்டனர்.அவள் வேறு யாருமல்ல கொஞ்ச நேரத்திற்கு முன் உப்பரிகையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாளே அவளேதான்... 
                                                                                                                       -காத்திருங்கள்

இதற்கு முன் நடந்ததை தெரிந்து கொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்

No comments:

Post a Comment