Thursday 17 November 2011

விளையுதுங்கோ!!!

என் இனிய தமிழ் மக்களே!!!!
பால் விலை 7 ரூபா ஏறிப் போச்சு!
பயண சீட்டு பல மடங்கு மாறிப் போச்சு!
மின்சாரம் சீக்கிரமா அதிர்ச்சி கொடுக்கும்!



”என்னடா நாராயணா சட்டை இல்லாம வர்ற?”
 இப்படித்தான் கேட்கத் தோனுது நம் மக்களைப் பார்த்தா. நேத்து மதியம் தீடீர்னு முதல்வர் ஆத்தா ஜெயா தொலைக்காட்சில வந்து காங்கிரச அரச திட்ட ஆரம்பிச்சப்பவே பொறி தட்டுச்சு கருணாநிதி வாய்க்கு அவல் கிடைக்க போகுதுனு.மம்தா அரசுக்கு 21,000 கோடி ரூபா சும்மாவே குடுக்கறாங்க நமக்கு 6 மாசமா நிதி கேட்டும் குடுக்கலனு ஆரம்பிச்சு பாலையும்,பேருந்து கட்டணத்தையும் உசத்தி விட்டதோடு நிப்பாட்டாம உங்கள விட்டா எனக்கு வேற யார் இருக்கானு கேட்டு செம செண்டிமெண்ட்டு பா. சன் நியூஸ் முழுக்க முழுக்க மக்கள் கருத்து, கண்டனம்னு ஜாலி பண்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் மத்திய காங்கிரசு அரசும், முந்தைய மைனாரிட்டி தி.மு.க (இன்னுமா?) அரசும் தான்னு அம்மா சொல்ல. மக்களே அத முடிவு பண்ணட்டும்னு கருணாநிதி சொல்ல, மத்திய அரசு கொடுக்கற நிதிய மாநில அரசு ஒழுங்கா பயன்படுத்தலனு தமிழக காங்கிரசின் புது டம்மி பீசு தலைவர் ஞானதேசிகன் சொல்ல... அப்பப்பபபா... உண்மையில இதுக்கு யார் காரணம்னு நமக்கு தெரியாதா பாஸு? தெரியலியா? போய் கண்ணாடில மொகரைய பாருங்க நல்லா தெரியும்.

“இப்பிடி எல்லாம் விலை ஏத்தினா நாங்க எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?”
“நாங்க வாங்கற சம்பளத்துல இதெல்லாம் எப்படி சமாளிக்கறுதுனே தெரியல”

அடேய் அடேய்.... இதெல்லாம் மக்கள் பேட்டில சொல்றத கேட்கும் போது எரிச்சலா வருதுங்க அதுவும் சன் டி.வி ல யே சொல்றாங்க அது தான் காலத்தின் கொடுமை.2001-2006 ஆட்சி காலத்துல ஆத்தாவோட ஆட்சில எந்த ஊழல் குற்றச்சாட்டும் வரல அதுமில்லாம தமிழகத்தின் எந்த முதல்வரும் செய்யத் தயங்குற, துணியாத பல விசயங்கள அனாயாசமா செஞ்சு முடிச்சுது ஆத்தா.உதாரணமா லாட்டரிய ஒழிச்சது, மணல் அள்ளுவத அரசுடைமை ஆக்குனது, ஒரு சிலர் வரமுறை இல்லாம சம்பாதிச்ச மது தொழில அரசாங்கத்துக்காவது காசு வரட்டும்னு எடுத்துகிட்டது,கிராமப்புற மாணவர்களுக்காக தொழிற்கல்விகளுக்கு நுழைவுத் தேர்வ தூக்கினதுனு இன்னும் சொல்லிட்டே போகலாம். நமக்கு இதெல்லாம் பத்தல. அடுத்த தேர்தல்ல கருணாநிதிய ஆட்சில உட்கார வெச்சோம்.



 சத்தியமா சொல்றேன் அதுல எந்த தப்பும் இல்ல சாமி. ஆனா நாம எதுக்காக கருணாநிதிய தேர்ந்தெடுத்தோம்? அங்க தான ஆப்பு காத்துகிட்டு இருந்துது.நல்ல நிர்வாகம் தரேன்னு சொன்னாரா? சட்டம் ஒழுங்க காப்பாத்தறேன்னு சொன்னாரா? கல்வி தரத்த உயர்த்தறேன்னு சொன்னாரா? இல்லையே... இலவச கலர் டி.வி, 2 ஏக்கர் நிலம் இலவசம்,எரிவாயு அடுப்பு இலவசம்- இந்த வார்த்தைகள கேட்டதும் எப்படி பிரகாசமா பல்பு எரிஞ்சுது மூஞ்சி? அப்ப கொஞ்சமாவது யோசிச்சீங்களா இதெல்லாம் நடந்தா நிதி நிலைமை என்னாகும்? அரசாங்க வரவு செலவு என்னாகும்? பத்தாத காசுக்கு என்ன பண்ணுவாங்க? இதெல்லாம் நமக்கெதுக்கு கருணாநிதி வந்ததும் கலர் டி.வி குடுத்தாரா சன் டி.வி, கலைஞர் டி.வி ல அவர பாராட்டி பல்ல இளிச்சுகிட்டு பேட்டி குடுத்தமானு  ஜாலியா இருந்துட்டோம். அதோட விட்டமா நாம? நடந்த இடைத்தேர்தல்ல எல்லாம் 500,1000 ம்னு வாங்கிட்டு ஒரு சிறந்த ஜனநாயக பாதைய வெளிச்சம் போட்டு காமிச்சீங்க. நிர்வாகத்த பத்தி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்ல காசு இருந்தா ஆட்சினு சொல்லிட்டிங்க. நிர்வாகம் சீர்குலைய ஆரம்பிச்சுது.அரசின் அடி முதல் முடி வரை காசு சேர்க்கவே எல்லரும் அலைஞ்சாங்க.மின்சாரம் பத்தலையா ரெடிமேடா வங்கிக்கலாம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. புது உற்பத்தி எல்லாம் வேண்டாம் அந்த காசுல வேற ஏதாவது இலவசமா குடுக்கலாம்னு தாத்தாவும் செட்டில் ஆயிட்டாரு. இதனால என்னாச்சு? பெருசா ஒன்னும் நடக்கல மச்சி. நம்மளோட கடன் தொகை 1,00,000 கோடி ஆச்சு, 4000 கோடியா இருந்த மின் வாரிய கடன் 5 வருசத்துல 40,000 கோடி ஆச்சு, போக்குவரத்துக் கழகம் பஞ்சர் ஆகிப் போச்சு.

நீங்க போன தேர்தல்ல பண்ண அடாவடிய பாத்து பயந்து இந்த தேர்தல்ல ஆத்தாவும் மிக்ஸி, கிரைண்டர்னு குடுத்து உங்க பாரம்பரியத்த காப்பாத்த வேண்டியதா போச்சு. அனகோண்டாவ எடுத்து அண்டர்வேர்ல விட்டுட்டு இப்ப குத்துதே குடையுதேனா? கொத்தோட புடுங்காத வரை சந்தோசப் பட்டுக்கங்க. குசராத்து குசராத்து னு ஒரு மாநிலம் இருக்கு. அங்க நடந்த தேர்தல்ல காங்கிரசு இப்படித் தான் கலர் டி.வி, அடுப்புனு அளந்து விட்டுச்சு.அப்ப மோடி என்ன சொன்னார் தெரியுமா? “எங்கள் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” னு சொன்னாராம். எல்லா இலவசத்துக்கும் ஒரு விலை உண்டு மக்களே! முற்பகல் செய்தோம் பிற்பகல் விளையுதுங்கோ...
                                                                                         -மு.சுந்தர பாண்டியன்

No comments:

Post a Comment