Tuesday, 3 January 2012

ஆண்ட்ராய்ட் கைபேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

வெகுநாட்களாக என்னுடைய ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்வது எனத் தெரியாமல் பல வகையில் குழம்பினேன்.இன்று ஓய்வாக இருந்த சமயம் செய்த சிறு முயற்சி பலனளித்துவிட்டது.அதை உங்களுடன் பகிர்கின்றேன்.



கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

1) உங்கள் அலைபேசியில் செயலிகளை விற்பனை செய்ய ஒரு செயலியை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும்.அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை.அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை அழுத்தவும்.

3) தமிழ் தொடர்புடைய செயலிகள் (அகர முதலி, தட்டச்சு) பட்டியல் வரும்.அதில் உங்களுக்கு பிடித்த தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்து பதிவிறக்கவும்.நான் தேர்வு செய்தவை தமிழ் விசை, பணிணி, கே.எம் தமிழ் கீபோர்ட், தமிழ் கீபோர்ட். இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது.

4) உதாரணத்திற்கு சாம்சங் கைபேசியில் தமிழ் விசையை எடுத்துக் கொள்வோம்.இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கைபேசியில் நிறுவிக் கொள்ளவும்.

5) உங்கள் கைபேசியின் மெனுவை திறந்து SETTINGS  பகுதிக்கு செல்லவும்.

6) SETTINGS ல் உள்ள LOCALE AND TEXT என்னும் தேர்வை திறக்கவும்.அதன் உள்ளே நீங்கள் பதிவிறக்கம் செய்த தமிழ்விசை செயலி பட்டியலிடப்பட்டிருக்கும்.அதனை தேர்வு செய்துவிட்டு மாற்றங்களை சேமிக்கவும்.

7) SETTINGS லிருந்து வெளியேறி புதிய குறுந்தகவலை தட்டச்சு செய்யத் தொடங்கவும்.வார்த்தைப் பெட்டியில் (TEXT BOX)  விரலை வைத்து அழுத்திப் பிடித்தால் INPUT MODE என்னும் தேர்வு திரையில் வரும் அதை திறக்கவும். அதன் உள்ளே SAMSUNG KEYPAD, TAMIL VISAI ஆகியவை இருக்கும்.தமிழ் விசையை தேர்வு செய்யவும்.தமிழ் தட்டச்சுப் பலகை தோன்றும்.மகிழ்ச்சியுடன் தமிழில் தட்டச்சு செய்து தமிழை பரப்புங்கள்.

FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE "about:config" WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS "USE BITMAP TO SEE COMPLEX FONTS" IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

ENJOY TAMIL FONTS IN MOBILE.  

Monday, 2 January 2012

வஞ்சம்-பகுதி 6

                                                        பகுதி 6-மாளிகை

”சிவா சிவா”
மார்பில் அழுத்தி உலுக்கியதில் கண்விழித்து எழுந்தான்.
சிவாவைச் சுற்றி நால்வரும் அமர்ந்திருந்தனர்.தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவன் கடைசியாக என்ன நடந்ததென யோசித்துக் கொண்டே கைகளைப் பார்த்தான்.கயிறால் இறுக்கிக் கட்டியிருந்ததால் மணிக்கட்டு சிவந்திருந்தது, வலி எடுத்ததால் லேசாக மணிக்கட்டை சுற்றினான்.தலை சுற்றலுடன் நிமிர்ந்து பார்த்தவன் முன் ஐசுவர்யாவும் மற்ற நண்பர்களும் அமர்ந்திருந்தனர்.ஐசுவர்யா அவன் தோளைப் பற்றிக் கொண்டாள்.

“தலைவலிக்குதா சிவா?” தலையை தடவிக் கொடுத்து பரிவுடன் கேட்டாள்.
”இல்ல,பரவால்ல... உனக்கு ஒண்ணும் ஆகலியே?” கொஞ்சம் சுயநலமாய் கேட்டு விட்டதால் வெட்கி “யாருக்கும் எதுவும் ஆகலல?” என வினவினான்.

“ஒண்ணும் ஆகலடா,எல்லாரும் இப்ப தான் முழிச்சோம்.அந்த காட்டுவாசிப் பயலுங்க இங்க கொண்டு வந்து போட்டுட்டானுங்க” விக்கி.

“இது என்ன இடம்னு கூடத் தெரியல ஏதோ பழைய வீடு மாதிரி இருக்கு.வெளிய போறதுக்கு ஏதாது வழி இருக்கான்னு பார்க்கணும்” சுதாகர் சொன்னவுடன் தான் சிவா தாங்கள் எங்கே அடைபட்டிருக்கிறோம் என பார்த்தான்.



ஓரெழுத்தில் சொன்னால் அது அரண்மனை.ஆனால் அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் பக்கம் பக்கமாய் வர்ணிக்கலாம்.ஒரே சீராய் செதுக்கப்பட்ட கருங்கற்களினால் ஆன சுவர்கள் குறைந்தபட்சம் முப்பதடி உயரமாவது இருக்கும்.ஒவ்வொரு கல்லின் நான்கு முனைகளிலும் கொடிகளைப் போல வளைவுடன் செதுக்கப்பட்ட கோடுகள் சுவற்றின் மீது முல்லைக் கொடியை படற விட்டது போல இருந்தது.ஆங்காங்கே குடம் சுமக்கும் மாந்தர்களும்,பிள்ளையை கொஞ்சும் அன்னைகளும் ஓவியங்களாய் மாட்டப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தது வாசற்கதவருகே.கதவின் கணம் ஒரு யானை அளவுக்கு இருக்கும் போல அனைவரும் சேர்ந்து இழுத்தும்,தள்ளியும்,முட்டியும் பார்த்து தூசி கூட அசைந்து கொடுக்கவில்லை.அறையின் இருமூலைகளும் படிக்கட்டுகள் தொடங்கி மேல்தளத்திற்கு சென்றது.ஒவ்வொரு படிக்கட்டிலும் சேர்ந்தார் போல 10 பேர் ஒன்றாக ஏறலாம்.முழுக்க முழுக்க மரவேலைப்பாடால் ஆனவை.கைபிடி சாரத்தை வடிவமைக்கவே எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை அவ்வளவு நேர்த்தியான வளைவுகள் சீராக இருந்தன.படிக்கட்டுகளுக்கு நடுவே கீழ்தளத்தில் ஓர் அறை தென்பட்டது அவ்வறை கணமான பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.பத்தடிக்கு ஒரு சித்திரமும்,கூரையில் கூட வேலைப்பாடுகள் நிரம்பியிருந்ததும் எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது.வெளியே செல்ல வழி தேடி மாளிகையை சுற்றியவர்கள் பிரமித்துப் போனார்கள்.ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் நின்று மாளிகையை இரசித்துக் கொண்டிருந்தனர்.மாளிகை அவர்களை ஈர்த்துக் கொண்டது என சொல்வது தான் பொருத்தம்.

ஐசுவர்யா மட்டும் மாளிகையை ஆராயவில்லை.சிவாவின் பின்னே அவன் கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள்.
“சிவா”
“ம்...” சுவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தவன் ஐசுவர்யாவின் பக்கம் திரும்பினான்.
“என்னை மன்னிச்சிரு சிவா” தலையை கவிழ்ந்தபடி கூறினாள்.
“எதுக்குடா செல்லம்?” அவள் கண்ணத்தை உள்ளங்கையில் தாங்கியபடி முகத்தை நிமிர்த்தினான்.
"என்னாலதான் இதெல்லாம்" அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
"ஹே என்ன உளர்ற”
“நான் தான ஏற்காடு போலாம்னு ஆரம்பிச்சேன் அதான் இப்ப இப்படியெல்லாம் நடக்குது” விசும்பத் தொடங்கினாள்.
“ப்ச்... அப்படி எல்லாம் இல்லமா.உண்மைய சொல்லணும்னா நாங்க தான் தப்பு பண்ணிட்டொம்.உங்க கிட்ட முன்னாடியே எச்சரிச்சிருக்கனும்.அந்த கிறிஸ்டியும்,கூட இருந்தவனும் தான் பஷிர கடத்திருக்கானுங்க.அத உங்க கிட்ட முன்னாடியே சொல்லிருந்தா நீங்களும் ஜாக்கிரதையா இருந்திருப்பீங்க” சிவா நெற்றியில் கை வைத்து சுவரில் சாய்ந்தான்.
சுவரில் சாய்ந்தவன் மாரில் ஐசுவர்யா சரிந்தாள் “சிவா ஐ லவ் யூ” என்றாள்.
“ஐ டூ லவ் யூ” என சிவாவும் அவளை அணைத்தான்.
“எப்பவுமேவா?”
“சாகற வரைக்கும்டி”.
 ஐசுவர்யாவின் முகம் கறுத்தது.சட்டென நினைவு வந்தவனாய் “ஐசு, பாப்பாக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லயே”
“உன் கொழந்த பத்திரமாத்தான் இருக்குடா” நாணத்துடன் புன்னகைத்தாள்.
”சரி வா வெளிய போற வழிய தேடுவோம்” அவளை அழைத்துக் கொண்டு சிவா வழி தேடத் தொடங்கினான்.

வீட்டினுள் ஒரு ஈ,எறும்பு கூட இல்லை,நிஜமாகத்தான்.ஒரு தூசி கூட இல்லை  மூலை,முடுக்கு உட்பட அனைத்தும் துடைத்து சுத்தமாய் பளிச்சிட்டது.படுக்கைகளும்,சாமான்களும் சீராக வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால் யாரேனும் வீட்டினுள் இருக்க வேண்டுமெனத் தோன்றியது.முதல் தளத்திலும்,இரண்டாவது தளத்திலும் வழி தேடித் தேடி கால்  வலித்தது தான் மிச்சம்.இவ்வளவு பெரிய வீட்டில் ஒரு கதவு,ஜன்னல் கூட திறந்திருக்கவில்லை.திறக்க முயற்சித்து கை காலெல்லாம் சோர்ந்து விட்டது.

சிவா சட்டென ஏதோ நினைத்தவனாய் கால் சட்டைப் பையிலிருந்து அலைபேசியை எடுத்தான்.சிக்னல் சுத்தமாக இல்லாததால் வேலை செய்யவில்லை,”விக்கி உன்னொட மொபைல் எடேன்”
வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாகக் கூட இவ்வளவு தூரம் நடந்திராத விக்கி எரிச்சலடைந்தான்.

“ஹீரோ சார்,எல்லாம் நீங்க மல்லாக்க படுத்து தூங்கிட்டிருந்தப்பவே ட்ரை பன்ணியாச்சு,ஒண்ணும் வேலைக்காகல”
சிவா அசிங்கப்பட்டுவிட்டோமே என தலை குனிய அனைவரும் சிரித்துவிட்டனர்.

திடீரென்று “ஆஆஆஆ.........” வென மாளிகையே அதிர்வது போல அடித்தொண்டையிலிருந்து ஓலமிடும் ஓசை கேட்டது.ஒரு இள வயது பெண்ணின் குரலாய் இருந்தது அது.ஐவருக்குள்ளும்.ஊடுருவிச் சென்று திடுக்கிட செய்த அந்த ஓலம் மீண்டும் ஒருமுறை கேட்டது.அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினர்.இரண்டாவது தளம் நோக்கிச் செல்லச் செல்ல ஓலம் கூடிக்கொண்டே இருந்தது.கதவில்லாத ஒரு அறையில் இருந்து சத்தம் வருவதை அறிந்து அதனுள் சென்றனர்.ஓர் அழகிய இளம்பெண் அலறிக் கொண்டே ஓடியதைக் கண்டனர்.15 அல்லது 16 வயது இருக்கும்.ஓடிக் கொண்டே இருந்தவள் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.புலியிடமிருந்து தப்பிக்க வழியில்லாத மானின் விழிகளைப் போல அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது.தங்களைத்தான் பார்த்தாளா ? எதற்காக ஓடுகிராள்? என சுற்றும் முற்றும் பார்த்தனர்.அறையின் முனையில் இருந்த உப்பரிகையில் நின்றாள்.ஏதேனும் விபரீதம் செய்துவிடப் போகிறாளோ என தடுக்க முயற்சிக்கும் முன்னரே உப்பரிகையில் இருந்து வெளியே குதித்து பள்ளத்தாக்கில் விழுந்து சிதறினாள்.அடுத்த கணமே மூவரின் பின்னிருந்து வந்த ஒரு கரிய உருவம் ஒன்று அவர்களை கடந்து சென்று உப்பரிகையில் இருந்து கீழே குதித்தது.என்ன நடக்கிறது என உணரும் முன்னரே நடந்துவிட்ட இரு தற்கொலைகளும் ஐவரையும் திடுக்கிடச் செய்தது.இதற்கு முன் மாளிகை முழுவதும் தேடிய பொழுது யாரும் இல்லையே? எப்படி வந்தார்கள்? ஏன் குதித்தார்கள்?  குழம்பிப் போன அனைவரும் மாடிப்படிகளில் சென்று அமர்ந்தனர்.

அந்த உப்பரிகை? அதன் வழியாக வெளியே செல்ல முடியுமா எனப் பார்க்க சிவா ஓடிச்சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தான்.சற்று உப்பரிகையுடன் இருந்த அறை நாலாபக்கமும் சுவர்களால் மூடப்பட்டிருந்தது.

                                                                                                    -காத்திருங்கள்.

இதுவரை நடந்தவற்றை தெரிந்துகொள்ள கீழே சொடுக்கவும்.

வஞ்சம்


Saturday, 31 December 2011

காதலும் கடவுள் போல

தன்னால் புரிந்து கொள்ள முடியாத
அறிதலுக்கு அப்பாற்பட்ட
புலப்படாத விடயங்களை
தனக்கு மீறிய சக்தியாய் எண்ணி
ஆராதிப்பது மானிட சுபாவம்...



நானும் அப்படித்தான்
உன்னை
தூரத்தில் மட்டுமே தரிசித்து
புரிந்து கொள்ள விழையாது ரசித்து
காதலால் ஆராதித்தேன்...
தற்பொழுது நாத்திகனானேன்...





Wednesday, 28 December 2011

2011 ஆம் ஆண்டு அரசியல் விருதுகள்

2011 ஆம் ஆண்டு காலண்டர தூக்கி போட்டுட்டு 2012 காலண்டர மாட்ட போற உன்னதமான செயலுக்கு வழி வகுக்கும் புத்தாண்டு வேளையிலே இந்த ஆண்டுக்கான அரசியல் விருதுகள் வழங்கும் விழாவுக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

”வந்தாச்சு வந்தாச்சு விருது” 


கடல்லயே கிடைக்காத ஜாமீனை கோர்ட்டில் வாங்கி திராவிட இனத்தின் போர்வாளாக எண்ணிய கம்பிகளை எட்டி உதைத்துவிட்டு வெளியே வந்து ஐ.சி.யூ வில் இருந்த தி.மு.க விற்கு புது இரத்தம் பாய்ச்சிய கனி அக்காவுக்கு “வந்தாச்சு வந்தாச்சு விருது”.



கனி: ”ஜாமீனில் வெளில வந்ததுக்காகவே ஊரெல்லாம் ஃபிளக்ஸ் கட்டி,மோளம் அடிச்சு,கூட்டத்த கூட்டி அகில இந்திய அளவில் அசிங்கப்பட்ட தி.மு.க வினருக்கு இந்த விருது சமர்ப்பனம் செய்கிறேன்”

”சிறந்த ’அப்பா’டக்கர் விருது” 


கூடங்குளத்துல குண்டு வெடிச்சாலும்,முல்லைப் பெரியாறு நாசமா போனாலும்,கட்சிக்காரன் எத்தன பேர் ஜெயிலுக்கு போனாலும் கண்டுக்காம கனிக்கு ஜாமீன் கிடைக்கறது தான் முக்கியம்னு தினமும் டி.வி ஃபிளாஷ் நியூஸ் பார்த்துக் கொண்டே காலத்தை கழித்த தமிழினத் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு ”சிறந்த ’அப்பா’டக்கர் விருது”


கரு: “இந்த விருது பெற்றமைக்காக ’அப்பாடக்கரான அன்புத் தலைவன்’ என ஒரு பாராட்டு விழா தம்பி ரஜினி,கமல் தலைமையில் ஜெகத்ரட்சகன் நடத்த இருப்பது கேட்டு பேருவகை கொள்கிறேன்”

ஜெகத்: ”தலைவா ஆட்சி போயி ஆறு மாசம் ஆச்சு.”




”தாத்தா பிஸ்கோத்து விருது”


முதல் இன்னிங்சுல வெறித்தனமா ஆடிட்டு இரண்டாவது இன்னிங்சுல மொக்கை அடி வாங்குற இந்திய கிரிக்கெட் அணி மாதிரி.ஊர் முழுக்க கூடி உண்ணாவிரதம் இருந்து அடுத்த காந்தினு பேர் வாங்கி “சரத்பவாருக்கு ஒரு அடிதான் விழுந்துச்சா?”னு கேட்டு தான் டெரர் காந்தினு நிரூபிச்சு இப்ப உண்ணாவிரதம் இருந்து உடனே வாபஸ் வாங்கி. இப்படி பல ட்விஸ்டுகள குடுத்து பிஸ்கோத்தாகிப் போனா ஹசாரே தாத்தாவுக்கு “தாத்தா பிஸ்கோத்து விருது”


ஹசாரே: ”ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா”

”இது வாயா? கால்வாயா? விருது”


’காங்கிரச எதுத்து யார் பேசினாலும் அவங்க நாசமா போயிடுவாங்க,புள்ள குட்டி எல்லாம் நாசமா போயிடும்,ரத்த வாந்தி எடுத்து சாவாங்க’ என ஒவ்வொரு பேட்டியிலும் காங்கிரசை எதிர்க்குறவங்கல சாமகோடங்கி ரேஞ்சுக்கு சாவடிக்கும் திக்விஜய் சிங்கிற்கு “இது வாயா? கால்வாயா? விருது”


திக்விஜய்: இந்த ப்ளாக் எழுதறவருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும் சம்பந்தம் இருக்கு. இவருக்கு நாட்டுபற்று இல்ல.

நான்: அததாண்டா நானும் சொல்றேன் எனக்கு நாட்டுப்பற்று இல்ல.

“பல்பு வாங்கலியோ பல்பு விருது”

எந்த ஸ்டேட்டுல எலக்‌ஷன் நடந்தாலும் உடனே போயி ஆஜராகி அங்க உள்ள ஏழை பாழைங்க வீட்டுல இருக்குற சோத்தையெல்லாம் புடுங்கி தின்னு,ஊர் கிணத்துல கலீஜ் பண்ணி,ஹெலிகாப்டர்ல போய் இறங்கி விவசாயம் பண்ணி எதிர்கட்சிக்காரங்கள நாராசமா திட்டிட்டு திரும்பி வரப்ப மறக்காம பல்பு வாங்கிட்டு வர்ற ராகுல் காந்திக்கு “பல்பு வாங்கலியோ பல்பு விருது” 


ராகுல்: “மாயாவதி எல்லா கசையும் பிக்பாக்கட் அடிச்சுட்டார் எங்க கைல ஆட்சிய குடுங்க உங்க பணத்தையெல்லாம் இத்தாலி பேங்குல பத்திரமா போட்டு வெக்கறோம்”

கபில் சிபல்: “ராகுலுக்கு பிரதமராகும் முழுதகுதி வந்திவிட்டது”
பிரணாப்: “வெளிநாட்டு வங்கிகளில் வட்டி அதிகம் என்பதால் ராகுலின் இந்த முடிவு பொருளாதார மறுமலர்ச்சியை உண்டு பண்ணும்”
நிருபர்: “யாருக்கு?”
பிரணாப்: “யாருக்கோ.....”

“வாயில புண்ணு விருது”

எத்தன வருசம் ஆனாலும் சரி பல்லு விளக்கறக்கும்,பக்கோடா திங்கறக்கும் மட்டுமே வாய திறக்கும் மன்மோகன் சிங்குக்கு ”வாயில புண்ணு விருது”


மன்மோகன்: “................................................................”

நிருபர்:”எதிர்பார்க்காதீங்க”

”ஆத்தா முறைச்சு பாத்தா விருது”


”ஜெயிப்பாங்கன்னு தெரியும் ஆனா இவ்ளோ பெரிசா ஜெயிப்பாங்கன்னு எதிர்பார்க்கலபா” என சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்கட்சிகளுக்கு ரிவிட் அடித்தவர் இவர். ஒரு கட்சிக்கு பக்கத்து மாநிலத்துல கிளை ஆரம்பிக்கலாம் தேசிய அளவுல கிளைகள் ஆரம்பிக்கலாம் ஏன் ஃபாரின் ல கூட ஆரம்பிக்கலாம் ஆனா வரலாற்றில் முதல் முறையா தி.மு.க வுக்கு ஜெயிலில் கிளை ஆரம்பிக்க வெச்சவர் இவர்.கட்சத்தீவு,ஈழம்,3 பேரின் தூக்கு தண்டனை என எல்லா விசயத்துலயும் மத்திய அரசை புரட்டி போட்டு கும்மியடித்தவர் இவர். ”விரோதிய கூட மன்னிச்சுடுவேன் ஆனா கூடவே இருந்து குழி பறிக்கறவன மன்னிக்கவே மாட்டேன்” என இத்தன நாளா ஒன்னுமன்னா ஆட்டய போட்ட தோழிய விரட்டி விட்ட நம் முதல்வர் அம்மா அவர்களுக்கு “ஆத்தா முறைச்சு பாத்தா விருது”



ஜெ:  “அண்ணா நாமம் வாழ்க,புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, மக்களுக்கு போட்ட நாமம் வாழ்க”


இவ்வளவு நேரம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.





Tuesday, 27 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 2

தமிழகத்தின் 2 பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்குமென பார்த்தோம்.இனி அடுத்த தலைமுறை அரசியலுக்காக முன்னணியில் இருக்கும் கட்சிகளைக் காண்போம்.

தே.மு.தி.க

வெள்ளித்திரையில் வாசிம் கான் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி பந்தாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கேப்டனின் கட்சி. இந்த கட்சியின் சுருக்கமான வரலாற்றைக் காண்போம்.தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளுமே மாறி மாறி தமிழ்நாட்டை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலம் அது.இருவரிடமும் எந்த வித்தியாசத்தையும் உணராத ஒரு பகுதி மக்கள் ஒரு மாற்று கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்த சமயம்.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என பொதுஅறிவுமிக்க பொதுஜனம் விரும்பிக் கொண்டிருந்த போது அவர் வானத்தை நோக்கி ஆள்காட்டி விரலை காட்டி விட்டு இமயமலைக்கு ஓடிக் கொண்டிருந்த நேரம்.ரசிகர் மன்றத்தில் பிரியாணி,தையல் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள் என சிறிய அளவில் அரசியல் செய்து கொண்டிருந்த விஜயகாந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களை உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்கினார்.ஓரளவு ஆதரவும் பெற்றார்.திடீரென செப்டம்பர் மாதம்,2005 ஆம் ஆண்டு மதுரையில் மாநாடு நடத்தி கட்சியை துவங்கினார்.தலைவர் கட்சியின் பெயரையே மாநாடு அன்று காலையில் தான் முடிவு செய்தார் என்பது கொசுறு.தேசியத்தையும்,திராவிடத்தையும் கட்சியின் பெயரில் ஒன்று சேர்த்தது மாபெரும் சாதனை (முடியலடா சாமி).தமிழகத்தில் புதிய கட்சி அதுவும் பிரபலமான நடிகர் என்பதால் மீடியாக்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டன.மக்களோடும்,தெய்வத்தோடும் தான் கூட்டணி என எம்.ஜி.ஆரின் வேனில் ஏறி தமிழகம் முழுக்க சுற்றிச் சுற்றி மாற்று தேடிக் கொண்டிருந்த மக்களிடம் ஒரு சிறிய அபிப்ராயத்தை உருவாக்கியதால் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டு சதவிகித அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார்.



தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை செய்யாத அரசியலை நான் செய்து காட்டுகிறேன் என சொன்னவர் அச்சு அசல் அவர்களைப் போலவே இவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் சட்டசபைக்கு செல்லவில்லை இன்று வரை.மேடைப் பேச்சில் திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களைப் போல பேசுவது இவருக்கு கூட்டம் கூட்டியது.ஆனால் மாற்றாக உருவாகியிருக்க வேண்டியவர் இன்று ஓட்டு சதவிகிதத்தை தக்க வைத்துக் கொள்ளவே அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்பது கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெட்ட வெளிச்சமானது.மக்களுக்கு நல்லது செய்வது தான் கொள்கை என கூறி வந்தாலும் தெளிவான கொள்கை இல்லாமல் பிற கட்சிகளை சாடுவதே தன் முழுநேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.




அவரின் மேடைப் பேச்சைக் கேட்டவர்கள் ஒரு வரியாவது புரிந்தது என்று சொன்னால் அது அவர்கள் செய்த பாக்கியம்.முழுக்க முழுக்க விஜயகாந்தின் பிரபலமும், சினிமா பாணி பேச்சும் தான் இக்கட்சியின் பலமாக உள்ளது.தொண்டர்கள் பெரும்பாலும் ரசிகர் மன்றத்தினர் தான்.ஆனால் தலைவர்களாக உள்ளவர்கள் யாரென பார்த்தால் விஜயகாந்தால் ஊழல் கட்சி என பட்டம் சூட்டப்பட்ட திராவிடக் கட்சிகளில் இருந்து ஒரம்கட்டப்பட்டவர்களும்,உள்ளுரில் இரு கட்சிகளிலும் சேர முடியாத ஆனால் அரசியல் பலம் பெற விரும்பியவர்களும் தான்.குடும்ப அரசியலை சாடும் இவர் கட்சியிலும் மனைவியும்,மச்சானும் தான் முக்கிய சக்திகளாக விளங்குகின்றனர்.பண்ருட்டி இராமச்சந்திரன் மட்டுமே இந்த கட்சியில் தமிழக அரசியலின் நீண்ட கால வரலாற்றை உள்வாங்கி அதன் பாரம்பரியத்தில் திளைத்தவர் அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் போனால் கட்சி கண்டபடி தள்ளாடுவது உறுதி.மற்ற அனைவருமே தமிழக அரசியலின் வரலாற்றில் ஆனா ஆவன்னா கூட அறியாதவர்கள் என்பதே உண்மை.அதற்கு ஒரு எடுத்துக்காட்டு கட்சிக் கூட்டம் ஒன்றில் பிரேமலதாவின் பேச்சு “தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்ததென்றால் அது பெரியாரின் ஆட்சி தான்”.



விஜயகாந்தின் அரசியல் முதிர்ச்சியின்மை சமீபத்தில் மதுரையில் நடந்த அவர் கட்சிக் கூட்டங்களில் வெளிப்பட்டது.மதுரை மக்களிடம் மிகச்சிறப்பான செயல்பாடுகளால் நற்பெயர் பெற்றிருக்கும் ஆட்சியர் சகாயம்,காவல்துறை ஆணையர் ஆஸ்ரா கார்க் ஆகிய இருவரையும் மேடையில் விளாசி எடுத்தார்.அதற்குக் காரணம் தன் கட்சிக் காரர்களை ஃபிளக்ஸ் பேனர் கட அனுமதிக்கவில்லை என்பதால்.குறைந்தபட்சம் இவர்களுக்கு தமிழர் நலன் சார்ந்த விடயங்களிலாவது கொள்கை இருக்குமா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.2009 ஆம் ஆண்டு தமிழகமே ஈழப் பிரச்சனைக்காக கொந்தளித்துக் கொண்டிருந்த போது தலைவர் ‘விருத்தகிரி’ திரைப்பட படப்பிடிப்பில் தான் முழு கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயம் ஒரே ஒரு கூட்டம் மட்டும் போட்டு ஒபாமாவிற்கு தந்தி அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அதை அவர்கள் கட்சிக்காரர்கள் கூட செய்யவில்லை.தி.மு.க விற்கு எதிரான அலையில் எதிர்க்கட்சி அந்தஸ்து தற்சமயம் கிடைத்தாலும் தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்ச இடங்களைக் கூட பிடிக்கவில்லை என்பது இவருடைய கட்சி பலத்திற்கு எடுத்துக்காட்டு.கட்சி தொடங்கிய 6 வருடங்களில் இப்பொழுது தான் முதன்முறையாக போராட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.அதுவும் பிரதமருக்கு எங்கோ கறுப்புக் கொடி காட்டியதற்காக.விஜயகாந்தின் வளர்ச்சிக்குக் காரணம் சரியான நேரத்தில் அவர் கட்சியை தொடங்கியது மட்டும் தான் என கூறப்படுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

எதிர்காலம்

#ஆளுங்கட்சி அசுர வலிமையுடன் இருந்த போதே கோவையில் கூட்டிய ஒரு கூட்டத்தில் அரசியலில் மாபெரும் திருப்புமுனையை உருவாக்கியது அ.தி.மு.க. இப்பொழுது ஆளுங்கட்சி அத்தகைய வலிமையுடன் திகழுமானால் அதற்கு எதிராக நின்று நிலைக்க தேவையான வலு இந்த கட்சிக்கு இல்லை.
#இன்று வரை மக்களின் ஏகபோக நம்பிக்கையை வெல்ல முடியாததால் இனி வரும் காலங்களில் அதன் செயல்பாடுகளைப் பொறுத்தே அரசியலில் நிலைக்க முடியும்.
#ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும் பதவியை மட்டுமே இலக்காக கொண்ட இரண்டாம் கட்டத் தலைவர்களால் ஒரு வலுவான அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ முடியாது.மேலும் தோல்விகள் தொடருமாயின் அவர்களும் கட்சியை விட்டுச் செல்ல வாய்ப்புகள் அதிகமாகும்.
#திராவிட கட்சிகளுக்கு தான் மாற்று என சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த காரியத்தையும் விஜயகாந்த் செய்யவில்லை.அதே திராவிட கட்சிகளை பிரதி எடுத்தது போல் தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரை பற்றி பேசவே நிறைய எழுத வேண்டியதாகி விட்டது.அடுத்த பாகத்தில் முடித்துக் கொள்ளலாம்.
                                                                                                 -தொடரும்.

Sunday, 25 December 2011

தமிழக அரசியல்:திசை மாறும் பயணங்கள்-பாகம் 1

உத்திரபிரதேசம்,தமிழகம் இந்த இரு மாநிலங்களில் நடக்கும் மாற்றங்கள் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்றால் அதுதான் உண்மை,வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் அரசியல் இந்தியாவின் முக்கியமாக பார்க்கப்படும் அரசியல் தளங்களில் ஒன்று.பலமுறை இந்திய அரசியலை ஆட்டிப்படைத்திருக்கின்றது தமிழக அரசியல் என்று சொன்னால் அது கொசுறுதான்.அந்த அரசியலின் நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு அசுர பலம் கொண்ட கட்சிகளை மையப்படுத்தித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இன்று தமிழகத்தின் அரசியல் போக்கின் எதிர்காலம் வேகமாக பல மாற்றங்களை நோக்கி செல்கிறது.அதற்கு முக்கியமான கட்சிகளின் எதிர்காலம் என்னவென பார்த்தல் அவசியம்.

தி.மு.க





1949 ஆம் ஆண்டு தி.மு.க அறிஞர் அண்ணாதுரையால் கொட்டும் மழையில் துவக்கப்பட்ட பொழுது அளப்பரிய தொண்டர்கள் உணர்ச்சிவயப்பட்டு கூடியிருந்தனர்.அன்று கூடிய தொண்டர் பெருமக்கள் தான் இன்று வரை தி.மு.க வின் அடித்தளம்.அண்ணாவின் ஆணை ஏற்று ஆளும்வர்க்கத்தை அடித்து துவம்சம் செய்ய திசை தோறும் தளபதிகள் இருந்தனர்.நெடுஞ்செழியன்,கருணாநிதி,எம்.ஜி.ஆர்,ஈ.வி.கே.சம்பத்,கண்ணதாசன்,அன்பழகன் என அந்த பட்டியல் வெகு நீளம்.அண்ணாவின் கட்டளையை சிரமேற்கொண்டு இவர்கள் முன் செல்ல இவர்கள் பின்னால் தன்னலம் மறந்து, தான் வாழும் தமிழ்குடி மேன்மையடைய வேண்டும்,ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்னும் வெறி கொண்ட தொண்டர்படை செல்லும்.தி.மு.க வின் போராட்டம் நடக்கின்றது என்றால் அது ஆளும் காங்கிரசு கட்சிக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.தி.மு.க வை அடக்குவதாகத் தெரிந்தால் மாணவர்கள்,கலைஞர்கள்,பொதுமக்கள், பத்திரிக்கைகள் என பல முனையிலிருந்து கண்டன அம்புகள் பாயும்.


அத்தகையதோர் மாற்று சக்தியாக தி.மு.க சீறிப்பாய்ந்து 1967 ல் ஆட்சியைப் பிடித்தது தமிழை உயிரென சுவாசித்து இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் தமிழுக்காக உயிர் நீத்த மாணவர்களால்.தி.மு.க வின் தொடக்க காலத்தில் அதன் சமூக நீதிப் பயணங்கள் ஒடுக்கப்படோரை தலைநிமிர வைத்தது.மத்திய அரசு இடஒதுக்கீடு 50% க்கும் மேல் செல்லக் கூடாது என சொன்ன போது 69% குடுத்தே தீருவோம் என உறுதியாய் நின்று வென்று காட்டிய கட்சி தி.மு.க.அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நின்று தொண்டாற்றிய இயக்கம் அது.தன் பிள்ளைகளுக்கு உதயசூரியன்,கருணாநிதி,அண்ணாதுரை,செழியன் என பெயர் வைப்பது மிக சாதாரணமாக நடந்தது. எது வரை? கருணாநிதி என்னும் மனிதர் அதன் தலைவராகும் வரை.


 பதவி சுகமும்,அதிகார வாய்ப்பும் கிடைத்ததும் அதை விடாமல் ருசிக்கத் துடித்தவர் அதற்குத் தேவையான காரியங்களை இயற்றி தன்னையே நிரந்தர தலைவராக நிலை நிறுத்தியிருக்கிறார்.அவருடைய இந்த கபட நாடகம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுதலாக அமைந்தது.பணம் சேர்க்க தலைவர் பல வழிகளில் பூந்து விளையாடிய பொழுது அதில் சில வழிகளை தொண்டர்களும் பின்பற்றினர்.சந்தர்ப்பம் கிடைத்த இடத்தில் எல்லாம் திருடுவதில் தொடங்கி அதிகாரத்தை பயன்படுத்தி திருடுவதற்கான வழிகளை தாங்களே உருவாக்கத் தொடங்கினர்.எம்.ஜி.ஆரால் 14 ஆண்டு காலம் வனவாசம் கண்ட பின்பு மீண்டும் அத்தகைய நிலை தனக்கு வந்துவிடக்கூடாதென தமிழகம் முழுக்க தன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தன் பிள்ளைகளையே தனக்கு தளபதியாக்கினார்.வை.கோ என்னும் மாபெரும் சக்தி இதனால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட போது தி.மு.க வே கிடுகிடுத்தது. வடக்குக்கு ஒருவர் தெற்குக்கு ஒருவர் என பிரித்து வைத்துத் தொடங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக மருமகன்,மகள்,மனைவிகள் என விடாமல் அனைவரையும் கட்சிக்குள் திணித்தார்.அதிகார மையங்கள் பல இடங்களில் உருவானது. தலைவரின் இதே பாணியை மாவட்ட அளவில் அனைவரும் பின்பற்றினர்.தமிழினம் மீட்கப்படும் என நம்பி கட்சிக் கொடியை தூக்கிப் பிடித்த தொண்டர்கள் எல்லாம் மனமொடிந்து ஒதுங்கினர்.





தொடக்கத்தில் தமிழர் வாழ்வே தன் இலட்சியம் என ஆணைகள் பிறப்பித்த அரசு கருணாநிதியின் காலத்தில் தன் மீது எழும் விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுகளையும் திசைதிருப்பும் ஓர் கேடயமாக தமிழர் நலனுக்கான அறிவிக்கப்புகளை பயன்படுத்திக் கொண்டது.கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உழைப்பால் வளர்ந்த கட்சியாகையால் அத்தொண்டர்களும் கருணாநிதியின் சந்தர்ப்பவாத தமிழர் பாசத்தால் மதிமயங்கி அவரை தமிழினத் தலைவராக கொண்டாடி மகிழ்ந்தனர்.கருணாநிதியின் தமிழாலும்,அவரின் புனை பேச்சுக்களிலும் மயங்கிய தமிழறிஞர்களும் அவ்வாறே அவரை ஏற்றுக் கொண்டனர். தி.மு.க வின் ஆட்சியில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்னும் தோற்றப்பாடு வந்து விட்ட பின் பண வெறி கொண்ட ரவுடிகள்,முதலாளிகள்,முறைகேடுகளில் ஈடுபடுவோர் அனைவரும் முடி முதல் அடி வரை உள்ள அனைத்து அதிகார மையங்களில் இணைந்து தங்களை கட்சி விசுவாசி போல காட்டி பணத்தை கொள்ளை கொள்ளையாக சுருட்டினர்.அதிகார மையங்களும் பணமே குறிக்கோள் என இருந்ததால் அத்தகையோரின் இருப்பை விரும்பினர்.கொள்கைக்காக பதவியை துச்சமென உதறிய தி.மு.க, கருணாநிதி காலத்தில் எப்பாடு பட்டாவது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்தது.ஈழ விவகாரத்தில் தி.மு.க வின் செயல்பாடு இதற்கு உதாரணம். கொள்கைக்கு வாக்கப்பட்ட தொண்டர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட படியால் அதிகார மையங்களில் ஒட்டிக் கொண்ட தொண்டர்கள் தான் இப்பொழுது தி.மு.க வில் பல்கி பெருகியிருக்கின்றனர்.பெயிலில் வந்த கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பு ஒரு உதாரணம்.மெதுவாக விழித்துக் கொண்ட தமிழுணர்வாளர்கள் கருணாநிதியின் துரோகத்தை தோலுரித்துக் காட்டிக் கொண்டிருப்பது கண்கூடு.உண்மையான தொண்டர்களை இழந்ததால் இக்கட்சி எப்படிப்பட்ட நிலையை அடைந்திருக்கிறது என பார்த்தோமானால் தொடக்க காலத்தில் தி.மு.க ஆளுங்கட்சியையோ,மத்திய அரசையோ எதிர்க்க வேண்டுமானால் எதிர்ப்போடு நிறுத்த மாட்டார்கள் அரசாங்கத்தையே அதிர வைக்கும்படி போராட்டங்களை நடத்துவார்கள்.ஆனால் தமிழரின் உயிராதார பிரச்சனையான முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அரை நாள் உண்ணாவிரதம்,மனித சங்கிலியோடு முடித்துக் கொண்டிருக்கின்றது.கட்சியின் தலைமைக்கு தொண்டர்கள் மேல் நம்பிக்கை இல்லை.காசுக்கும்,பதவிக்கும் கட்சியில் சேர்ந்தவர்கள் போராட்டம் எல்லாம் செய்யமாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.மாவட்ட தலைமைகளும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை பாயுமோ என்ற பயத்தில் பதுங்கிக் கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

எதிர்காலம்:
#தி.மு.க வின் அடிநாதமான விசுவாசமான தொண்டர்கள் இப்பொழுது இல்லை.
#குறைந்தபட்சம் 10 அதிகார மையங்கள் இருப்பதால் கருணாநிதிக்குப் பிறகு அந்த கட்சி ஒற்றுமையாய் இருப்பது போல தோற்றத்தை உருவாக்க முயன்று  தோற்கும்.கட்சி உடையாமல் ஒற்றுமையாய் இருந்தாலும் அது இன்னுமொரு தமிழக காங்கிரசு கட்சி போல கோஷ்டி அரசியலில் சீரழியும்.தலைமையிடத்துக்கு போட்டி தொடங்கி பின் அது மாவட்ட செயலாளர் நியமனம்,வேட்பாளர் தேர்வு,போராட்டம் நடத்துதல் என பல்வேறு நிலைகளில் வெளிப்படையான மோதல் நடக்கும்.
#இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயநல தமிழுணர்வாளர்களின் ஆதரவும் கருணாநிதிக்குப் பின் இருக்காது.
#தேசிய அரசியலில் 15 வருடங்களாக தி.மு.க செலுத்தி வரும் ஆதிக்கம் கருணாநிதிக்குப் பின் நடக்காது.
#கருணாநிதி மேல் குறைந்த பட்ச பாசத்தோடு இருக்கும் பெரியவர்களும்,முதலாளிகளும் அவருக்குப் பின் கழன்று கொள்வர்.
#கருணாநிதிக்குப் பின் ஒரு தலைமையில் தொண்டர்கள் ஒருங்கினைவது எக்காலத்திலும் நடக்காது.தான் சார்ந்த ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு எந்த மிருகமும் அவ்வளவு எளிதில் தாவாது அப்படியே தாவினாலும் மரியாதை இருக்காது என்பது அதற்குத் தெரியும்.ஆகையால் தன்னுடைய மரத்தை கொம்பு சீவி விட்டு தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்ளவே எல்லா மிருகங்களும் முனையும்.அதற்குப் பெயர் தான் SURVIVAL OF THE FITTEST.

அ.தி.மு.க

நிகழ்காலம்-ஜெயலலிதா
எதிர்காலம்-ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பின்?

பார்ப்பன கும்பல் தலைமையில் ஆரிய சமாஜமாக மாறலாம் அல்லது தேவரின மக்களின் ஜாதி சங்கமாக சுருங்கலாம். ஆனால் ஒரு கட்சியாக வெகுஜன ஆதரவோடு இயங்க வைப்பது நிச்சயம் வாய்ப்பில்லை.ஏனெனில் எம்.ஜி.ஆருக்குப் பின் ஜானகியா? ஜெயலலிதாவா? என்னும் கேள்வி எழுந்தது ஆனால் ஜெயலலிதா உள்ள வரை வாரிசு என யாரும் உருவாகப் போவதில்லை.அவருக்குப் பின் யார் என கேள்வியில் பொருத்திப் பார்க்கக் கூட மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் அங்கே இல்லை இனியும் வரப்போவதில்லை.

அப்படியானால் இவர்கள் இருவருக்கு பின்னால் என்ன நடக்கும்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
                                                                                                                       -தொடரும்

சுனாமியின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்