Thursday, 22 December 2011

வாழ்த்துக்கள்!!!

நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த புத்தகம் இப்பொழுது தலைப்புச் செய்திகளில்... சாகித்ய அகாதமி விருது பெற்ற வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...


Wednesday, 21 December 2011

ஈழத்தமிழருக்கு இந்தியாவின் மற்றுமொரு துரோகம்


சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம் !
21 December, 2011 by admin
இந்திய அரசின் மற்றுமொரு போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. ஈழத்தில் தமிழர்கள் அழியக் காரணமான சோனியாவின் அரசாங்கம் இன்றுவரை ஈழத் தமிழர்களை விட்டுவைத்தபாடாக இல்லை. தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்வதோடு சீனா இலங்கைக்கு உதவுவதுபோல இந்தியா தானும் தமிழர்களைப் பலிகடாவாக்கி உதவிவருகின்றது. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்றும் தற்போது நடந்துள்ளது. புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் இவர்கள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கமரா மற்றும் பதிவுசெய்யும் கருவிகளோடு சென்ற இவர்களை நம்பி பல இலங்கைத் தமிழர்கள் தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இவர்களைப் பரிபூரணமாக நம்பியும் உள்ளனர்.

இதனால் தமக்கு முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்கள் பற்றி பல பொதுமக்களும் அதிகாரிகளும் இவர்களுக்கு கூறியுள்ளனர். இதற்கு ஒரு படி மேலே போய் சில போராளிகளும் விடுதலைப் புலிகளின் முது நிலைத் தளபதிகள் சிலரும் தமது மறைவிடங்களில் இருந்து வெளியே வந்து இவர்களுக்கு தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் மறுகணமே அவர்களைப் பின் தொடர்ந்த ரோ அதிகாரிகள் அவர்களில் பலரை இரகசியமாகக் கைதுசெய்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் நடந்தவேளை மனித நேய அமைப்புகளில் வேலைசெய்தோர் ரெட் கிராஸ் அமைப்பில் வேலைசெய்தோர் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனப் பலர் தற்போது இந்திய உளவுப் பிரிவான ரோவால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்த உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் இரகசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசானது இலங்கையைக் காப்பாற்ற முனைவதும் மற்றும் போர்குற்ற சாட்சிகளைப் பிடித்து மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக எவ்வளவு இழிவான செயலை இந்திய மத்திய அரசு செய்யமுடியுமோ அவ்வளவு இழிவான செயல்களை அது செய்துவருகிறது. இதற்கு புலம்பெயர் தமிழர்கள் சிலரும் உதவுகிறார்கள் என்பதே பெரும் வெட்க்கக்கேடான விடையமாக உள்ளது. இவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து இத் திட்டத்திற்காக இந்தியா சென்ற நபர்களது புகைப்படங்களை பெறும் முயற்ச்சியில் அதிர்வு இணையம் ஈடுபட்டுள்ளது. புகைப்படங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை ஆதாரத்தோடு வெளியிடப்படும்.

                                                                                 நன்றி-அதிர்வு.காம்

இச்செய்தியை அதிர்வு இனையதளத்தில் காண கீழே சொடுக்கவும்...

வஞ்சம்-பகுதி 5


               பகுதி 5-வலையில் விழும் நேரம்

“ஒரு நிமிசம்”
கதவு திறக்கப்பட்டது.
கிறிஸ்டியுடன் ஆறரை அடி உயரத்தில் சிவப்பாக தடிமனாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.யார் இந்த புது மனிதர் என ஐசுவர்யா நோக்க அவரே முந்திக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் “என் பெயர் அப்துல் நாசர். போலீஸ் இன்ஸ்பெக்டர்”
“வாங்க சார், உள்ள வாங்க” இருவரையும் ஐசுவர்யா வரவேற்றாள்”
“மிசஸ் ஹரிணி உங்க வீட்டுக்காரர கண்டுபிடிச்சாச்சு.இங்கதான் கவர்மெண்ட் ஆசுபத்திரில இருக்காரு.இரண்டு நாள் முன்னாடி ரோட்ல விபத்துல அடிபட்டு இருந்திருக்காரு.சார் தான் கூட்டிட்டு போய் ஆசுபத்திரில சேர்த்திருக்காரு.இப்ப அவரு ஐ.சி.யூ ல இருக்காராம்.” கிறிஸ்டி
“ஐ.சி.யூ வா? சார் உடனே என்ன அங்க கூட்டிட்டு போங்க சார் ப்ளீஸ்” கணவன் கிடைத்ததற்கு மகிழ்வதை விட அவனுக்கு நேர்ந்த விபத்து ஹரிணியை புரட்டிப் போட்டது.
“சரிங்கம்மா… ஆனா உங்க நண்பர்கள் ரூம்ல இல்ல எங்கயோ வெளில போயிருக்காங்கனு நினைக்கறேன்.அவங்க வந்ததும் போகலாமே” தன் திட்டம் சரியான திசையில் பயணிப்பதை கிறிஸ்டி உறுதி செய்து கொண்டான்.
“நான் அவங்களுக்கு ஃபோன் பண்றேன்” ஐசுவர்யா தன் கைபேசியை எடுத்து சிவாவிற்கு அழைத்தாள்.
மறுமுனையில் கணிணி குரல் கைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக அறிவித்தது.சுதாகர், விக்கி இருவருக்கும் அவ்வாறே பதில் வந்தது.
“நாட் ரீச்சபிள்னு வருது.3 பேருக்கும் லைன் போகல” ஐசுவர்யா குழம்பினாள்.முன்பின் தெரியாதவர்களுடன் தனியாக செல்வது அவளுக்கு சரியாகப்படவில்லை.உள்ளுக்குள் பயம் எட்டிப் பார்த்தது. ஹரிணி கலவையான உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்ததால் ஒவ்வொரு நொடி தாமதமும் அவளை துன்புறுத்தியது.
“சார் எங்களை கூட்டிட்டு போங்க சார்.அவங்கள அப்புறமா ஃபோன் பண்ணி கூப்பிட்டுக்கலாம்.ப்ளீஸ் சார்” கைகூப்பி அழுதாள்.
“அவங்க வந்துடட்டும் ஹரிணி” ஐசுவர்யாவின் அறிவுரை எடுபடவில்லை.எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிறிஸ்டியுடன் வெளியேறினாள்.அவளைத் தனியாக விடமுடியாது என்பதால் அவளுடனே ஐசுவர்யாவும் சென்றாள்.இடையிடையே ஐசுவர்யா மூவருக்கும் மாற்றி மாற்றி கைபேசியில் முயற்சித்தாள்.ஏமாற்றமே மிஞ்சியது.

ஐசுவர்யாவும்,ஹரிணியும் கிறிஸ்டியுடன் மகிழ்வுந்தை நோக்கி செல்வதையும் கூடவே இன்னொருவன் செல்வதையும் மாடியிலிருந்து சுதாகர் கவனித்துவிட்டான்.இருவரையும் நிறுத்தி அவர்களோடு போக வேண்டாம் என எச்சரிக்க எவ்வளவோ முயன்றும் அடித்த காற்றில் அவர்கள் சத்தம் ஒன்றுமில்லாமல் போனது.விக்கி தன் கைபேசியை எடுத்து ஐசுவர்யாவிற்கு அழைத்தான்.ஐசுவர்யாவும் தற்சமயம் முயற்சி செய்து கொண்டிருந்ததால் பிஸியாகவே இருந்தது.ஹரிணியின் கைபேசிக்கு அழைத்த பொழுது மணி அடித்துக் கொண்டே இருந்த போதும் யாரும் எடுக்கவில்லை.
வெறுத்துப் போய் அவர்கள் கீழே வந்து பார்த்த போது மகிழ்வுந்து வாசலைத் தாண்டி வெகுநேரமாகியிருந்தது.
வாசலில் ஒரே ஒரு கால் டாக்ஸி மட்டும் வாசலில் நின்று கொண்டிருந்தது.சிவா வேகவேகமாக கால் டாக்ஸியை நோக்கி ஓடினான்.இருவரும் பின்தொடர்ந்தனர்.கால் டாக்ஸியில் ஏறும் முன் சிவா சுற்றும் முற்றும் அவர்கள் சென்ற மகிழ்வுந்தைத் தேடினான்.நேராய் சென்ற சாலையின் மலைமுகட்டோடு சேர்ந்து இடதுபுறம் வளைந்து சென்றதால் ஒரு மைல் தூரத்திற்கு சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாம் தெரிந்தது.நேற்று இரவு சிவாவும்,சுதாகரும் ஏறி வந்த மகிழ்வுந்து சற்று தொலைவில் சென்றது.ஓட்டுனரிடம் அந்த மகிழ்வுந்தை வேகமாக பின்தொடரச் சொல்லிவிட்டு மூவரும் கால் டாக்ஸியில் ஏறினர்.அவர்களின் பதட்டத்தைப் பார்த்து ஏதோ விபரீதம் என உணர்ந்த ஓட்டுனர் வெகு வேகமாக வாகனத்தை விரட்டினார்.100 அடி இடைவெளியளவில் இரு மகிழ்வுந்துகளும் சீறிச்சென்றன. சிவா ஆருயிர் காதலியை இப்படி ஓர் நிலைக்கு வந்தது தன்னால்தான் என நினைத்து கண்களும் உதடுகளும் துடித்தது.கண்ணீர்த் துளிகள் படபடத்துக் கொட்டிய வியர்வையில் கரைந்தது.விக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் பலனில்லை.இது வரை பிஸியாக இருந்த ஐசுவர்யாவின் கைபேசி இப்பொழுது முழுமையாக மணி அடித்து நின்றது.இருப்பினும் அவள் எடுத்துப் பேசவில்லை.முன்னே சென்ற கிறிஸ்டியின் மகிழ்வுந்து பாதைகள் மாறி மாறி வனங்கள் அடர்ந்த ஒற்றையடி பாதையில் சென்றது சிவா சென்ற மகிழ்வுந்தும் அவர்களை விடாமல் துரத்தியது.பாதையெங்கும் சருகுகள் மண்டியிருந்தது.சுற்றிலும் 3 பனைமர அளவு மரங்களும்,ஆளுயர புதர்களும் மண்டியிருந்தது.கிறிஸ்டியின் மகிழ்வுந்து சட்டென்று சக்கரம் வெடித்து நின்றது.என்ன ஆனது என பார்க்க கிறிஸ்டி கீழே இறங்கினான்.ஆணிப்பலகையில் குத்தி 2 சக்கரங்கள் வெடித்திருந்தது.மூவரும் கீழே இறங்கினர். பின்னே விரட்டி வந்த சிவாவின் மகிழ்வுந்தும் அவர்களை பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் நெருங்க அதன் சக்கரங்களும் வெடித்து முன்னிருந்த வண்டியின் மீது மோதி நின்றது.இந்த இரு வாகனங்களையும்,அதில் வந்தவர்களையும் தவிர வேறு ஆள் அரவமில்லாத இடம் அது.மகிழ்வுந்தை விட்டு இறங்கிய சிவா ஒரே பாய்ச்சலில் கிறிஸ்டியின் சட்டையைப் பிடித்து முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.சுதாகரும்,விக்கியும் நாசரை மடக்கி பிடித்தனர்.

“சிவா என்ன பண்ற?” ஐசுவர்யாவும் ஹரிணியும் பதறினர்.
கிறிஸ்டியை கீழே தள்ளி கையில் கிடைத்த ஒரு கட்டையை எடுத்து அவனை விளாச சிவா கையை ஓங்கினான்.எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் வந்த கல் ஒன்று சிவாவின் நெற்றியில் தாக்கியது.எதிர்பாராத தாக்குதலால் சிவா நிலைகுழைந்தான்.புதர்மறைவிலிருந்தும்,மரங்கள் மேலிருந்தும் குட்டையாய்,அழுக்கேறிய உடை அணிந்து வினோதமான மொழியில் கத்தியபடி ஐம்பதுக்க்கும் மேற்பட்ட காட்டுவாசிகள் வெளிப்பட்டனர்.ஈட்டி முனையில் அனைவரையும் சிறைபிடித்தனர்.கீழே விழப்போன சிவாவைத் தாங்கிப் பிடிக்க சென்ற சுதாகரையும்,விக்கியையும் தலையில் கட்டையைக் கொண்டு அடித்தனர்.
ஹரிணி,ஐசுவர்யாவின் அலறலுக்கு நடுவே மூவரும் மயக்கமடைந்தனர்.

சிறிது நேரம் கழித்து…
லேசாக மயக்கம் தெளிந்தது சிவாவிற்கு.மங்கலாக தெரிந்த பார்வையில் வானமும் கண்கூசிய சூரியனும் தெரிந்தது.உடல் குலுங்கியபடி சென்றதால் யாரோ தன்னை சுமந்து செல்வது தெரிந்தது.சட்டென ஐசுவர்யாவின் நினைப்பு வர எழ முயன்று நிமிண்டினான்.அவனை சுமந்து சென்ற காட்டுவாசிகளின் கூட வந்த ஒருவன் சிவாவின் முகத்தில் ஒரு துணியை வைத்து அழுத்தினான்.சிவா மீண்டும் மயக்கமடைந்தான்…
                                      -காத்திருங்கள்




இதுவரை நடந்தது என்னவென்று அறிய கீழே சொடுக்குங்கள்...


வஞ்சம்...

Tuesday, 20 December 2011

பிரிந்தோம்... சந்திப்போமா?

வாசம்...
உன் கழுத்தொடு வீசிய
உன் வாசம்...
பல இரவுகள்
சில பொழுதுகள்
என் ரோமங்களை குத்திடச் செய்த
உன் வாசம்...
மறக்கவில்லை...
இன்னும் நாசியில் அமர்ந்து
என் நினைவுகளை சீண்டுகிறது...



என்ன பெரிய நினைவுகள்?
பெரிதுதான்...
நான் பெரிதாய்
எண்ண மறந்த பெரிது...

மதுவும் மாதுவும்
கரைந்து நீந்திய
பல இரவுகளைத் தாண்டிய
பின்னிரவுகளில்
உனக்குத் தெரியாமல்
உன்னருகே வந்து படுத்தேன்
ஒவ்வொரு முறையும்
உடனே என்னை அணைத்து
நாய் குட்டிபோல
என் தோளில் குழைந்த
கலைந்த கேசமும்,குழைத்த கண்ணங்களும்
நினைவுகளில் பெரியவைதான்...

வரவேற்பறையில்...
காய்கறி நறுக்கியபடியே நீ அமர்ந்திருக்க
உன் மடியில் சாய்ந்து
வியர்வை வடிந்த உன் வயிற்றில்
என் கண்ணம் பதிய
முந்தானையில் முகம் மூடி
கனவில்லா உறக்கம் கொண்டது
கனவின் மடியில் உறங்கியதால்
அது நினைவுகளில் பெரியவைதான்...

காலையில்
உன் முகம் கண்டு சென்றேன்


மாலையில்
என் முகம் அடையாளம் காட்ட
சாலை விபத்தருகே
நீ வந்தாய்...
இந்த காதலைத் தாண்டியும்
போதை தேடிய மனதால்
நினைவுகளோடு மட்டும்
பிரிந்தது என் பிழை...

காதலை சாதலாக்கும்
போதை...

சாராயப் போக்கு
சவப்போக்கு...








Monday, 19 December 2011

வஞ்சம்-பகுதி 4


                                                              பகுதி 4- சதிவலை   





முட்டாள்த்தனமா எதுக்கு அவங்கள அங்க கூட்டிட்டு போன?” அப்துல் நாசர்.
நானா கூட்டிட்டு போகல.ஏதோ வேலை இருக்குன்னு அட்ரஸ டிரைவர்ட்ட குடுத்துட்டாங்க.அங்க போனதும் என்ன பண்றதுன்னு எனக்கே தெரிலகிறிஸ்டி.
“தெரிஞ்சிருக்குமா?” அப்துல் நாசர்
“இருக்கலாம்” கிறிஸ்டி
“எப்படி சொல்ற?”
“அந்த கடைக்காரன் என்ன பார்த்து அவங்ககிட்ட ஏதோ சொன்னான்.அவங்க அதிர்ச்சியா என்ன பாத்தாங்க.தெரிஞ்சிருக்கும்னு தான் நினைக்கறேன்”
“ப்ச்…” பெருமூச்சு விட்டு தலையில் கை வைத்தபடி வேகமாக குறுக்கும் நெடுக்கும் நடந்தார் கிறிஸ்டியின் நெருங்கிய நண்பரான அப்துல் நாசர் ”இப்ப அவங்க எங்க?”
“கீழ ரூம்ல தூங்க சொல்லிட்டு வந்துட்டேன்.ரூம் செர்வீஸ் ல காஃபி ஆர்டர் பண்ணிருந்தாங்க.நம்ம வேலு தான் எடுத்துட்டு போனான்.அதுல தூக்க மாத்திரை கலந்திட்டேன்.காலையில எந்திரிக்க நேரமாகும்.அதுக்குள்ள மத்தவங்களும் வந்திடுவாங்க.” கிறிஸ்டி
“சரி காலையில அவங்க முட்டாள்த்தனமா ஏதும் செய்யறக்கு முன்னாடி நாம முந்திக்கணும்” கிறிஸ்டியை அறைக்கு செல்லச் சொல்லிவிட்டு அப்துல் நாசர் தன் தொலைபேசியில் யாருக்கோ அழைத்து நாளை காட்டுப் பாதையில் அனைவரும் தயாராய் இருக்கும்படி அறிவுருத்தினார்.

இரவெல்லாம் கொட்டித் தீர்த்த அழுகை வறண்டு விட மனிதனின் ஒரே அழுக்காத  சுகமாய் உள்ள தூக்கத்தில் ஹரிணி ஆழ்ந்திருந்தாள்.அவளுக்கு ஆதரவாய் தோள் கொடுத்திருந்த ஐசுவர்யாவும் தூங்கியிருந்தாள்.விக்கி,ஹரிணி,ஐசுவர்யா மூவரும் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்காடு மலை சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

முற்பகல் வெய்யில் கூட மெல்லிய கீற்றாய் படர்ந்திருந்தது.சிவாவையும், சுதாகரையும் கைபேசியில் அழைக்க விக்கி முயற்சித்துக் கொண்டிருந்தான்.வெகுநேரம் அழைப்புமணி அடித்தும் இருவரும் எடுத்துப் பேசாதது அவனுள் கலக்கத்தை ஏற்படுத்தியது.இன்னும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் இல்லையேல் ஏதேனும் முக்கியமான வேலையாக இருப்பார்கள் என சமாதானப்படுத்திக் கொண்டாலும் மனம் அமைதியடையவில்லை.ஜன்னல் வழியாக மலைகளின் மேனியெங்கும் வேரூன்றிய பச்சை வெள்ளத்தை இரசிக்க முயன்றான்.
மலைமுகடுகளின் இடுப்பு வரை தேயிலைத் தோட்டங்கள் மாபெரும் புல்வெளியைப் போல இருந்தது.உச்சிப் பகுதியில் அடர்ந்து படர்ந்திருந்த மரங்கள் பார்வைக்கு குளிரூட்டியது.பனியோடு மிதமான குளிரும் சூழலின் ரம்மியமும் மனதை போதையேற்றியது.இயற்கையின் இந்த அழகிய பிரமாண்டத்திற்கு துருஷ்டி வைக்கப்பட்டது போல ஓரிடத்தில் மட்டும் மலை உச்சிக்கு சற்று கீழே பொட்டு வைத்தது போல ஒரு பெரிய வட்டம் நெருப்பும் புகையுமாய் எரிந்து கொண்டிருந்தது.

“அதென்ன காட்டுத் தீயா?” விக்கி ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்தான்.
“இந்த சீசன்ல எல்லாம் காட்டுத் தீ வராது தம்பி.இது பண்டிசால்காரனுங்க வேலையா இருக்கும்” ஓட்டுனர்.
“பண்டி…..?” புரியாமல் விழித்தான்.
“பண்டிசால்காரனுங்க தம்பி.பீகார்ல இருந்து வந்த நாடோடி கூட்டம்.30 வருசத்துக்கு முன்னாடி அவங்க ஊர்ல பஞ்சம்னு சொல்லிட்டு பொழப்புக்காக வந்தானுங்க.மலை மேலயே தங்கிட்டானுங்க.கொள்ளையடிக்கிறது,கொலை பண்றது இந்த மாதிரி வேலை தான் அவங்க குலத் தொழிலே.சிலசமயம் மரதையெல்லாம் விக்கறதுக்காக வெட்டிட்டு இந்த மாதிரிதான் தீ வெச்சுட்டு போயிடுவானுங்க.ஃபாரஸ்ட் ஆபீசர்கள எல்லாம் எக்கசக்கமா கவனிச்சுடுவானுக.இவனுகளுக்காக இந்த டிரான்ஸ்ஃபர் கேட்டு எத்தன பேர் முண்டியடிக்கறாங்க தெரியுமா? எல்லாம் நேரம் தம்பி”
‘’இவங்க ஆள்கடத்தல் எல்லாம் செய்வாங்களா?” விக்கி
“சிலசமயம் செய்வானுங்க” ஓட்டுனர்

பஷீரை இவர்கள் கூட கடத்தியிருக்கலாம் என்று மனக்கணக்கு போட்டாலும் எங்கோ பெங்களுரில் இருக்கும் முகம் தெரியாத பொறியாளரை இந்த ஆளுங்க வந்து எதுக்கு கடத்தப் போறாங்க? அப்படின்னா பஷீர் இங்கே வர என்ன காரணமாயிருக்கும் என சிந்தனை சிறகு விரிக்கும் முன்னரே கைபேசி அலறியது.சிவா அழைத்தான்.
“இவ்ளோ நேரம் என்னடா பண்ணிட்டிருந்தீங்க? மணி 11 ஆகுது.ஹரிணி தொல்லை பொருக்க முடியாம நாங்க காலைல நேரத்துல கிளம்பிட்டோம்” அவசரத்தில் பேசிவிட்டதால் பின்னே திரும்பி ஹரிணி இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என உறுதிப்படுத்திக் கொண்டு மேலும் தொடர்ந்தான்.
“இப்ப தான்டா எந்திரிச்சோம்.இப்ப எங்க இருக்கீங்க?” சிவா
“இன்னும் 15 நிமிஷத்துல அங்க இருப்போம்” விக்கி
“ப்ச்… சரி பரவால்ல.நான் சொல்றதுக்கு உம் னு மட்டும் சொல்லு.வேற ஏதும் பேசாத” சிவா
“உம்” விக்கி  
“குட், இங்க இருக்கற ஈவண்ட் மேனேஜர் கிறிஸ்டிக்கும் பஷீர் காணாம போனதுக்கும் தொடர்பு இருக்கு.எதுக்காக இப்படி பண்றான்னு தெரில.அவன்ட்ட ஜாக்கிரதையா இருக்கணும்.ஐசுவர்யா,ஹரிணிய உன் கூடவே வெச்சுக்க எங்கயும் தனியா விட்றாத.ராத்திரியே உங்களுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்லலாம்னு நினைச்சோம் அதுக்குள்ள காபில எதையோ கலந்து எங்கள தூங்க வெச்சிட்டான் நாயி ” சிவா
“உம்”
“பத்திரமா இங்க வந்திடுங்க.யார்ட்டயும் அதிகமா பேச்சு குடுக்க வேணாம் மத்ததெல்லாம் நேர்ல பேசிக்கலாம்”
“உம்”
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஏதோ பொறி வலைக்குள் மாட்டிக் கொண்ட எலிகள் போலத் தான் இருந்தனர்.அடுக்கடுக்காய் விடைக்கு ஆதி கூட புலப்படாத பல கேள்விகள் மூளையை துளைத்தது.என்ன நடக்க போகிறது? என்ன நடந்தது? என்பதற்கான வரைபடத்தில் சிறுபுள்ளி மட்டுமே தென்படுகிறது.இரு பெண்களை கூடவே வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்வதே பெரிய வேலையாக இருக்கப் போகிறது.வண்டி லீ கிராண்ட் உண்வகத்தின் பிரமாண்ட கதவுகள் வழியே நுழைந்தது.வாசலில் சிப்பந்திகளிடம் பேசிக் கொண்டிருந்த ஜோனத்தன் கிறிஸ்டி வண்டி எண்ணைப் பார்த்ததும் கையில் சிரிப்பும் வாயில் பொக்கேவுமாக வந்து வரவேற்க நின்றான்.தூக்கம் கலைந்து எழுந்த ஐசுவர்யாவும்,ஹரிணியும் கேசத்தை சரி செய்து கொண்டு இறங்கினர்.மூவருக்கும் தனித்தனியே பொக்கே குடுத்து கிறிஸ்டி வரவேற்றான்.
“என் பேர் ஜோனத்தன் கிறிஸ்டி.உங்க ஈவண்ட் மேனேஜர்.பயணம் நல்லாயிருந்துதா?”
அவன் பேரைக் கேட்டதும் விக்கி உஷாராணான்.இவனிடம் அதிகம் பேச வேண்டாம் சிவா,சுதாகரைப் பார்த்த பின்பு இவனை கவனித்துக் கொள்ளலாம் என முடிவு செய்தான்.
“ரொம்ப நல்லாயிருந்தது.சரியான இடத்துக்கு கரக்டா வந்துட்டோம்” கிறிஷ்டியின் கண்களைப் பார்த்து அழுத்தமாக விக்கி சொன்ன இந்த பதிலை எதிர்பார்க்காத கிறிஷ்டி சற்று தடுமாறினாலும் புன்னகையை சுருக்காமல் சமாளித்துக் கொண்டான்.
“ஹரிணி,ஐசுவர்யா 2 பேரும் ஃப்ரெஷ் அப் பண்ணிட்டு ரெடியா இருங்க.நான் சிவாவ பாத்துட்டு வரேன்” இருவரிடமும் சொல்லிவிட்டு கிறிஷ்டியிடம் தங்கள் அறையைப் பற்றி கேட்டான்
“ஜெண்ட்சுக்கு 3 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 203, லேடீஸ் கு 2 வது ஃப்ளோர்ல டீலக்ஸ் சூட் 110” கிறிஸ்டி.
“சார் இது என் கணவர் பஷீர்.கொஞ்ச நாள் முன்னாடி காணாம போயிட்டார்.நேத்து இந்த ஊர்ல இருந்து தான் ஃபோன் பண்ணினார்.நீங்க எங்காவது பாத்திருந்தா தயவு செஞ்சு சொல்லுங்க சார் ” பஷீரின் புகைப்படத்தை கிறிஸ்டியிடம் கொடுத்து கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“அழாதீங்கம்மா நீங்க குளிச்சு ரெடி ஆயிடுங்க நானே உங்கள கூட்டிட்டு போறேன்.ஊரையே கவுத்து போட்டு கண்டுபிடிச்சுடலாம்” கிறிஸ்டியின் வார்த்தைகளால் விக்கி எரிச்சல் அடைந்தான் இருந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “கவலைப்படாத ஹரிணி சார் தான் சொல்லிட்டாருல்ல அவர புடிச்சா பஷீர் கிடச்ச மாதிரி தான்” என்றான்.கிறிஸ்டியின் முகம் சுருங்கியது.
மூவரும் உள்ளே சென்றதும் திட்டத்தை விரைவுபடுத்த அப்துல் நாசரைத் தேடி முதல் தளத்திற்கு கிறிஸ்டி ஓடினான்.
நண்பர்கள் மூவரும் மொட்டை மாடியில் சந்தித்தனர். ஹோட்டலின் சிப்பந்திகள் அனைவரும் கிறிஸ்டிக்கு நெருக்கம் என்பதால் பாதுகாப்பாக பேச மொட்டை மாடிக்கு வந்தனர்.
“என்னடா ஆச்சு? கிறிஸ்டிதான் கடத்துனானா?” விக்கி பதைபதைத்தான்.
“அவன் மட்டும் இல்ல இன்னும் 2 பேர் இருக்கானுங்க” மாடியின் விளிம்பில் அமர்ந்தபடி சிவா விளக்கமளிக்கத் தொடங்கினான்.
“அவந்தான்னு எப்பிடி கன்ஃபார்மா சொல்றீங்க?” விக்கி
“பஷீர் நமக்கு ஃபோன் பண்ணினான்ல அங்க விசாரிச்சப்ப தெரிஞ்சுது.நீ போலீசுக்கு சொல்லிட்டு தான வந்த?” சுதாகர்.
“சொல்லத்தான் போனேன் இன்ஸ்பெக்டர் வெளியூர்ல இருக்காராம் அதனால அங்க ஏட்டு கிட்ட சொல்லிட்டு வந்தேன் அவங்க எதும் பெரிசா எடுத்துகிட்ட மாதிரி தெரில”
விக்கியின் பதிலில் இருவரும் ஏமாற்றமடைந்தனர்.
“ம்… அப்ப நாம இங்க லோக்கல் போலீசுலதான் பேசணும்.ஹரிணிக்கு சொல்லிட்டியா?” சிவா.
“ம்… அப்புறம்… அப்படியே ஒரு கத்தியையும் அவ கையில குடுத்துட்டம்னா நேரா போயி கிறிஸ்டிய குத்தி கொன்னுடுவா அப்புறம் எல்லா காரியமும் வெளங்கிடும்.அவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிடக் கூடாதுன்னு தான் எதும் சொல்லல.ஆனா பாவம்டா அவ அந்த நாய்கிட்ட போயி கெஞ்சிட்டிருந்தா ” விக்கி.
“சரி இப்ப நாம என்ன செய்யறது?” சுதாகர்
“நேரா போலீசுக்கு போறோம் இந்த பயல அப்படியே பொளக்கறோம்” விக்கி
“லூசு மாதிரி பேசாதடா, இவன் கூட இன்னும் 2 பேர் இருக்கானுங்க.பஷீர் வேற எங்க இருக்கான்னு தெரில,அவன எதுக்காக கடத்திருக்காங்கன்னும் தெரில.நாம போலீசுக்கு போனத தெரிஞ்சு பஷீர ஏதாவது பண்ணிட்டாங்கன்னா?.மொதல்ல பஷீர கண்டுபிடிக்கனும் அப்புறம் இவனுங்கள கவனிச்சுக்கலாம்” சிவாவின் தெளிவான திட்டத்துக்கு இருவரும் தலையாட்டினர்.

அதே நேரம் பெண்களின் அறையில்….

“இந்நேரம் சிவா பஷீர் இருக்குற எடத்த கண்டுபிடிச்சுருப்பாரு.உதவிக்கு கிறிஸ்டி வேற இருக்காரு அப்புறமென்ன எல்லாம் நல்லபடியா முடியும் ஹரிணி” ஜன்னல் வழியாக சாலையை பார்த்துக் கொண்டிருந்த ஹரிணியிடம் பேச்சுக் கொடுத்தாள் ஐசுவர்யா.
கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் கதவருகே சென்றனர்.
“யாரு?” ஐசுவர்யா.
“நாந்தான் கிறிஸ்டி”
                                 -காத்திருங்கள்

நாங்க தான் ஃபர்ஸ்ட்


ஆத்தா ஆட்சியில் என்ன அறிவுப்பு செய்தாலும் நாங்கள் தான் அதை முதலில் செய்தோம்னு அடிச்சு விட்ற தலைவர் நாளைக்கு இப்படி அறிக்கை விட்டாலும் விடலாம்.

வெடித்த அணுஉலை-தவிக்கும் அரசு.



ஒரு அணுஉலை வெடித்ததால் தவித்துக் கொண்டிருக்கிறது அரசு.மக்களுக்காக நம்ம அரசாங்கம் தவிக்குதா என்று ஆச்சரியப்பட வேண்டாம் நடப்பது இங்கே அல்ல ஜப்பானில்.கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் புகுஷிமா டாய்ச்சி அணு உலை விபத்துக்குள்ளானது நம் அனைவருக்கும் தெரியும்.அந்த விபத்திலிருந்து தான் உலக நாடுகள் தங்களுடைய அணுசக்தி தொடர்பான கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்.இந்த விபத்தை முன்னிட்டு தான் கூடங்குளத்திலும் அணு உலை வேண்டாம் என்று அனுதினமும் போராட்டங்களும்,ஆர்ப்பாட்டங்களும்,உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன.சரி அந்த அணுஉலை விபத்திற்கு பிறகு என்ன நிலை என்பதை சற்று பார்ப்போம்.

ஒரு அணுஉலை சரியாக செயல்பட அதைச் சுற்றி சீரான தட்பவெட்பம் தேவை அதற்காகத் தான் அணுஉலையை சுற்றி குளிர்ந்த நீர் தொடர்ந்து பாய்ச்சப்பட்டு சீரான சூழ்நிலை பராமரிக்கப்படும்.ஜப்பானில் மார்ச் மாதம் அடித்த சுனாமி முதலில் உடைத்தது இந்த குளிர்நீர் பகுதியைத் தான்.மேலும் மின்சார வசதிகளும் தூள்தூளானது.இதனால் தான் கட்டுப்படுத்த முடியாத அணுவினை வெடித்து சிதறியது.அப்போது ஜப்பான் அரசு 20 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றியது சில நாட்கள் கழித்து 30 கி.மீ சுற்றளவில் உள்ள மக்களையும் அப்புறப்படுத்தியது.அந்த பகுதியின் மண் உட்பட அனைத்து விடயங்களும் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானது. 

பிறகு நாள் கணக்காக பொறியாளர்களும், உழைப்பாளிகளும் உயிரைப் பணயம் வைத்து கதிர்வீச்சு அளவைக் குறைக்க படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.தற்சமயம் ஓரளவு கதிர்வீச்சை குறைக்கவும் செய்துள்ளனர்.வேலை முடியவில்லை மக்களே இன்னும் அந்த இடத்தை பழைய நிலைக்கு கொண்டுவர 40 வருடங்கள் ஆகும் என அந்நாட்டு அரசே அறிவித்துள்ளது.அது மட்டுமல்ல நிலைமையை சீராக்க இனிமேல் தான் புதிய புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.சரி இதே போன்றதொரு விபத்து நம் நாட்டில் முக்கியமாக கூடங்குளத்தில் நடந்தால் என்னாகும்? சற்று கற்பனைகளை விரித்தால் கொடூரமான காட்சிகள் தான் தாண்டவமாடுகிறது. அணுஉலை வெடித்தவுடன் நடவடிக்கை வருகிறதோ இல்லையோ நஷ்டஈடு தான் வரும். மக்களைக் காக்கும் முன் அணுஉலையில் பணி செய்யும் வெளிநாட்டினர் இலவச பயணச்சீட்டில் அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதெல்லாம் கூட பரவாயில்லை ஜப்பான் அரசைப் போல இந்திய நாட்டு அரசாங்கம் அவ்வளவு வேகமாக நிலைமையை சீர் செய்யுமா? கண்டிப்பாக இல்லை. 40 ஆண்டு காலம் ஒரு தரிசில் நிலத்தை கதீர்வீச்சு இல்லாத இடமாக மாற்ற செலவு செய்யும் காசுக்கு காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தலாம் என கொள்கை முடிவெடுத்து கூடங்குளத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்துவிட்டு தமிழ்நாட்டுக்கு டெல்லியில் இருந்தே அஞ்சலி செலுத்திவிடும். சரி நடக்கப் போவது இருக்கட்டும் அணுஉலையில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா என வினவினால் நிச்சயமாக உண்டு என சொல்லத்தான் முடிகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் விளைவுகளை நாம் இன்றும் மறக்க முடியாது.அத்தகைய ஒரு சுனாமி தான் ஜப்பான் அணுஉலையை புரட்டிப் போட்டது.2004 ஆம் ஆண்டுக்கு முன் சுனாமி என்றால் என்னவென்றே இங்கு பலருக்கும் தெரியாது வந்த பின்பு பட்ட அவஸ்தை சொல்லிமாளாது.அத்தகையதோர் நிலநடுக்கமோ சுனாமியோ மீண்டும் வரவே வராது என அப்துல் கலாம் உட்பட எந்த விஞ்ஞானியாலும் அடித்துச் சொல்ல முடியாது என்பது தான் உண்மை.அதை விட வீரியமான நிலநடுக்கங்கள் இந்தியாவில் வர அதிக வாய்ப்புள்ளது என புவியியலாளர்கள் எச்சரித்துள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. 

அடுத்து தீவிரவாதம் கடல் வழியே வந்து மும்பை நகரத்தை துவம்சம் ஆக்கியது போல கடல் அருகே உள்ள அணுமின் நிலையங்களை வெடிக்கச் செய்தால் நம் நிலைமை என்ன? அணுஉலைக்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என நினைத்தோமானால் தன் பாராளுமன்றத்தையே தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க முடியாத சூழ்நிலை தான் இந்திய உளவுத் துறையின் லட்சனம். சரி நம் அப்துல் கலாம் சொல்வது போல நவீன தொழில்நுட்பத்துடன் உருவான இந்த அணுஉலையில் உலகிலேயே இரண்டாவது முறையாக (முதல் உலை சீனாவில் உள்ளது) ”கோர் கேட்சர்(core catcher)” எனப்படுகிற தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளதாம். அந்த கோர் கேட்சர் என்ன தெரியுமா? வழவழவென இருக்கும் செராமிக் கான்கிரீட் தான் இந்த அதிநவின தொழில்நுட்பம்.விபத்து ஏற்பட்டால் இந்த கான்கிரீட் அப்படியே அணுவின் மீது விழுந்து கதிரியக்கத்தை வெளியேற விடாதாம்.இந்த தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.எரிகிற நெருப்பை பரோட்டா மாவைப் போட்டு அணைப்பது போன்றது தான் இது.அணுவை இந்த தொழில்நுட்பம் தற்காலிகமாக மூடிமறைக்குமே தவிர அணு இயக்கத்தை நிறுத்திவிடாது. நெருப்பு எல்லை மீறினால் எந்த தொழிநுட்பத்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாது.அவ்வாறு அணுவைக் கட்டுப்படுத்தலாம் என யாராவது சொன்னால் அது சூரியனை சுவிட்ச் ஆஃப் செய்யலாம் என சொல்வதைப் போலத் தான்.

இந்தியாவின் மின்சாரத் தேவைக்கு அணுமின்சாரம் அத்தியாவசியம் அது இல்லாவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும் என பதறுவது வடிகட்டிய கயமைத்தனம். உண்மையை சொன்னால் மரபு வழி மின்சாரங்களான சூரிய ஒளி,காற்று ஆகியவற்றை இந்திய அரசு எந்த அளவுக்கு பயன்படுத்த முனைந்திருக்கிறது என பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ஒரே ஒரு அணுஉலையை கட்டி முடிக்க 15 முதல் இருபது வருடங்கள் வரை ஆகின்றது.அதற்கு 15,000 முதல் 20,000 கோடி வரை செலவு செய்யப்படுகிறது.இந்த காலகட்டத்தில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறுவதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.ஒரு சராசரி புத்தகத்தை விட சற்று சிறியதாக உள்ள ஒரு சூரியஒளி செல்லிலிருந்து 45 மில்லி வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது.இதை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் செழுமைப்படுத்தினால் நாட்டின் பெருவாரியான மின்சாரத் தேவைகளை அளவில்லாத,மாசற்ற சூரியஒளி மூலமே பெற்றுவிடலாம்.வருடந்தோரும் உட்சபட்ச வெப்பத்தை உள்வாங்கும் தார் பாலைவனம் இதற்கு ஒரு வரபிரசாதம்.ஆனால் இத்தகைய முயற்சிகளுக்கு அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.யார் என்ன சொன்னாலும் என்ன உறுதிப்பாடு கொடுத்தாலும் அணுவினை என்பது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.அத்தகைய விபத்திலிருந்து நம்மை காத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது என்பதே நிதர்சனம்.மேலும் பல அணு உலைகளை நிறுவப்போவதாக அரசு அறிவித்துள்ளது.அவற்றை எல்லாம் தடுத்து நிறுத்தி, செயல்படும் அணுஉலைகளை செயலிழக்கச் செய்ய மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும்.
அணுஉலை அவசியம் வேண்டும் என தூபம் போடும் தினமலர் போன்ற போலி தேசியவாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நம் சந்ததிகளை காக்க மத்திய அரசை தீவிரமாக எச்சரிக்க வேண்டும்.

பின்குறிப்பு: எனக்கும் அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவ்வப்பொழுது ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டும் பார்ப்பேன்.